Friday, January 9, 2009

ஆசை முத்தம்... தோசை முத்தம்!

சென்னை புத்தகக் கண்காட்சியின் இரண்டாம் நாள். கூட்டம் அதிகமில்லை. மாலை ஆறு மணிக்குஅரங்கில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ’குழந்தைகளின் புத்தகக் குதூகலம்’ என்ற தலைப்பில் பேச இருந்தார். ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. வரவேற்புரை, வாழ்த்துரை, இன்னும் சில உரைகள் என்று ஆர்வமாக வந்திருந்தவர்களைச் சோதித்து விட்டனர்.

விழாவுக்குக் கூடியிருந்த கூட்டம் சம்பிரதாயப் பேச்சுகளில் பொறுமையிழந்து அரங்கத்துக்குள்ளும், கேண்டீனுக்குள்ளும் அடைக்கலம் புகுந்துகொள்ள ஆரம்பித்தது. தமிழ்ச்செல்வனின் பேச்சைக் கேட்பதற்காக நான் சகித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

இதுபோன்ற விழாக்களில் மிகச் சுருக்கமாக மற்ற விஷயங்களை முடித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்துவிடுவது அனைவருக்கும் நல்லது.

வியாசர்பாடியைச் சேர்ந்த துளிர் இல்லக் குழந்தைகள் 15 பேர் புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறையாக வந்திருந்தனர். அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அவர்கள் வாங்கிய புத்தகங்கள் அல்லது பார்த்த புத்தகங்கள் பற்றிச் சொன்னார்கள். இன்றும் அப்துல் கலாம் முதல் இடத்தில் இருப்பது தெரியவந்தது!

தமிழ்ச்செல்வன் பேச வந்தார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று நாம் நினைத்துக்கொண்டு ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகள் உலகம் வேறு மாதிரி இருக்கிறது. குழந்தைகள் என்ன நினைப்பார்கள் என்று நாமே கற்பனை செய்து கொண்டு அவர்கள் மீது நம் கருத்தைத் திணிக்கிறோம். ஏன் என்றால் நாம் நம் குழந்தைப் பருவத்தை மறந்துவிடுகிறோம்.

எந்தக் குழந்தையும் தன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி செருப்புகளைப் போடத்தான் விரும்புகின்றன. அது எவ்வளவு சிரமத்தைக் கொடுத்தாலும் கூட. குழந்தைகள் பெரியவர்களின் உலகத்தைத்தான் விரும்புகிறார்கள். புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளைச் சுதந்தரமாக விட்டு, புத்தகங்களை வாங்கச் சொன்னால் அவர்கள் பெரியவர்களின் புத்தகங்களை வாங்குவார்கள். இங்கே கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட குழந்தைகளும் அதைத்தான் மெய்ப்பிக்கிறார்கள்.

எங்கள் கிராமத்தில் பொன்னுத்தாய் என்ற லைப்ரரி டீச்சர் வந்தார். எனக்குப் படிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் எந்த நேரத்தில் சென்றாலும் சந்தோஷமாகப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார். சிறிய வயதில் நாம் எதைப் படிக்கிறோமோ அதுதான் நம் பாதையைத் தீர்மானிக்கிறது. ரஷ்யப் புரட்சி பற்றியெல்லாம் நான் அந்த வயதிலேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். சின்ன வயது, யார் எழுதியது எல்லாம் தெரியாது. விஷயம் மட்டும் அப்படியே பதிந்து விட்டது.

என் கதையில் உருவான பூ திரைப்படத்தை எங்கள் தெருவில் உள்ள குழந்தைகள் பார்த்ததாகச் சொன்னார்கள். அவர்களுக்கு என்ன காட்சி பிடித்திருந்தது என்று கேட்டேன். நான் நினைத்தது குழந்தைகள் வரும் காட்சியைச் சொல்வார்கள் என்று.

‘ஆசை முத்தம் கொடுக்க முடியலை, தோசை முத்தமாவது தரேன்’ என்ற டயலாக்கைச் சொன்னார்கள். ஒரு குழந்தைகூட குழந்தைகள் காட்சியைக் குறிப்பிடவில்லை.

குழந்தைகளின் உலகத்தில் நாம் பழகாமல் அவர்களுக்கு எழுத முடியாது. ’இருட்டு எனக்குப் பிடிக்கும்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை, குழந்தைகளிடம் கொடுத்து, விவாதம் செய்து, கேள்வி கேட்டு பிரசுரித்தோம். 8 கட்டுரைகளில் 4 கட்டுரைகள்தான் குழந்தைகளுக்குப் பிடித்திருந்தன.

1 comment:

Anonymous said...

Its impossible to an adult(whoever maybe) understand the children or mingle with them. Unless otherwise we should be a child. we can say that we tried,trying and will try to understand them.

rama, bahrain