Thursday, May 7, 2009

அண்ணனுக்குத் தெரியாமல் திருமணம்!

முழுப் பரிட்சை முடிவதற்கும் சித்திரைத் திருவிழா ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும். விடுமுறை, திருவிழாவுக்கு என்று உறவினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். வைகை ஆறு ஓடும்(!) மதுரை, மானாமதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சுவாமிகளை அலங்காரம் செய்வார்கள். இந்த அலங்காரத்துக்கான செலவுகளை ஊரில் இருக்கும் பணக்காரர்கள் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளுக்கும் மண்டகப்படி அமைப்பார்கள்.

ஊரே களை கட்டும். பத்து நாள்களும் மாலை பொழுதுகளை மக்கள் ஆற்றில்தான் கழிப்பார்கள். குடை ராட்டினம், பலூன் கடை, வளையல் கடை, தின்பண்டக் கடை, ஆழ்ந்த சிவப்பு, ஆரஞ்சு, மெஜந்தா வண்ணங்களில் குளிர் பானங்கள் விற்கும் கடைகள், ஆற்றிலேயே ஊற்றுத் தோண்டி தண்ணீர் விற்கும் கடைகள் என்று களைகட்டியிருக்கும்.

‘பீம புஷ்டி அல்வா’ என்று எழுதியிருக்கும் கடையில் ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருப்பார்! அல்வாவுக்கும் புஷ்டிக்கும் என்ன சம்பந்தம்? அல்வா சாப்பிட்டு, புஷ்டியாகலாம் என்றால் அந்தக் கடைக்காரர் ஏன் இப்படி இருக்கிறார்? இன்றுவரை புரியாத புதிர்.

இக்கரையிலும் அக்கரையிலும் இருக்கும் இரண்டு தியேட்டர்களைத் தவிர, பொழுதுபோக்குவதற்கான எந்த அம்சமும் இல்லாத ஊர். அதனால் தீபாவளி, பொங்கலுக்கு எடுக்கும் துணிகளைக்கூட போட்டுச் செல்ல வழியிருக்காது. ஒவ்வொரு நாளும் நல்ல துணிகளை உடுத்தக்கூடிய வாய்ப்பாக எண்ணி, அலங்காரத்தில் இறங்கிவிடுவார்கள்.

சுவாமி அலங்காரத்தைப் பார்த்துவிட்டு, தின்பண்டம் சாப்பிட்டு, ராட்டினம் சுற்றி முடித்த பிறகு வீடு திரும்புவார்கள். நிறையப் பேர் வீட்டில், சாப்பிட்ட பிறகு மீண்டும் ஆற்றுக்குக் கிளம்புவார்கள். விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம், சொற்பொழிவு, குலேபகாவலி, பாண்டுரங்கன் என்று லேட்டஸ்ட் (!) படங்கள் திரையிடப்படும். ஆற்றுக்குள்ளேயே தூங்கிவிட்டு, காலையில் திரும்புபவர்களும் இருப்பார்கள்.

மதுரையில் மீனாட்சி-சொக்கர் திருமணம் நடக்கும். மீனாட்சியின் அண்ணன் அழகர். மானாமதுரையில் ஆனந்த வள்ளி- சோமநாதர் என்ற பெயரில் திருமணம் நடைபெறும். அதே அழகர்தான் ஆனந்தவள்ளிக்கும் அண்ணன். திருவிழாவின் எட்டாவது நாள் அண்ணன் அழகருக்குத் தெரியாமல் திருமணம் நடைபெறும்.

பத்தாவது நாள் அழகர் திருமணத்தைக் கேள்விப்பட்டு, தங்கைக்கு சீர் கொடுக்க வருவார். அன்று காலையிலேயே விழா ஆரம்பமாகிவிடும். அழகர் வேகமாக சீர்வரிசைகளைக் கொடுத்துவிட்டு, கோபித்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி, சென்றுவிடுவார். இதைத்தான் ஆற்றில் அழகர் இறங்குகிறார் என்பார்கள். அழகர் இறங்கும் அன்று சம்பிரதாயத்துக்காக வைகை ஆற்றில் தண்ணீர் விட்டிருப்பார்கள். வெயிலுக்கு பானகம், நீர்மோர் எல்லாம் இலவசமாக வழங்குவார்கள்.

