Tuesday, December 29, 2009

சினிமா கற்பனைக்கே எட்டாத வில்லன்!

சானியா மிர்சாவுக்கு முன்பாகவே ருச்சிகா கிர்ஹோத்ரா டென்னிஸில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கலாம்! ஆனால்...

மீண்டும் ஒரு முறை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு. பிருந்தா காரத் சொல்வதைப் போல வெட்கப்பட வைத்திருக்கிறது.

பத்து வயதிலேயே தாயை இழந்தவர் ருச்சிகா. பாட்டி, அப்பா, தம்பியுடன் சண்டிகரில் வசித்து வந்தார். மகளை வெளிநாட்டில் படிக்க வைத்து, பெரிய ஆளாக மாற்றவேண்டும் என்பது தந்தை கிர்ஹோத்ராவின் ஆசை. ருச்சிகாவின் தோழி ஆராதனா. இவர்கள் இருவரும் வளர்ந்துவரும் டென்னிஸ் வீரர்கள். தினமும் பயிற்சிக்காக ஹரியானா லான் டென்னிஸ் அசோசியேஷனுக்குச் செல்வார்கள். அந்த அசோசியேஷனின் தலைவராக இருந்தார் ஐபிஎஸ் அதிகாரி ரத்தோர். தினமும் பயிற்சி செய்யும் இடத்துக்கு வந்து பார்வையிடுவார்.

தன் மகள் வகுப்பில் படிக்கும் ருச்சிகாவைப் பற்றிக் கேள்விப்பட்ட ரத்தோர், ருச்சிகாவின் தந்தையை அவருடைய வீட்டில் சந்தித்தார். ருச்சிகா மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வருவார் என்றும் வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மறுநாள் நடக்க இருக்கும் கொடூரம் தெரியாமல், மகள் மீது அக்கறை செலுத்தும் அதிகாரியை நினைத்து மகிழ்ந்தார் கிர்ஹோத்ரா.

அடுத்த நாள் ருச்சிகாவையும் ஆராதனாவையும் தன் அலுவலகத்துக்கு அழைத்தார் ரத்தோர். பயிற்சியாளரை அழைத்துவரச் சொல்லி, ஆராதனாவை விரட்டி விட்டார். தனியாக இருந்த 14 வயது ருச்சிகாவை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார். ருச்சிகா போராடிக்கொண்டிருந்தபோது திரும்பி வந்த ஆராதனா அதிர்ந்து போய்விட்டார். மீண்டும் ஏதோ சாக்கு சொல்லி, ஆராதனாவை அனுப்ப நினைத்த ரத்தோரிடமிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

மறுநாள் பயிற்சிக்குச் செல்லவில்லை. அடுத்த நாள் போனபோது மீண்டும் தன் அறைக்கு வரச் சொல்லி ருச்சிகாவுக்குத் தொல்லை கொடுத்தார் ரத்தோர். சிக்கல் பெரிதாவதை உணர்ந்த ருச்சிகாவும் ஆராதனாவும் தங்கள் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். உடனே உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பிறகு ரத்தோர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது. உடனே ஓர் அரசியல்வாதியின் தலைமையில் ருச்சிகாவின் வீட்டு வாசலில் கேவலமாக கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தார் ரத்தோர்.

விசாரணை ஆரம்பம் ஆன உடன் பல விதங்களில் ருச்சிகாவையும் அவள் குடும்பத்தையும் மிரட்ட ஆரம்பித்தார் ரத்தோர். பெண்கள் மீது வழக்கமாகச் சமூகம் சொல்லி வரும் ‘நடத்தை சரியில்லாதவள்’ என்ற குற்றத்தோடு, பள்ளியிலிருந்து நீக்க வைத்தார். விஷயம் அறிந்து எந்தப் பள்ளியிலும் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், மனம் தளராமல் போராட ஆரம்பித்தனர்.

தெலுங்கு, தமிழ் சினிமா இயக்குனர்களின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வில்லத்தனம் காட்ட ஆரம்பித்தார் ரத்தோர். திருட்டு, கொள்ளை, கொலை போன்ற வழக்குகள் ருச்சிகாவின் அப்பா மீதும் அஷு என்ற பத்து வயது தம்பியின் மீதும் போடப்பட்டன. அதே போல வழக்கை உறுதியுடன் நடத்திக்கொண்டிருக்கும் ஆராதனா குடும்பத்தின் மீதும் பொய் வழக்குகள் பதிவாயின.

