Saturday, June 18, 2011

பிருந்தாவனம்...



தஞ்சாவூரில் தோட்டங்களுடன் கூடிய தனித்தனி வீடுகளாகத்தான் இருக்கும். தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, முருங்கை, கறிவேப்பிலை போன்ற மரங்கள் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும். சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை போன்றவை சில வீடுகளில் இருந்தன.

செம்மண் பூமி என்பதால் எதை வைத்தாலும் நன்றாக வளர்ந்து, பூத்து, காய்த்துக் குலுங்கிவிடும்.

நாங்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது, வலது மூலையில் நந்தியாவட்டை மரமும், பின்புறத்தில் ஆயுள் முடிந்த இரண்டு வாழை மரங்களும்தான் இருந்தன. எங்கள் வீட்டில் அனைவருக்குமே செடி, கொடி, மரங்கள் மீது தீராத ஆர்வம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டத்துடன் கூடிய வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்திருந்தது. குப்பைகள், முள்செடிகள் எல்லாம் அப்புறப்படுத்தி, நான்கு தென்னங்கன்றுகள் வாங்கி  நடப்பட்டன.

அப்பாவின் நண்பர்கள் எல்லாம், ‘எதுக்கு வாடகை வீட்டில் தென்னை மரங்களை எல்லாம் நடறீங்க? கொஞ்ச வருஷத்துல காலி பண்ணிட்டுப் போயிடுவீங்க? யாரோ அனுபவிக்கப் போறாங்க. ஏதாவது காய்கறிச் செடி, கொடிகள் வச்சா, நீங்களே அனுபவிக்கலாம்என்றார்கள்.

‘நீங்க சொல்றதில் நியாயம் இருக்கு. ஆனா எங்களுக்கு மரம் வளர்க்கறதுலதான் ஆர்வம். அதை யார் அனுபவிச்சாலும் வருத்தமில்லைஎன்றார் அப்பா.

வாழைக் கன்று, கறிவேப்பிலைக் கன்று, கொய்யா, பப்பாளி என்று வரிசையாகக் குடிவந்தன. ‘நிறையத் தண்ணீர் ஊற்றினால்தான் தென்னை நல்லா காய்க்கும்என்று யாரோ சொல்ல, குடம் குடமாகத் தண்ணீரைக் கொட்டினோம்.

விவசாயப் பண்ணையில் இருந்து கத்தரி, வெண்டை, மிளகாய், பாகற்காய், புடலை, தக்காளி, பூசணி என்று விதைகள் வாங்கி வந்து, ஊன்றி வைத்தோம். பொன்னாங்கண்ணி (இது வயலட்டும் பச்சையும் கலந்த நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும், சாப்பிடவும் செய்யலாம்!), கொத்தமல்லி, புதினா என்று ஒருபக்கம் கீரைகளும் வளர ஆரம்பித்தன.

விதை ஊன்றியதில் இருந்து தினமும் கவனிப்போம். நான்கு நாள்களில் முளை தெரியும். கொடிகள் வளரும் வேகம் மலைப்பைத் தரும். முதல்நாள் பார்த்தது போல மறுநாள் இருப்பதில்லை. நேற்றுப் பிஞ்சாகத் தெரிந்த பாகற்காய், இன்று பறிக்கும் பதத்துக்கு வந்திருக்கும். (இரவு முழுவதும் விழித்திருந்து செடி, காய் வளர்வது, பூ மலர்வது எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் உண்டு.)

கொடிகள் வளருவதற்கு நேர் எதிராகக் கத்தரி, வெண்டை போன்றவை மெதுவாக வளரும். குறைவாகவே காய்க்கும். இரண்டு கத்தரிக்காய்கள் காய்த்தாலும், குழம்பில் வேறு காய்களைச் சேர்க்காமல் சமைத்து, ஆளுக்கொரு துண்டு  வைத்துவிடுவார் அம்மா.

நாமே விதை ஊன்றி, தண்ணீர் ஊற்றி வளர்த்து, காயைப் பறித்து, சமைத்துச் சாப்பிடும் சந்தோஷத்துக்கு நிகர் வேறில்லை. சொந்த உழைப்பில் விளைவித்த பொருளுக்குக் கூடுதல் சுவை இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.

கத்தரி, வெண்டை போன்றவை மிகக் குறைவாகக் காய்த்தாலும் பாகற்காய், புடலங்காய், தக்காளி, பூசணி போன்றவை காய்த்துத் தள்ளின. அதுவும் சிறிய பாகற்காயும் பெரிய பாகற்காயும் தினமும் பறிக்கும் அளவுக்குக் காய்த்தன. பாகற்காய் பிரியர்கள் என்றாலும் தினமும் சாப்பிட முடியாது. அக்கம்பக்கம், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குக் கொடுத்து விடுவோம்.

சிறிய பாகற்காய் ஆழம் குறைந்த குழியில்தான் பயிரிட்டிருந்தோம். தினமும் காலை எழுந்ததும் சின்னப் பாகற்காய்களைப் பறிப்பதற்காகக் கொடியோடு கொடியாக ஐக்கியமாகியிருப்போம்.

‘பாம்பு ஏதாவது இருக்கப் போகுது... செடி கிட்ட இப்படிப் போய் உட்காராதீங்கஎன்று சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா. ஆனால் எங்கள் காதில் அது விழாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் பாகற்காய் கொடியையே வெட்டி எறிந்துவிட்டார்கள். கண்ணீரே வந்துவிட்டது.

நண்பர்கள் வீடுகளில் இருக்கும் பூச்செடிகள், குரோட்டன்ஸ்களை எங்களிடம் இருக்கும் செடிகளைக் கொடுத்து, பண்டமாற்று செய்துகொள்வோம். இதனால் எங்கள் தோட்டத்துக்கு நிறைய தாவரங்கள் குடிவந்தன. நடுவில் வெள்ளை நிறப் பூக்கள் கொண்ட செடிகள். அடுத்த ரவுண்ட் வயலட் வண்ணப் பூக்கள். அதற்கடுத்த ரவுண்ட் வெள்ளை... ஒருபக்கம் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை நிற ரோஜாக்கள், சாமந்திப் பூக்கள், அடுக்கு மல்லி, செம்பருத்தி... இப்படி எங்கள் தோட்டத்தின் அழகு கூடிக்கொண்டே சென்றது.  

நூற்றுக்கு மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகளை அறிமுகம் செய்து வைத்ததும் எங்கள் தோட்டம்தான். தோட்டத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. படிப்பது, எழுதுவது, சகோதரிகளுடன் சண்டை வந்து புலம்புவது எல்லாம் மரங்கள், செடி கொடிகளுடன்தான்!  