பதினோராவது நாள் அன்று அழகர் தசாவதாரம் எடுப்பார். பத்துவிதமாக அலங்காரம் செய்வார்கள். அன்று இரவுதான் திருவிழாவின் ஹைலைட்! சைவம், அசைவம், இனிப்பு, காரம் என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவுகளை ஏராளமாகச் செய்வார்கள். இரவு எட்டு மணிக்கு அத்தனை பதார்த்தங்களுடன் ஆற்றுக்குச் சென்றுவிடுவார்கள். உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள் யார் வந்தாலும் இலை போட்டு, பரிமாறுவார்கள்.

ஆற்றுக்கு நிறைய பெண்கள் வந்திருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக இளைஞர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். நிறைய சாப்பிட்டு, பேசிச் சிரித்து, நள்ளிரவில் வீடு திரும்புவார்கள். அடுத்த திருவிழா வரை அந்த சந்தோஷம் போதுமானது!

Saturday, April 18, 2009

Prodigy எழுத்தாளர் பட்டறை

* குழந்தைகளுக்கான புத்தகங்களை Prodigy மூன்று ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. எழுத்துகள், எண்கள், உருவங்கள் என்று மிகச் சிறிய குழந்தைகளுக்கும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கதை வடிவில் அறிவியல் புத்தகங்களை வண்ணத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 80 பக்கங்களில் அறிவியல், வாழ்க்கை வரலாறு, சரித்திரம், நாடுகள், கண்டங்கள், உயிரினங்கள், பொதுஅறிவு போன்ற பிரிவுகளில் இதுவரை 180 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

* இன்று மாணவர்கள் மத்தியில் Prodigy புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் எளிமையான இந்தப் புத்தகங்களை விரும்பி வாசிக்கின்றனர்.

* இந்த வேளையில் எங்கள் புத்தகங்களை ஆய்வு செய்வது அவசியம் என்று நினைக்கிறோம். மேலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிய விரும்புகிறோம். எனவே கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளுடன் வேலை செய்பவர்கள் என்று பலரையும் அழைத்து ஓர் எழுத்தாளர் பட்டறை நடத்த முடிவு செய்தோம்.

* எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், குழந்தை எழுத்தாளர் ரேவதி, நியூ ஹொரைசான் மீடியாவின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, முதன்மை ஆசிரியர் பா. ராகவன் ஆகியோர் குழந்தைகளுக்கான எழுத்து, புத்தகங்கள், மொழி, எடிட்டிங் போன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

* அறிவியல் இயக்கத்தின் தலைவர் ராமானுஜம், இரா. நடராஜன்,
அ. வெண்ணிலா, யூமா வாசுகி, ஹேமாவதி, மாதவன், அ. வள்ளிநாயகம் ஆகியோர் கலந்துரையாடல்களுக்குத் தலைமை ஏற்கின்றனர்.

* பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் இந்தப் பட்டறையில் பங்கேற்கிறார்கள்.

* நாளை (ஏப்ரல் 19, 2009) சென்னையில் நடைபெறும் இந்தப் பட்டறை குறித்து திங்கள் கிழமை விரிவான பதிவு வெளியாகும்.

Friday, April 3, 2009

டைம் வேஸ்ட் பண்ணிய அம்மா!

கோடை விடுமுறை என்றாலே கொண்டாட்டமாக இருக்கும். ஒரு மாதத்துக்குப் படிக்க வேண்டிய தொல்லை இருக்காது. யூனிஃபார்ம் போட வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் எங்கள் பெரியப்பா, அத்தைகளின் வீடுகளில் இருந்து விடுமுறைக்காக எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு குடும்பமாக வர வர எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. (அம்மாவுக்குத்தான் சமையல் வேலை அதிகம் இருக்கும்.) 8 பேருக்குக் குறையாமல் குழந்தைகள் எப்பொழுதும் எங்கள் வீடுகளில் இருப்பார்கள்.