ஆண்டுகள் சென்றன. வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. ஒருநாள் அஷுவை போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்று அடித்து, துன்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர். ருச்சிகாவின் கண் எதிரில் தம்பியைக் கொடுமை செய்தனர். சிறிது நாள்களில் மீண்டும் வழக்கை வாபஸ் பெறச் செய்வதற்காக அஷு அழைத்துச் செல்லப்பட்டு, தண்ணீர், உணவு இன்றி சித்திரவதைச் செய்யப்பட்டார். ருச்சிகாவின் அப்பாமீது லஞ்சப் புகார் சுமத்தப்பட்டு, வங்கி மேனேஜர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். எஞ்ஜினியரான ஆராதனாவின் அப்பாவும் பதவி இறக்கம் போன்ற தொல்லைகளுக்கு ஆளானார்.

அப்பா, தம்பி, தோழி, அவள் குடும்பம் படும் வேதனைகளைப் பொறுக்க முடியாமல் டிசம்பர் 28, 1993 அன்று விஷம் சாப்பிட்டு, இறந்து போனார் ருச்சிகா. வெள்ளைத் தாளில் கிர்ஹோத்ராவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ருச்சிகாவின் உடலை ஒப்படைத்தனர். அஷுவை அதன்பிறகே வெளியில் விட்டனர். ருச்சிகாவை செல்லமாக அழைக்கும் ரூபி என்ற பெயரில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ரிப்போர்டை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.

பெண்மையைக் கேவலப்படுத்தி, எதிர்காலத்தைச் சிதைத்து, உயிரையும் குடித்த ரத்தோர் ருச்சிகா இறந்த அன்று இரவு பார்டி வைத்துக்கொண்டாடியிருக்கிறார். ஒரே வாரத்தில் ரத்தோருக்கு எதிரான வழக்கு மூடப்பட்டது. ருச்சிகாவின் குடும்பம் சண்டிகரை விட்டு வெளியேறியது. மன உளைச்சலுக்கு ஆளான கிர்ஹோத்ரா வழக்கை விட்டும் ஒதுங்கியிருந்தார். சில மாதங்களில் பஜன்லால் அரசாங்கம் ரத்தோருக்கு கூடுதல் டிஜிபி பதவி கொடுத்து, அழகு பார்த்தது!

காலம் காயத்தை ஆற்றும் என்பார்கள். ஆனால் ருச்சிகா இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும் நீதி கேட்டுப் போராடும் திடம் ஆராதனாவின் அப்பாவுக்குக் குறையவில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு ஆராதனாவின் அப்பாவுக்கு விசாரணை அறிக்கை கிடைத்தது. உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்தது. வழக்கு மீண்டும் நடக்க, ஓம் பிரகாஷ் சௌதாலா அரசாங்கம் டிஜிபி பதவியும் ஜனாதிபதியின் பதக்கமும் கொடுத்து ரத்தோரை கௌரவித்தது! அவரும் எல்லாவற்றையும் ஆண்டு, அனுபவித்து, ஓய்வும் பெற்றுவிட்டார். பாதிக்கப்பட்டது தன் மகளைப் போன்று ஒரு பெண் என்று கூட நினைக்காமல் ரத்தோருக்காக வாதாடி, அவரைக் காப்பாற்றி வந்தது அவருடைய வக்கீல் மனைவி. இன்று அவருடைய மகனும் மகளும் வக்கீல்களாக இருக்கிறார்கள்!

19 ஆண்டுகள் சளைக்காத போராட்டத்துக்குப் பிறகு ஆயிரம் ரூபாய் அபராதமும் 6 மாதம் சிறையுமாக ரத்தோருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது! தீர்ப்பு வழங்கிய 10 நிமிடங்களுக்குள் சிரித்தபடி பெயிலில் வந்துவிட்டார் ரத்தோர்.

ஆளும் கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மக்களவை தலைவர், ஜனாதிபதி என்று உயர் பொறுப்பில் பெண்கள் இருக்கும் இந்த நாட்டில்தான் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு (அ)நீதி கிடைக்க 19 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது.

‘நீதி ஒரு நாள் வெல்லும்’ என்று எந்த நம்பிக்கையில் காத்துக்கொண்டிருப்பது? பெற்ற மகளை இழந்து, குடும்ப நிம்மதியைத் தொலைத்து, வேலை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, பணம் செலவழித்து நீதிக்காகப் போராடியவர்களுக்கு கிடைத்த நீதி இதுதானா?