எங்கள் தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே அப்பாவின் நண்பர்கள் தினமும் வருவார்கள். ரசிப்பார்கள். ‘பிருந்தாவனத்துக்கு வந்துட்டுப் போற மாதிரி இருக்கு. செடிகள் மேல இருக்கற உங்க ஆர்வத்துக்குப் பரிசா இந்த வீட்டையே நீங்க வாங்கிட்டீங்கஎன்பார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தென்னை, மா, பலா, கொய்யா, சாத்துக்குடி மரங்கள் எல்லாம் காய்க்க ஆரம்பித்திருந்தன.

அம்மாவுக்கு ஒரே வருத்தம். ‘கஷ்டப்பட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்த பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போயிட்டாங்க. அவங்களால பலனை அனுபவிக்க முடியலை...

ஒவ்வொரு வீட்டுக்கும் பார்சலில் பலாப்பழம் அனுப்பிவைக்கப்பட்டன.

‘அவங்க பணம் கட்டி இங்கே அனுப்பி, அதைப் போய் வாங்கிட்டு வந்து சாப்பிடறதுக்கு ஆகற செலவுல, இங்கேயே ஒரு பழத்தை வாங்கிச் சாப்பிட்டுடலாம்... என்றனர் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்.

அவர்களுக்கு என்ன தெரியும்!



.

         

Monday, January 24, 2011

ஹாஸ்டல் கதைகள் - 5 தண்ணீர்... தண்ணீர்...


இன்று வரை ராமநாதபுரத்தை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்னை குடி தண்ணீர். சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் மோசமான பழக்கம் எனக்கு இருந்தது.  ஹாஸ்டலில் சேர்ந்த முதல் நாள் தண்ணீர் கேனுடன் சாப்பிடச் சென்றேன். என்னை எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள். சிறிது நேரத்தில் எல்லோரும் ஆளுக்கு ஒரு வாய் குடித்துவிட்டு, வெறும் கேனைத் திருப்பித் தந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன், உணவறையில் தண்ணீர்ப் பானையும் இல்லை; யாரும் தண்ணீர் கேனையும் கொண்டுவரவில்லை என்று! கனிமொழி அக்காவிடம் கேட்டேன்.

“நீ தங்கத்தைக் கேட்டால் ஒருவேளை யாராவது கொடுத்துடலாம். ஆனா, தண்ணியைக் கேட்டா ஒருத்தியும் தரமாட்டாளுக. உன்கிட்ட வாங்கிக் குடிச்சவங்க கூடத் தரமாட்டாங்க. இனிமே தண்ணியைக் கொண்டு வர்ற வேலை எல்லாம் வச்சுக்காதே...’

‘என்னக்கா, இப்படிச் சொல்றீங்க! எனக்கு விக்கல் எடுத்தா...?’

“அதெல்லாம் எடுக்காது. நாங்க எத்தனை வருஷமா இப்படிச் சாப்பிட்டுட்டு வர்றோம். ரொம்ப விக்குச்சுனா சட்னி, ரசம், மோர் எதையாவது குடிச்சுக்க வேண்டியதுதான்!’

அதிர்ந்து போனேன்.

வாரத்துக்கு ஒருமுறை லாரியில் தண்ணீர் வரும். சமையலுக்குப் பிடித்தது போக, மீதித் தண்ணீரைக் குடிப்பதற்குப் பிடித்துக்கொள்ளலாம். அடுத்த வாரம் வரை தினமும்  மூன்று வேளைக்கு ஒரு மூடி வீதம்  தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டிலிருந்து வரும் சில தாராள மனம் படைத்த மாணவியர், தோழியராகக் கிடைத்தால், கூடுதலாகத் தண்ணீரைக் குடிக்கும் பாக்கியம் கிடைக்கலாம்!
சில வாரம் லாரி தண்ணீர் வராது. அப்போது நிலைமை பாலைவனத்தில் வசிக்கும் அனுபவத்தைத் தந்துவிடும்.  கனிமொழி அக்காவுக்கு சில ஆசிரியர்களிடம் நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் அறைகளில் இருந்து தண்ணீர் வாங்கித் தருவார். அதுவும் வாய்க்காதவர்கள் கிணற்றுத் தண்ணீரை வழியின்றி குடித்து, அவதிப்படுவார்கள்.

எதை வாங்கி வருகிறார்களோ இல்லையோ, பார்வையாளர்கள் தினத்தில், பார்க்க வருகிறவர்கள் கண்டிப்பாக கேன் நிறைய தண்ணீர் கொண்டுவருவார்கள்!

லாரி தண்ணீர் வராவிட்டால் சமைப்பது எப்படி?

சனி, ஞாயிறாக இருந்தால் பகலில் எப்போது வேண்டுமானாலும், பள்ளி நாள்களாக இருந்தால் மாலையிலும் அவரவர் வாளியைத் தூக்கிக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். பதினைந்து நிமிட  தூரத்தில் இருக்கும் தேவாலயத்தில் தண்ணீர்ப் பிடித்து வர வேண்டும். பெரிய மாணவியர் வாளி நிறைய தண்ணீர் எடுத்து வருவார்கள். நானும் அமுதாவும் முக்கால் வாளியை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்தபடி வருவோம். நடக்க நடக்க தண்ணீர் தளும்பி, கீழே போனது போக எஞ்சிய தண்ணீரைத்தான் பயன்படுத்தமுடியும்! 

குடி தண்ணீர் தான் இப்படி என்றால்... கிணற்று நீர்?

பம்ப்செட் போட்ட பெரிய கிணறு. அந்தக் கிணற்றுக்கு அருகில் பெரிய தொட்டி ஒன்று. ஐந்து மணிக்கு மோட்டார் போடுவார்கள். தண்ணீர் தபதபவென்று கொட்டும். அந்த அரைமணி நேரத்துக்குள் குளித்து, துவைத்து விட வேண்டும். சில நேரங்களில் பதினைந்து நிமிடங்களிலேயே தண்ணீர் நின்று விடுவதும் உண்டு. இருட்டு நேரத்தில், மெல்லிய விளக்கு வெளிச்சத்தில், கடமையே கண்ணாக இருந்தால் மட்டுமே காரியத்தில் வெற்றி பெற முடியும்!  இல்லாவிட்டால் யாரிடமாவது கயிறும் வாளியும் வாங்கி, தண்ணீர் இறைக்க வேண்டும். ராட்டினம் இல்லாமல் தண்ணீர் இழுக்கத் தெரியாத என் போன்றவர்களுக்கு பம்ப்செட் விட்டால் வேறு வழியில்லை. எப்போதாவது மழை பெய்தாலும் நனைந்துகொண்டே குளிர்த்து முடிக்க வேண்டும்.

