Monday, August 16, 2010

2020ல் இந்தியாவும் மாணவர்களின் கனவும்

·    இந்தியா வல்லரசு ஆகியிருக்கும். கூரை வீடுகளே இருக்காது. அனைவரும்  மாடி வீடுகளில் குடியிருப்பார்கள்.
·    நான் எஞ்சினியராகி இந்தியாவின் கடனை அடைப்பேன். பிறகு இந்தியாவை உயர்த்துவேன்!
·    இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் முறியடிக்கப்பட்டிருக்கும்.
·    அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.
·    பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள். வரதட்சணை ஒழிக்கப்பட்டிருக்கும். (மாணவிகள் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் குறிப்பிட்டிருந்தனர்)
·    இந்தியா பசுஞ்சோலையாக மாறியிருக்கும்.
·    இன்று இலங்கை தமிழர்களைப் பாத்துக்கொண்டு சும்மா இருப்பது போன்ற நிலை இருக்காது. தமிழர்கள் தலை நிமிர்ந்திருப்பார்கள்.
·    மக்கள் தொகையில் நாம் சீனாவை முந்தியிருப்போம்!
·    இன்று ஒரு காபி ரூ.10. தங்கம் ஒரு பவுன் ரூ. 15,000. 2020-ல் இன்னும் பொருளாதாரம் வளர்ந்து கற்பனைக்கு எட்டாத அளவுக்குச் சென்று விடும். (ஐயோ விலை ஏற்றத்தை பொருளாதார வளர்ச்சி என்று நினைத்துவிட்டார்களே!)
·    பாகிஸ்தான் அடக்கப்பட்டிருக்கும்.
·    சீனாவின் வளர்ச்சியோடு இந்தியா சரிசமமாகப் போட்டியிடும்.
·    எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்கும்.
·    வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பியிருப்பார்கள்!
·    நல்ல அரசியல்வாதிகள் உருவாகியிருப்பார்கள்.

இவை எல்லாம் மாணவர்கள் சொன்ன சில கருத்துகள்.

பூம்புகார் பள்ளியில் ’இந்தியா 2020 என் கனவு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி 6 முதல் 12-ம் வகுப்பு வரை நடத்தப்பட்டது. பரிசுக்கான கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்பு வாரியாகப் போட்டி நடத்தப்பட்டிருந்தாலும் மாணவர்களின் சிந்தனையில் பெரிய மாற்றம் இல்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆறாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் இடையே மொழியில், விரிவாக எழுதுவதில் வித்தியாசம் இருந்ததே தவிர, அவர்கள் சொன்ன விஷங்களில் மாற்றம் இல்லை!

அப்துல் கலாம், புவி வெப்பம், மக்கள் தொகை கட்டுப்பாடு, வேலை வாய்ப்பு, கல்வி போன்ற விஷயங்களைச் சுமார் 80 சதவிகித  கட்டுரைகளில் காண முடிந்தது.  100 சதவிகிதம் இருந்த ஒரு விஷயம் ’வல்லரசு’. வல்லரசு என்றால் அனைவரும் மாடி வீட்டில் வசிப்பது என்று பெரும்பாலும் குறிப்பிட்டிருந்தனர். யார் கொடுத்த விளக்கமோ தெரியவில்லை!