வாழ வழியில்லாதவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கும், சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லும் நிரபராதிகளுக்கும் இந்தச் சட்டத்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்போது, அந்தச் சட்டத்தைக் கட்டிக் காக்கும் போலீஸ்காரர்கள் தவறு செய்தால் தண்டனை இரட்டிப்பாக வேண்டாமா?

இதுபோன்ற தீர்ப்புகளால் ருச்சிகா, ஜெசிகா, பத்மினி, ரீட்டா மேரி போன்ற பெண்கள் இரையாவதைத் தடுக்க... இல்லை குறைக்கவாவது முடியுமா? ’வசதியும் செல்வாக்கும் இருந்தால் குற்றம் செய்யலாம், தண்டனை கிடைக்காது’ என்ற நிலை இருப்பதால்தான் மேலிடத்தில் இருப்பவர்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். எப்போதாவது மாட்டுகிறார்கள். அரிதாகவே தண்டனை பெறுகிறார்கள். அப்படியும் மேல்முறையீடு செய்து, பெயிலிலேயே காலத்தைக் கழித்து, தப்பி விடுகிறார்கள்!

குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் சட்டம் இருப்பதால்தான் நிறைய வரதட்சணை வழக்குகள் முடங்கிப் போய்விடுகின்றன. மகளின் உயிரை இழந்து, பொருளையும் இழந்து வாழ்பவர்கள் ஒரு கட்டத்தில், ’போனவள் திரும்பவா போகிறாள்’ என்ற விரக்தியில் வழக்கை விட்டு விடுகிறார்கள். குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். பல ஆண்டுக்கணக்கில் போராட யாருக்கு சக்தி இருக்கிறது? விரைவாகக் கிடைக்காத நீதியால் என்ன பயன்?

கண் முன் அநியாயம் நடந்தால் கூட கண்டுகொள்ளாத காலகத்தில், சொந்த வழக்குகளுக்கே போராடத் துணிவு இல்லாத காலத்தில், தன் தோழிக்காக நீதி கேட்டு, நீண்ட காலம் போராடி வருகிற ஆராதனாவும் அவருடைய பெற்றோரும் உதாரண மனிதர்கள்! அநீதிக்கு சாட்சியாக இருந்த ஆராதனாவுக்கும் குடும்பத்துக்கும் நேர்ந்த கஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை. இவர்களைப் பார்க்கும்போது போராட்டத்தில் நம்பிக்கை வருகிறது!

போராட்டம் தொடர்கிறது. இந்த வழக்கை மீண்டும் முறையாக விசாரித்து உரிய தண்டனை வழங்கக்கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறார் ஆராதனா. அவரது மின் அஞ்சல்: ‘joinaradhna4ruchika@gmail.com’

Friday, December 11, 2009

அற்புதமான உலக இலக்கியப் புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி

வாழ்க்கை, அறிவியல், நாடுகள், மதங்கள், வானியல், நாகரிகங்கள், வரலாறு என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் Prodigy புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் உலக இலக்கியப் புத்தகங்களை அறிமுகம் செய்கிறோம்.

Prodigy

வழங்கும்
அற்புதமான உலக இலக்கியப் புத்தகங்கள்!

சார்லஸ் டிக்கன்ஸ்
ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்
ஜுல்ஸ் வெர்ன்
அன்னா சிவெல்
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்
க்ரிம் பிரதர்ஸ்
H.G.வெல்ஸ்
அலெக்சாண்டர் டூமாஸ்
ஓ ஹென்றி
ருட்யார்ட் கிப்ளிங்
ஜோஹன்னா ஸ்பைரி
ஜொநாதன் ஸ்விஃப்ட்
L.ஃப்ராங்க் பாம்
மார்க் ட்வைன்
லியோ டால்ஸ்டாய்
லூயி கரோல்
ஆஸ்கர் வைல்ட்

உலகம் கொண்டாடும் எழுத்தாளர்களின் அற்புதமான படைப்புகள் சுருக்கப்பட்ட வடிவத்தில் தமிழில் வருகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் கதைகளுக்கு ஏற்ப பிரமாதமான ஓவியங்கள், கதை நடக்கும் இடத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும்விதத்தில் அமைந்துள்ளன.