Wednesday, January 19, 2011

ஹாஸ்டல் கதைகள் - 4 உணவும் வேலைப் பங்கீடும்

காலை உணவு பெரும்பாலும் இட்லிதான். ஒரு நாள் தேங்காய் சட்னி, மறுநாள் தக்காளி சட்னி. மாதத்துக்கு இரண்டு தடவை தோசை. மிக அரிதாக உப்புமா.

கோஸ், பீன்ஸ், கேரட், அவரை, பீட்ரூட்  என்று ஏதாவது இரண்டு பொரியல்கள், சாம்பார், ரசம், மோர் மதிய உணவு.   இதில் இரண்டு நாள்கள்  மட்டன் கிரேவி, அப்பளம் இருக்கும். மட்டன் சாப்பிடாதவர்களுக்கு இரண்டு அப்பளங்கள். இரண்டு  நாள்கள் கீரை, முட்டை, புளிக்குழம்பு, ரசம், மோர்.

மாலை (இரவு) உணவு சாதம், ரசம், ஒரு காய்.

நான் விடுதியில் சேர்ந்த ஒரு மாதம் வரை மிகவும் கஷ்டப்பட்டேன். கழுநீர் தண்ணீர் போன்ற காபியும் புளிப்பேறிய இட்லியையும் பார்க்கும்போதே  அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று தொண்டைக்கு வந்து, வாந்தி எடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும். கண்கள் கலங்கி நிற்கும். கூடவே அம்மாவின் அற்புதமான சமையலும், அதை உதாசீனப்படுத்திய காட்சிகளும் கண் முன்னே விரியும். சட்டென்று இரண்டு சொட்டு கண்ணீர் வெளியே வந்துவிடும். சட்னி பிடிக்கவில்லை என்று, இட்லிப் பொடியுடன் சென்றாலும், அந்தப் புளிப்புக்குப் பொடி விஷமாக மாறியது போல ஒரு கசப்பைத் தரும். சாப்பிடாமல் இருக்கவும் முடியாது. இட்லிகளை வாங்கி, கனிமொழி அக்காவிடம் கொடுத்துவிட்டு, ஒரே ஓர் இட்லியுடன் அமர்ந்திருப்பேன். சிறிய தட்டில் பொடி இருக்கும். ஓரிரு துண்டுகளைக் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு, சிறிய தட்டில் இட்லியை வைத்து, பெரிய தட்டால் மறைத்தபடி சென்று, கொட்டி விடுவேன்.

மதியம் உணவு சாப்பிடும்படி இருக்கும். ஆனால் எனக்குத்தான் அதிலும் பிரச்னை. கோஸ், புடலங்காய், பீர்க்கங்காய், சௌசௌ... இவை எல்லாம் எனக்குப் பிடிக்காத காய்கள். ஆனால் இவைதான் பெரும்பாலும் இருக்கும். காலையில் சாப்பிடாததால், மதியம் பசி அதிகமிருக்கும். பசிக்குச் சாப்பிடும் அருமை அப்போதுதான் புரிந்தது. சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, ரசத்தைக் குடித்துவிட்டு எழுந்துவிடுவேன்.

இரவு உணவைப் பொறுத்தவரை என்னை அதிகம் இம்சிக்கவில்லை. வாரத்தில் ஒருநாள் சௌசௌ கூட்டை மட்டும் அமுதாவிடம் தள்ளிவிடுவேன். ஊறுகாய் வைத்து சமாளித்துக்கொள்வேன். மறுநாள் அமுதாவுக்குப் பிடிக்காத சேனைக்கிழங்கு வறுவல் எனக்கு வந்து விடும்.

எங்கள் ஹாஸ்டலில் மூன்று பிரிவுகள் இருந்தன. ஒன்று நான் சாப்பிடக்கூடிய, மாதக் கட்டணம் ரூ.120/- . இன்னொன்று ரூ.90/-. (இதில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் இட்லி, மற்ற நாள்களில் சுடு கஞ்சி. மதியம் ஒரே ஒரு காய். வாரத்துக்கு ஒரு நாள் மட்டன், ஒரு நாள் முட்டை. மாலை உணவு எங்ககளைப் போன்றதே.) முப்பது ரூபாய் அதிகம் கொடுத்தால், ஓரளவு நல்ல உணவு கிடைத்துவிடும். ஆனால் அதைக் கூட கொடுக்க முடியாதவர்கள் அதிகம் இருந்தனர். இதில் அக்கா, தங்கை இருவர் இருந்தால், ஒருவர் இந்த மெனுவிலும் இன்னொருவர் அந்த மெனுவிலும் இருக்கக்கூடிய விநோதம் எல்லாம் இருக்கும்! மூன்றாவது வகையில் சற்றுக் குறைவான எண்ணிக்கையில் மாணவியர். ஆதரவு அற்றவர்கள், மிக மிக ஏழைமையில் இருக்கக்கூடியவர்கள்.   

*

ஹாஸ்டலில் பெருக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற வேலைகளை மாணவியரை வைத்தே செய்துவிடுவார்கள். ஆரம்பத்தில் இந்த வேலைகளைச் செய்யும்போது கோபமாக வரும். ஆள் வைத்து செய்துகொள்ளாமல், மாணவியரை இப்படி வேலை வாங்குகிறார்களே என்று! அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளைப் பெருக்கிவிட்டு, பிறகுதான் படிக்க வரவேண்டும். அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இல்லை. ஆனால் இந்தப் பரிமாறுதல்?

நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட, 9 -12 வகுப்பு மாணவியர்தான் பரிமாறும் வேலைகளைச் செய்ய வேண்டும். உணவறைக்கும் சமையலறைக்கும் தூரம் அதிகம். அங்கிருந்து அவரவர் குழு ஆள்களுடன் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை எடுத்து வர வேண்டும். தட்டை உணவறையில் வைத்துவிட்டு, உணவுகளைக் கொண்டு வர வேண்டும். அப்படி நான் போவதற்குள் இட்லி, பொரியல், முட்டை, கீரை போன்ற சிறிய பாத்திரங்கள் எல்லாம் ஏற்கெனவே போயிருக்கும். சாதம், குழம்பு, ரசம், மோர்  போன்ற ஏதோ ஒன்றைப் பரிமாறிவிட்டு, அந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்துவிட்டு, உணவறைக்கு வந்து சாப்பிட வேண்டும். எப்படி மற்றவர்கள் இவ்வளவு சாமர்த்தியமாக இருக்கிறார்கள் என்று நான் யோசித்துப் பார்த்தும் சூட்சுமம் புரியவில்லை.

கனிமொழிதான் என்னைக் கவனித்து அந்த டெக்னிக்கைச் சொல்லித் தந்தார்.

“நீ ஒன்பதாம் வகுப்பு படிக்கிற சின்னப் பொண்ணு. பெரிய பாத்திரங்கள் எல்லாம் தூக்காத. இனிமேல் நீ பரிமாறுகிற வாரத்தில் நானே தட்டை எடுத்துட்டு வந்துடறேன். நீ பெல் அடிச்சதும் நேரா கிச்சனுக்குப் போயிரு. ஈஸியா என்ன இருக்கோ, அதை மத்தவங்களோட சேர்ந்து எடுத்துட்டு வந்துரு. சாதம் போடறதுக்குள்ள உன் வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்’ என்றார்.

அடடா! அதற்குப் பிறகு நானும் அதுபோலச் செய்தேன். அப்படியும் என்னை விட சாமர்த்தியசாலிகள் எப்படியோ சில நேரங்களில் என்னை முந்திவிடுவார்கள்! 

பெரும்பாலும் 11, 12 படிப்பவர்கள்தான் பரிமாறுவார்கள். நாங்கள் எல்லாம் தட்டுகளை வாங்கிக் கொடுக்கும் பணியைத்தான் செய்வோம். இப்படி அவர்கள் அந்த வேலையைக் கையில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. எல்லோருக்கும் பரிமாறிய பிறகு, மீதி எது இருந்தாலும் இன்னொரு ரவுண்ட் பரிமாறிவிடலாம். அப்படிப் பரிமாறும்போது யார் பரிமாறுகிறாரோ அவருடைய தட்டில் இருந்துதான் இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும்! காய்களைக் கண்டுகொள்ளாமல் விடும் மற்றவர்கள், மட்டன் பரிமாறும்போது மட்டும் எரிச்சலைக் காட்டுவார்கள். ஆனாலும் அவர்கள் பரிமாறும்போதும் இப்படித்தா ன் செய்வார்கள்.

என்னைப் போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர, மற்றவர்கள் யாரும் உணவு பிடிக்கவில்லை என்று கொட்ட மாட்டார்கள். இட்லி பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே, நான்கு இட்லிகளைச் சாப்பிட்டு விடுவார்கள். எஸ்தர், தேன் மொழி போன்றவர்கள் தட்டு நிறைய இட்லிகளை வைத்து, மிகவும் ரசனையாக சட்னிக்குள் நனைத்து, உறிஞ்சி சாப்பிடுவார்கள்.
இவர்களைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஹாஸ்டலில் இருக்கக்கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமங்களிலிருந்து,  ஏழைமையில்
வந்தவர்கள் என்று பிறகுதான் புரிந்தது.

ஹாஸ்டலில் எந்த வித பாகுபாடுமின்றி ஒரு விஷயம் எல்லோரிடமும் இருந்தது. அது சத்து மாவு. மாதம் முழுவதும் நொறுக்குத் தீனிகளை வைத்திருக்க முடியாது.  கடையில் தின்பண்டம் வாங்கிச் சாப்பிடுவதற்கு வசதியும் இருக்காது.  இந்தச் சத்துமாவை மாதக்கணக்கில் வைத்திருக்கலாம். வேர்க்கடலை, பச்சைப்பயறு, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் என்று அவரவர் பக்குவத்துக்கும் வசதிக்கும் ஏற்ப சத்துமாவு வைத்திருப்பார்கள். சிலர் தண்ணீரில் பிசைந்து உருண்டையாகச் சாப்பிடுவார்கள். சிலர் ஒரு கிண்ணத்தில் கொட்டி, அவ்வப்போது ஒரு ஸ்பூன் மாவை வாயில் போடுவார்கள். இது சில நேரங்களில் புரை ஏற்றிவிடும் என்பதால், கொஞ்சம் எண்ணெய் கலந்து சாப்பிடுவார்கள்.  தேசிய உணவு போல சத்துமாவுதான் ஹாஸ்டல் வட்டார உணவு!

Wednesday, December 29, 2010

தமிழன் என்று சொல்லடா!


மலேஷியாவுக்குச் சென்றதும் அங்குள்ள நண்பர்கள் பத்து மலையை முதலில் பார்க்கும்படி வற்புறுத்தினார்கள். உலகிலேயே மிக உயரமான முருகனை  உருவாக்கிய பெருமிதம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. பிரதான சாலையை ஒட்டி அமைந்திருந்தது கோயில். சற்றுத் தூரத்திலேயே தங்க நிறத்தில் ஜொலித்த முருகன் கண்களில் பட்டார்.  அகலமான நீண்ட தார்ச்சாலைகளை தவிர்த்து,  பத்து மலையைப் பொருத்தவரை வெளிநாட்டில் இருக்கக்கூடிய உணர்வு இல்லை. கோயில் அருகே சென்றதும் தமிழ் நாட்டுக் கோயிலுக்குள் நுழைந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்தது.

நுழைவாயிலுக்கு முன்பு ஏகப்பட்ட கார்கள் குறுக்கும் நெடுக்குமாக, ஓர் ஒழுங்கின்றி நின்றுகொண்டிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்களுக்கு இடையில் தள்ளு வண்டி கடைகள் இருந்தன. பத்து நாள்களுக்கு முன்புதான் தைப்பூசம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்தக் கொண்டாட்டங்களின் மிச்ச சொச்சம் இன்னும் இருப்பதால் இப்படி இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்கள். கார்களில் இருந்து இறங்குபவர்கள் அப்படியே இருக்கும் இடத்தில் காரை வைத்து விட்டு உள்ளே செல்கிறார்கள். மணிக்கணக்கில் பிரார்த்தனை முடித்துவிட்டு வருகிறார்கள். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு, காருக்கு அருகில் வந்து, நடு ரோட்டில் உடை மாற்றுகிறார்கள். 

நுழை வாயிலில் இருந்து வரிசையாகக் கடைகள். பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள், இளநீர் கடைகள், ரோஸ், மெஜந்தா, பச்சை வண்ணங்களில் மைசூர் பா, முறுக்கு, ராட்சஷ சைஸில் லட்டு, மிக்சர் என்று ஏகப்பட்ட தின்பண்டங்கள். ஒரு பக்கம் ’வேலய்யா வேலய்யா’ என்று பில்லா படப் பாடல் கந்த சஷ்டி ரேஞ்சுக்குப் பக்தியை ஊட்டிக் கொண்டிருந்தது! இரண்டு, மூன்று ஹோட்டல்கள் இருந்தன. இட்லி, இடியாப்பம், பூரி, தோசை, காபி, டீ என்று இங்கு கிடைக்கும் அத்தனை உணவுகளும் அந்த ஹோட்டல்களில் கிடைக்கின்றன. கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.