கிறிஸ்துமஸ் கீதம்
தவளை இளவரசன்!
கடத்தப்பட்டவன்
நைட்டிங்கேலும் ரோஜாவும்
ஜங்கிள் புக்
கால இயந்திரம்
இரு நகரங்களின் கதை
தும்பிக்கை வந்தது எப்படி?
டேவிட் காப்பர்ஃபீல்ட்
கலிவரின் பயணங்கள்!
80 நாள்களில் உலகப் பயணம்!
பனி மனிதன்!
ஹெய்டி
ஆலிவர் ட்விஸ்ட்
கோழை சிங்கமும் பசித்த புலியும்
செவ்விந்தியர் தலைவன் கடத்தல்!
பிளாக் பியூட்டி
ஹக்கிள்பெர்ரி ஃபின்
புதையல் தீவு!
மூன்று துப்பாக்கி வீரர்கள்
பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்!
மூன்று கேள்விகள்
ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?
இளவரசனும் ஏழையும்
டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட்
ஆழ்கடலில் சாகசப் பயணம்!
ஆலிஸின் அதிசய உலகம்!


80 பக்கங்கள் விலை : ரூ.25/-














Thursday, December 10, 2009

திருடரைப் பிடித்தோம்!

அனுபவம் இல்லாவிட்டாலும் கூட திருடர் பயம் எல்லோருக்கும் இருக்கிறது. ‘எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, சத்தமே இல்லாம கதவை உடைச்சிட்டு உள்ள வந்துட்டாங்க நாலு திருடர்கள்.’ ’பூட்டின வீட்டை உடைச்சிட்டுப் போய், எல்லாத்தையும் அள்ளிட்டுப் போயிட்டாங்க’ என்று நிறையப் பேர் திருடுப் போன செய்திகளைச் சொல்லிச் சொல்லி, திருடர் பயம் எங்களுக்கு அதிகமாகவே இருந்தது. காரணம் எங்கள் அப்பா வேலை நிமித்தமாக மாதத்தில் பத்து நாள்கள் வெளியூர் சென்றுவிடுவார்.

அப்பா ஊரில் இல்லாத நாள்களில் கதவைப் பூட்டி, டீபாய், ஸ்டூல் எல்லாம் வரிசையாக அடுக்கி வைப்பார் அம்மா. (தூக்கத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்காவிட்டாலும் ஸ்டூல் உருளும் சத்தம் கேட்டு கண் திறக்கலாமே என்று!)

நாங்கள் தஞ்சாவூர் வந்தபோது இந்த பயம் இன்னும் அதிகமானது. தனித்தனி வீடுகள். வீட்டைச் சுற்றி தோட்டம். ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் பெரிய இடைவெளி. அப்போது எங்கள் காலனியில் அடிக்கடி திருடு நடந்துகொண்டிருந்த நேரம். இரவு நேரத்தில் காவலர்களுடன் வீட்டுக்கு ஒருவர் காவலுக்குச் செல்கிற அளவுக்கு திருடர்கள் பயத்தைக் கொடுத்திருந்தார்கள்.

அன்று அப்பா வெளியே சென்றிருந்தார். இரவு எட்டரை மணி. திடீரென்று நாய் குரைக்கும் ஓசை. அறை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய செம்பருத்திச் செடி வேகமாக அசைந்தது. தெருவில் நாயின் குரைப்பு நின்றதும், ஓர் உருவம் மெதுவாக, பலா மரம் அருகில் வந்து நின்றது. நான் மெதுவாக அம்மாவுக்குத் தகவல் சொன்னேன். நான், அம்மா, தங்கைகள் சத்தம் வராமல் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த உருவம் அப்படியே நின்றுகொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் ஆள் இல்லை. அப்போது எங்கள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதனால் நான்கு வீடு தள்ளியிருந்த சரஸ்வதி மாமி வீட்டுக்குக்கூட தகவல் சொல்ல முடியவில்லை.

எல்லோருக்கும் திக் திக் என்றிருந்தது. ஒருத்தர்தான் கண்ணில் பட்டார். இன்னும் எத்தனை பேர், எங்கிருக்கிறார்களோ! என்ன செய்வது? ஒன்றும் புரியாமல் அந்த ஆளைக் கவனித்துக்கொண்டேயிருந்தோம். அப்போது வாசலில் வண்டி நின்ற சத்தம் கேட்டது. என் தங்கையை மட்டும் அந்த மனிதரைக் கவனிக்கச் சொல்லிவிட்டு, வாசலுக்குச் சென்றோம். சரஸ்வதி மாமியும் எஸ்.ஆர்.கே மாமாவும் வந்தார்கள். சற்றுத் தைரியம் வந்தது.

திண்ணையில் ஏறியவர்களிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னோம். மாமா எல்லா விளக்குகளையும் போடச் சொன்னார். விளக்கு போட்டும், எங்களைப் பார்த்தும் அந்த மனிதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். ஒல்லியான உடல். திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தார்.

அவர் உருவத்தைப் பார்த்ததும் எல்லோருக்கும் கொஞ்சம் தைரியம் வந்தது.

‘யாருப்பா நீ? அங்கே என்ன செய்யறே?’ என்று கேட்டார் மாமா. அருகில் செல்ல பயம். கத்தி, பிளேடு ஏதாவது வைத்திருந்தால்...?

அமைதியாக நின்றார் அந்த ஆள்.

‘என்ன பதில் சொல்ல மாட்டேங்கிறே? இன்னும் தூங்கக்கூட ஆரம்பிக்கலை. எவ்வளவு தைரியம் உனக்கு? இந்த நேரத்துல திருட வந்திருக்கே? போலீசைக் கூப்பிடவா?’ என்றார் மாமா சற்று உரத்த குரலில்.

பதில் எதுவும் சொல்லாமல், இடத்தை விட்டும் அசையாமல் பக்கவாட்டில் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த ஆள்.

கோபத்துடன் மாமா அடுத்த விசாரணையை ஆரம்பிக்கும் முன், அப்பா வந்துவிட்டார். ஒரு திருடனை சாமர்த்தியமாக மடக்கிய பெருமிதத்தில் நானும் என் தங்கைகளும் அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னோம்.

‘இங்க வாப்பா. பயப்படாதே’ என்று அப்பா அழைத்ததும் அந்த மனிதர் வந்தார்.

‘என்ன வேணும் உனக்கு? உன்னைப் பார்த்தால் திருடன் மாதிரி தெரியலை. பயப்படாமல் சொல்’ என்று அப்பா பரிவாகப் பேசினார்.

உடனே மாமியும் அம்மாவும், திருட வந்த ஆளிடம் என்ன பரிவு என்று கேட்டார்கள்.

‘திருடன் இந்த நேரத்துலயா வருவான்? விளக்கு போட்டதும் ஓட மாட்டானா? இல்லை உங்களைப் பார்த்ததும் தப்பிக்க நினைக்க மாட்டானா?’ என்றார் அப்பா. அப்போதுதான் கவனித்தோம். அந்த ஆள் சாப்பிட்டு இரண்டு நாள்கள் ஆகியிருக்கும் போல் தெரிந்தது. மிகவும் பரிதாபமாக இருந்தார்.

‘சார், கோபத்தில ஊரை விட்டு வந்துட்டேன். கையில் பணமில்லை. ரெண்டு நாளா சாப்பிடலை. ஊருக்கும் போக முடியலை. யார்கிட்டேயும் கையேந்தி பழக்கமில்லை. பசி தாங்காமல் இப்படியே நடந்து வந்தப்ப உங்க வீட்டுல கட்டில் கம்பிகளைப் பார்த்தேன். அதை வித்து, சாப்பிடலாம்னுதான் சுவர் ஏறிக் குதிச்சேன். நான் செஞ்சது தப்புதான்...’ என்று கண்கலங்கினார்.

‘நீ கதவைத் தட்டிக் கேட்டிருந்தாலே பணம் கொடுத்திருப்பாங்க. இந்தா, நூறு ரூபாயை வச்சுக்க. நல்லா சாப்பிட்டுட்டு, ஊருக்குப் போ. வேற எங்கேயாவது இப்படி நின்னுக்கிட்டிருக்காதே. திருட்டு பயம் அதிகம்ங்கிறதால உன்னை உதைச்சிடப் போறாங்க’ என்றார் அப்பா.

நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.

‘அடடா! எவ்வளவு தைரியம்! திருடனைப் பிடிச்ச வீராங்கனைகள் எல்லாம் உள்ளே வாங்க!’ என்று அப்பா சொன்னதும், எங்களுக்கு வெட்கமாகிவிட்டது்!