முருகனை நெருங்க நெருங்க பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. 140 அடி உயரத்தில் முருகன் சாந்தமாக நின்றுகொண்டிருக்கிறார். இந்திய மதிப்புப்படி  2.4  கோடி ரூபாய் இந்தச் சிலைக்குச் செலவாகியிருக்கிறது. முருகனுக்குப் பின்புறம் பத்து மலை குகை இருக்கிறது.  272  படிகளில் ஏறி அந்தக் குகைக்குச் செல்ல வேண்டும். வழியில் குரங்குகளைக் கொஞ்சம் சமாளிக்க வேண்டும். அவ்வளவு களைப்புற்று மேலே வந்து சேர்ந்தால்,  ஆச்சரியம் காத்திருக்கிறது. மிக மிக பிரம்மாண்டமான குகை. பல்லாயிரக்கணக்கான மக்களைத் தாங்கும் விதத்தில் விசாலமாக இருக்கிறது. குகையை நிமிர்ந்து பார்த்தால், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, குழம்பாக வடிந்து, உறைந்துபோன பகுதிகள் காட்சியளிக்கின்றன.   ஒரு பக்கம் வானம் தெரிகிறது. காற்றுப் போவதற்கு இயற்கை அளித்த வசதி.

குகைக்குள் ஒரு பக்கம் மீண்டும் முருகன், பிள்ளையார், சிவன், பார்வதி என்று வரிசையாகக் கோயில்கள்.  இன்னும் ஒரு 50 படிக்கட்டுகள் ஏறினால் அங்கு இன்னொரு குகை. அங்கும் சில தெய்வங்கள். வெளியில் வெயிலாக இருந்தாலும் குகைக்குள் நல்ல குளிர்ச்சி. குகை வாயிலில் நின்று பார்த்தால் மலேஷியா தெரிகிறது.  வாயிலுக்கு அருகில் பத்து மலை முருகன் சிலைகள், மலேஷியாவின் அடையாளமான ட்வின் டவர் பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். படியில் இறங்கும் போது, நன்றாக உடை அணிந்திருந்த ஓர் அம்மா, திடீரென்று கை நீட்டி, பிச்சை கேட்டார். அதிர்ச்சியாக இருந்தது.

கோயில் வளாகத்திலேயே குளியலறை, கழிப்பறை, ஓய்வறைகள் எல்லாம் இருக்கின்றன. சிலர் மொட்டை போடுகிறார்கள். சிலர் காது குத்துகிறார்கள். பாவாடை, தாவணி, சுடிதார், சேலை, வேஷ்டிகளில் மக்களைப் பார்க்க முடிந்தது. உடை, பழக்க வழக்கங்கள், கோயில் என்று பலவற்றை தமிழ் நாட்டுப் பாணியில் பின்பற்றினாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் நாட்டைப் பார்த்ததில்லை. தாத்தா காலத்திலேயே ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்கு மலேஷியாவுக்கு வந்தவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, உறவுகளை மறந்து, அங்கேயே செட்டில் ஆனவர்கள். அரசாங்கப் பதவிகள், உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். சிலர் கடைகள், பிசினஸ் என்று சம்பாதிக்கிறார்கள். சொந்த வீடு, இரண்டு கார்கள் என்று  வசதியாக இருக்கிறார்கள். தங்களை மலேஷியன் தமிழர் என்றுதான் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். நீங்கள் தமிழ் நாட்டுத் தமிழரா அல்லது ஈழத் தமிழரா என்று கேட்கிறார்கள்.  

தைப்பூசம் என்பது மலேஷியாவின் தேசிய விடுமுறை தினம். சிங்கப்பூர், மலேஷியாவிலிருந்து பலரும் அந்த நாளில் பத்து மலையை முற்றுகையிடுவார்களாம். காவடி, கரகம், அலகு குத்துதல் என்று ஊரே களை கட்டுமாம். மலேஷியாவில் தமிழர்கள் பகுதியில் மட்டும்தான் இதுபோன்ற போக்குவரத்து அத்துமீறல்கள் நடப்பதாக அங்குள்ள நண்பர்கள் சொன்னர்கள்.

வாசலுக்கு வந்தோம். ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் செல்வதற்கான பேருந்து நிறுத்தம் சற்றுத் தூரத்தில் இருந்தது. அருகில் ஒரு டாக்சி வந்து நின்றது.           'என்ன, தமிழா? எங்கே போகணும்?’ என்று கேட்டார் டிரைவர். நாங்கள் இடத்தைச் சொன்னதும், ‘பத்து ரிங்கட் கொடுத்துடுங்க, தமிழர்ங்கிறதால குறைவா சொல்றேன்’ என்று ஏற்றிக்கொண்டார். இடத்தை விசாரித்து, இறக்கி விட்டார், 'எல்லாத்துலயும் நாணயம் வேணும். நாளைக்கு மலேஷிய தமிழன் ஏமாத்திட்டான்னு உங்க ஊர்ல சொல்லக்கூடாது இல்லையா?’ என்றபடி கிளம்பினார்.

திரும்பி வரும்போது இரவு நேரம். அந்த இடத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு ஒரு காரில் ஏறினோம். 5 ரிங்கட் பெற்றுகொண்டு கிளம்பினார் பேரம் பேசாத மலாய்க்காரர்! இங்கிருந்து போகும்போதே ஒரு நண்பர் சொன்னார், ’ தமிழன்னு எந்த வண்டியிலேயும் ஏறாதீங்க, ஏமாத்திருவாங்க’ என்று.  அது அப்போதுதான் நினைவுக்கு வந்தது! 

Wednesday, December 15, 2010

மார்கழி



இலைகளில் ஈரம் கவிந்திருக்கும். பக்கத்து வீட்டைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் புகை மூட்டம். சிலிர்க்கும் குளிர். மார்கழியில்தான் இவற்றை எல்லாம் ரசிக்கவும் உணரவும் முடியும். அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து விடுவோம். இருட்டை விரட்ட வீட்டைச் சுற்றிலும் விளக்குகள் எரியும்.  ஜில் என்ற தண்ணீரில் வாசல் தெளித்து, பெருக்கி முடித்ததும் கோலம் போடும் வேலை. முதல் நாளே திட்டமிட்டு வைத்திருப்பதால் வேலை தங்குதடையின்றி ஆரம்பமாகி விடும்.

கற்பனை, நினைவுத்திறன், ரசனை எல்லாம் அடக்கியதுதான் கோலங்கள். சில கோலங்களைப் புள்ளி வைத்து, பொம்மை, பழங்கள், பூக்கள் எல்லாம் போட்டு, அடிக்கும் நிறங்களைத் தூவினால் அன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சில கோலங்கள் வண்ணங்கள் தூவ அவசியமின்றி, கோடுகளாலேயே போடப்படும். கோடுகளால் ஆன கோலத்தைச் சிறிய அளவிலிருந்து ஒரு தெருவையே அடைத்துக்கொண்டு போடும் அளவுக்குப் பெரிதாகப் போட்டுக்கொண்டே செல்லலாம். பொறுமையும் ஆர்வமும்தான் முக்கியம்.

எங்கள் அம்மா கோல மாவால் கோடு இழுத்தாலே அத்தனை அழகாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கோடுகளைப் பிசிறில்லாமல் போடுவார். அம்மா போடும் நாள்களைத் தவிர, மீதி நாள்களில்  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் எங்கள் விருப்பப்படி கோலம் போடுவோம். பெரும்பாலும் எங்களுடைய கோலங்கள் எந்தப் புள்ளிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் சிக்காதவையாகவே இருக்கும். பூக்கள் நிறைந்த தொட்டி, கார்ட்டூன்கள், இயற்கைக் காட்சிகள் என்று எங்கள் கற்பனை விரிவடையும். (எங்கள் கோலங்களுக்கு  நிறைய விசிறிகள் உண்டு!) இந்தக் கோலங்களுக்குக் கண்டிப்பாக வண்ணங்கள் வேண்டும். ஒருவர் வரைய வரைய மற்றவர்கள் வண்ணம் தீட்டிக்கொண்டே வருவார்கள். விரைவில் வேலை முடிந்துவிடும். 

தலையில் ஸ்கார்ஃப், அருகில் கொசுவத்திச் சுருள், குளிருக்கு இதமாக அம்மாக்கள் காபியை ஆற்றிக்கொண்டு நிற்கும் காட்சியைப் பெரும்பாலும் எல்லோருடைய வீடுகளிலும்  பார்க்க முடியும்.

வெளிச்சம் வரும்போது எல்லோரும் கோலத்தை முடித்திருப்போம். பிறகு அந்தத் தெரு முழுவதும் ஒரு நடை செல்வோம். ஒவ்வொருவரும் என்ன கோலம் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து ரசிப்போம். என்னதான் ஓவியம் தீட்டி, வண்ணம் கொடுத்து அழகு சேர்த்தாலும், கோடுகளில் வித்தைகாட்டும் எதிர் வீட்டு மாமிதான் அதிகம் ஸ்கோர் செய்துவிடுவார்.

கோலத்தை அழிக்காமல் வண்டியை எடுப்பது அப்பாவுக்குச் சவால் நிறைந்த காரியமாக இருக்கும். சைக்கிள், வண்டிகளைக் கண்மண் தெரியாமல் அதுவரை ஓட்டிக்கொண்டிருந்த இளைஞர்கள் மார்கழி மாதங்களில் கோலத்தை அழித்து விடாமல் இருக்க, பார்த்துப் பார்த்துச் செல்வார்கள்.  

கிறிஸ்துமஸ், நியு இயர், பொங்கல் போன்ற விசேஷ நாள்களில்  வழகத்தைவிடச் சிறப்பாகக் கோலம் போடப்படும். மாட்டுப் பொங்கலுடன் ஸ்பெஷல் கோலங்களுக்கு குட்பை. 

ஈரம் காயாத தரையில்  போட்ட கோலங்களையும் அதில் நடுவில் இருக்கும் பறங்கிப் பூக்களையும் பார்த்து பல ஆண்டுகளாகி விட்டன. தெருக்கள் அப்படியேதான் இருக்கின்றன... மனநிலைதான் மாறிவிட்டது. 
  

Tuesday, November 30, 2010

குதிரைக்கால் அரண்மனையும் பாஞ்சாலங்குறிச்சியும்

மிகவும் நேசத்துக்குரிய மாநிலம் கேரளா. சில ஆண்டுகளுக்கு முன்பு குமரகம் சென்றபோதும் சரி, இப்போது திருவனந்தபுரம் சென்றபோதும் சரி பெரிய அளவில் மாற்றம் இல்லை. கேரளாவில் பேருந்தில்  பயணம் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. காத்திருக்க அவசியமின்றி, பேருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூன்று நாள்களில் நாங்கள் பயணம் செய்த பேருந்துகளில் பெரும்பாலும் பெண்களே கண்டக்டர்களாக இருந்தனர். பேருந்து கட்டணம் தமிழ்நாட்டைப் போல்தான் இருக்கிறது. ஆனால் ஆட்டோ கட்டணங்களில் ஆச்சரியம்! ஸ்டேஷனிலிருந்து கிழக்கு கோட்டை செல்வதற்கு ஆட்டோவில் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது காசு என்று மீட்டர் காட்டியது. டிரைவர் பன்னிரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார்!

திருவனந்தபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோவளம் கடற்கரை. கடற்கரையை ஒட்டி மலைப் பிரதேசம்.  அடர்த்தியாகவும் மிக மிக உயரமாகவும் இருந்தன தென்னை மரங்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள். கடற்கரையை ஒட்டி சிமெண்ட்  நடைபாதை. நடைபாதையை ஒட்டி உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், துணிக்கடைகள், அலங்காரப் பொருள்கள்  கடைகள்... வெளிநாட்டினர் மாதக்கணக்கில் தங்கி, சன்பாத் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவேசமாக வரும் அலைகளுக்கு நடுவில் தைரியமாக குளிக்கிறார்கள்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கரையில் அமர்ந்து மீண்டும் மீண்டும் அதே அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஏனோ அலுப்பே வருவதில்லை!


கோவளத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது விழிஞ்ஜம். இது ஒரு மீன் பிடித் துறைமுகம். துறைமுகத்தைச் சுற்றிலும் எளிய மக்களின் கூட்டம். நீலம், பச்சை, சிவப்பு என்று பல வண்ணங்களில் துறைமுகம் முழுவதும் ஏராளமான படகுகள் அணிவகுத்திருந்தன. ஒன்றிரண்டு மீன் பிடிக் கப்பல்களும் நின்றிருந்தன. துறைமுகத்துக்கு மறுபுறம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது கடல். துறைமுகத்தைச் சுற்றி இரண்டு தேவாலயங்கள், மசூதிகள் காணப்பட்டன.


அங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது பூவார். இது அலையாத்திக்காடுகள், பூவாறு, கடல் மூன்றும் சங்கமிக்கும் இடம். இரண்டு மணிநேரம் இந்தப் பகுதியில் பயணம் செய்வது அலாதியானது. பருந்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, நீர்க்காகம், பல வண்ண வாத்துகள் என்று பறவைகளை அருகில் பார்க்கலாம். ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சுத்தமான கடற்கரை. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு கடலின் ஆக்ரோஷம் அதிகம். இருபுறமும் தென்னை மரங்களுக்கு நடுவில் மீண்டும் படகில் பயணம். வழியில் ஒரு படகில் இளநீர் கடை. அபார ருசி!


குதிரைக்கால் அரண்மனை பத்மநாபபுரம் கோயில் அருகில் உள்ளது. மிக பிரம்மாண்டமான அரண்மனை. தேக்கு மரங்களில் அற்புதமான வேலைப்பாடுகள். இருநூறு வயது பழைமையான அரண்மனை என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயுதங்கள், ஆளுயரக் கண்ணாடிகள், கண்ணாடிப் பொருள்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள், ஸ்லைடிங் டோர்கள் அமைந்த ஜன்னல்கள், இசைக்கருவிகள், ஓவியங்கள், புத்தகங்கள் என்று ஆச்சரியமாக இருந்தன. நூறு அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்தது இருபது அறைகளைத்தான். அதுவே இத்தனை பிரம்மாண்டம். இசை... நடனம்... என்று வாழ்க்கையை அனுபவித்து, வாழ்ந்து தீர்த்திருக்கிறார்கள் இந்த ராஜாக்கள்.

எல்லாம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு கேள்வி எழுந்தது. அது இந்திய சுதந்தரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலகட்டம். திருவனந்தபுரத்துக்கு அருகில் தமிழ்நாட்டில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக் கொண்டு, 90 கிராமங்களை ஆண்டுகொண்டிருந்தவர்  வீரபாண்டிய கட்ட பொம்மன். சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது ஒரு பெரிய வீடு அளவுடைய அவருடைய அரண்மனை தரைமட்டமாகி, வேலி போடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மக்களைக் காப்பாற்றுவதுதான் மன்னரின் வேலை. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான உயிர்களையும் எடுத்துவிட்டு, நன்றாக விளைந்துகொண்டிருந்த மண்ணில் கருவேலம், காட்டாமணக்கு விதைகளை வீசிச் சென்றிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

சமகாலத்தில் இப்படி வீரப் போர் புரிந்து உயிரை விட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பகுதியில் இசையையும் நடனத்தையும் ரசித்துக்கொண்டு, ஆங்கிலேயர்களுக்குச் சலாம் போட்டுக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள் மன்னர்கள்! உண்மையில் பிரம்மாண்டமாக மனத்தில் உயர்ந்திருந்தது தரைமட்டமாகியிருந்த பாஞ்சாலங்குறிச்சியே!

பாலில் மிதக்கும் ரஸமலாய் போல கேரளாவில் தண்ணீருக்கு நடுநடுவே நிலப்பகுதிகள் அமைந்திருக்கின்றன. ரயில் பயணமாக இருந்தாலும் சரி, பேருந்து பயணமாக இருந்தாலும் சரி, இயற்கைக் காட்சிகள் இமைக்க மறந்துவிடச் செய்கின்றன. ஆறுகள், கழிமுகங்களில் சுற்றுலாப்பயணிகள் வீசிய ஒன்றிரண்டு தண்ணீர் பாட்டில்களைத் தவிர, வேறு பிளாஸ்டிக் பைகளை எங்கேயும் பார்க்க முடியவில்லை!

குமரகத்தில் பிரத்யேக கேரள உணவுகளைச் சாப்பிட்டோம். அதேபோல திருவனந்தபுரத்தில் எதிர்பார்த்ததில் ஏமாற்றமே. தமிழ்நாட்டு உணவுகள் கேரளாவை ஆக்கிரமித்து விட்டன.  கண்ணை உறுத்தும் சுவர் விளம்பரங்களோ, பெரிய பெரிய ஃப்ளெக்ஸ்களோ, பிரம்மாண்ட போஸ்டர்களோ  இல்லாதது ஆறுதலாக இருந்தது. விஜய், அஜித், சூர்யாவுக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் அங்கு இருந்தன.   
 



  

Monday, October 11, 2010

தமிழ் பேப்பர் : பெண் மனம் - 1

ஐயோ, தாத்தா! இது என்ன கால் விரல்ல காயம்?’

‘ ……….’

‘தாத்தா, உங்களைத்தான் கேட்கறேன். கீழே விழுந்துட்டீங்களா?’

‘இல்லம்மா.  கோமளாவைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். என்னைவிட ரொம்பச் சின்னவளா இருந்தும் ஒரு மரியாதை இல்லாம, ரெண்டு நிமிஷம் கழிச்சு நிதானமா வந்து என்னன்னு கேட்டா. வந்துச்சே பாரு ஒரு கோவம்! அப்படியே காலைத் தூக்கி ஒரு எத்து எத்தினேன்…’

‘என்ன சொல்றீங்க தாத்தா! பாட்டி இறந்து 30 வருஷம் ஆச்சு!’
‘ம்… கால் வலிச்சப்பறம்தான் தெரிஞ்சது நான் கண்டது சொப்பனம்னு.  கட்டில் கம்பில நல்லா கால் இடிச்சிடுச்சு…’

85 வயது தாத்தா. அவர் மனைவி இறந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் கனவில் கூடத் தன் மனைவியை இப்படி நடத்தியிருக்கிறார் என்றால், அவர் உயிருடன் இருந்த காலங்களில் எப்படி இருந்திருப்பார்!

*

பூமியில் உள்ள உயிரினங்களை எல்லாம் அடக்கி ஆண்டுகொண்டிருப்பது மனித இனம். அறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட இனமாக இருப்பதும் இந்த இனம்தான். இரண்டே வகை உள்ள இனம். அதில் ஒரு வகை  இன்னொரு வகையை இரண்டாம் தரத்தில் வைத்திருக்கும் வேலையைத்  தொடர்ந்து கொண்டே இருக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாக. பலர் சொல்லி போரடித்துப் போச்சென்று ஓரினம் தொடர்ந்து சொல்லும். எள்ளலும் துள்ளலும் நக்கலுமாக எகத்தாளமிடும். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனம் தோன்றிய நாளாக.

இங்கு பெண்களுக்கு என்று தனியான சிந்தனைகள் இல்லை. செயல்கள் இல்லை. விருப்பங்கள் இல்லை. லட்சியங்கள் இல்லை. ஆசைகள் இல்லை. எல்லாமே காலம் காலமாக ஆண்களால் உருவாக்கப்பட்டவைதான். அடக்கமாக இருக்க வேண்டும். நிமிர்ந்து நடக்கக்கூடாது. உரக்கப் பேசக்கூடாது. சிரிக்கக்கூடாது.

வசதியாக இல்லா விட்டாலும் பெண் என்றால் இப்படித்தான் உடை அணிய வேண்டும். இப்படித்தான் சிந்திக்க வேண்டும். இப்படித்தான் செயல்பட வேண்டும். குறிப்பாக, தங்களுக்குக் கீழாகத்தான் நடக்க வேண்டும் என்று ஆண்களின் ஜீனுக்குள் பொதிந்துகிடக்கும் அபிப்பிராயமே பொதுவான சமூகக் கருத்தாகவும் நிலவுகிறது.

பெண்களைப் பற்றிய ஆண்களின் இத்தகைய மதிப்பீடுகள் அவர்களே உருவாக்கிய மதங்கள், சட்டங்கள், காப்பியங்கள், போதனைகள் மூலமாக வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு, பரப்பப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
பெண்கள் பிரச்னை என்பது உண்மையிலேயே உள்ளதுதானா? அத்தனை பெரிய பிரச்னையா? பெண்கள் எல்லோரும் அடிமையாகவா இருக்கிறார்கள்? எதில் இல்லை சுதந்தரம்? பெண்களே பெண்களுக்கு எதிரி?… இப்படிப்பட்ட கேள்விகளைத் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிரச்னை என்றபிறகு பெரிய பிரச்னை என்ன, சிறிய பிரச்னை என்ன? எல்லோரும் அடிமையாக இல்லாவிட்டாலும் பெரும்பாலும் அடிமைகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். அடிமைப்பட்டுக் கிடப்பவர்களுக்குத்தான் சுதந்தரத்தின் பொருள் புரியும்.

‘ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்திருந்தார்கள், சரி… இப்போதுதான் பெண்கள் படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இதற்கு மேல் என்ன?’ என்று கேட்கிறார்கள்.

படிப்பு, வேலை என்பதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு பகுதி என்பதை மறுக்க முடியாது.  படிப்பு, வேலை இருப்பதாலேயே பிரச்னை தீர்ந்து விடும் என்றும் சொல்லிவிட முடியாது.  பெண்களைச் சுற்றியுள்ள கூண்டுகளின் கம்பிகள் சற்றுத் தள்ளி நகர்ந்து போயிருக்கின்றன. அவ்வளவுதான்! உண்மையில் சுதந்தரத்தை நோக்கி பெண்கள் செல்லக்கூடிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

பெண்கள் பிறக்கும்போதே சந்திக்கும் போராட்டம் அவள் வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது. ஏழைகள், பணக்காரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமத்தில் இருப்பவர்கள், நகரத்தில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருப்பவர்கள் என்ற பேதங்கள் எல்லாம் பெண்கள் பிரச்னைகளுக்குக் கிடையாது.

சுமார் 1650  ஆண்டுகளுக்கு முன்…

பண்டைய எகிப்தில்  அலெக்ஸாண்டிரியாவில்  கி.பி. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஹைபேஷியா. கிரேக்கம், இத்தாலி, மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கற்றவர். இலக்கியம், கணிதம், தத்துவம், அறிவியல் போன்ற பல துறைகளில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தவர். அவரிடம் கல்வி கற்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள்  வந்தனர். பண்டைய கணித நூல்களை எளிமைப்படுத்தி விளக்க உரைகள் எழுதினார்.  இவர் எழுதிய நூல்கள் பிற்காலத்தில் வந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

அறிவும் துணிவும் நிரம்பிய ஹைபேஷியா, ஆண்களைப் போலவே உடை அணிவார். தாமாகவே தேர் ஓட்டிச் செல்வார். எனவே, ஹைபேஷியாவை அன்றைய மதவெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. தேரில் வந்துகொண்டிருந்தவரை இழுத்து அடித்து உதைத்தனர். ஆடைகளைப் பிய்த்து எறிந்தனர். உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினர்.

ஹைபேஷியா [16ம்நூற்றாண்டு ஓவியம்

போனது ஹைபேஷா என்ற உன்னதமான ஒரு பெண்ணின் உயிர் மட்டுமல்ல; உலகத்துக்குச் சொல்ல வேண்டிய எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்களும் கண்டுபிடிப்புகளும்தான்!

சுமார் 1650 ஆண்டுகளுக்குப் பின் …

1987. இந்தியாவில் உள்ள ராஜஸ்தான். 18 வயது இளம் பெண் ரூப் கன்வருக்கு மால் சிங் என்ற 24 வயது நபரைத் திருமணம் செய்த  8 மாதங்களில், கணவர் இறந்து போனார். ரூப் கன்வரின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் ஏற்கெனவே ஒழிக்கப்பட்ட ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறுதலை அரங்கேற்றி, தங்கள் கோர முகத்தை இன்னொரு முறை உலகத்துக்குக் காட்டிக்கொண்டனர். வேடிக்கை பார்க்க வந்த ஆயிரக்கணக்கானவர்களின் கண்களுக்கு எதிரே, காப்பாற்ற யாருமின்றி, கதறியபடியே  ரூப் கன்வர் நெருப்பில் எரிந்து, கருகிப் போனார்.

ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகச் சாகடித்த பிறகு, ‘சதி மாதா’ என்று கொண்டாடும் உலகம் இது.

இன்றைக்குச் சதி இல்லை. ஆணைப் போல் உடை அணிவதில் பிரச்னை இல்லை. இன்னும் பல இல்லைகள், மேலும் பல உண்டுகள். ஆணுக்கு நிகர் என்று ஆண்களில் சிலரேகூட எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடத் தயார்.

அவ்வளவுதானா? எல்லாமே இருக்கிறதா? பெண்ணடிமைக் காலம் இப்போது / இனி இல்லையா? உண்மைதானா?

இன்று பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் அனைத்தும் ஆண்களுக்கும் உண்டு. சந்தேகமில்லை. ஆனால் ஆண்களுக்கு இல்லாத ஒரு பிரச்னை பெண்ணுக்கு உண்டு. அதுதான் இன்னும் தன் ஆக்டோபஸ் கைகளால்  இறுக்கமாக அழுத்திப் பிடித்து வைத்திருக்கிறது.

அது…

0

தமிழ் பேப்பர் இணைய இதழில் நான் எழுதி வெளியாகும் பெண் மனம் தொடரின் முதல் அத்தியாயம் இது: இணைய இதழுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.