காலையில் ஆறு மணிக்கு பதநீர் விற்று வரும் சத்தம் கேட்டு, எல்லோரும் விழிப்போம். வேக வேகமாகப் பல் தேய்த்து விட்டு வருவோம். ஆளுக்கு ஒரு மட்டையில் பதநீர் வாங்கிக் குடிப்போம். சில நாள்களில் பதநீர் குடித்ததும், அம்மா வடகம் மாவு கிளறி வைத்திருப்பார். ஆளுக்கு ஒரு கிண்ணமும் ஸ்பூனும் கொடுத்து விடுவார். சிலர் தடி தடியாக மாவை அள்ளி ஊற்றுவார்கள். (அந்த வெயிலிலும் காய்வதற்கு மூன்று நாள்கள் ஆகும்!) சிலர் மிகவும் மெல்லியதாக ஊற்றிக் கொண்டிருப்பார்கள். துணியில் இருந்து எடுப்பதற்குள் பெரும்பாடாகி விடும். எல்லோரும் வேலை செய்து களைத்துப் போய் வீட்டுக்குள் செல்வோம்.

கடைக்கார அப்பத்தா விடம் பனியாரம் அல்லது பருத்திப்பால் வாங்கி வைத்திருப்பார் அம்மா. அதைச் சாப்பிட்டு விட்டு, ஒவ்வொருவராகக் குளிக்கச் செல்வோம். அதிலும் நீயா, நானா போட்டி! இடியாப்பம், ஆப்பம், அப்பம், புட்டு, பூரி, வெந்தயக் களி, பால் பனியாரம், குழிப்பணி்யாரம், கேழ்வரகு ரொட்டி, கொழுக்கட்டை என்று தினம் ஒரு பலகாரமாக அம்மா செய்து வைத்திருப்பார்.

சாப்பிட்டதும் ஆளுக்கு ஓர் அறையாகப் பிரித்துக் கொண்டு வீட்டைப் பெருக்குவோம். கடைகளுக்குப் போகச் சொன்னால் போய் வருவோம். மற்றப்படி எங்களுக்கு வேலை ஒன்றும் கொடுக்க மாட்டார் அம்மா.

பன்னீர் மரத்தடியில் அமர்ந்து கொஞ்ச நேரம் கதை பேசுவோம். திடீர் என்று பாட்டுக்குப் பாட்டு நடத்துவோம். சினிமா பேர் சொல்லி விளையாடுவோம். அம்மா அழைப்பார். நுங்கு விற்பவர் வந்திருப்பார். ஆளுக்கு ஒரு நுங்கை வெட்டிக் கொடுக்க, சாப்பிடுவோம். இந்த மெனுவும் கம்பெனி கொய்யா, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் என்று மாறிக்கொண்டே இருக்கும். மீண்டும் பாண்டி, திருடன் - போலீஸ் என்று விளையாட்டுத் தொடரும்.

மீண்டும் அம்மா அழைப்பார். யாராவது ஒருவர் கடைக்குப் போய் ஐஸ்கட்டி வாங்கி வருவோம். நன்னாரி சர்பத் போட்டுக் கொடுப்பார் அம்மா, அத்தை, சித்தி யாராவது. வெயிலுக்கு ஜில்லென்று குடித்து விட்டு, அரட்டையடிப்போம்.

மதியம் சாப்பிட்டு முடித்ததும் வெயிலில் அலைய விடமாட்டார்கள். பல்லாங்குழி, ஐந்து கல், குச்சி விளையாட்டு என்று உள் அரங்க விளையாட்டுகளில் பிஸியாக இருப்போம். மாலை ஐந்து மணிக்கு ’கடலை... கடலை...’ என்று கோபாலுவின் குரல் கேட்கும். எல்லோரும் வெளியில் வருவோம்.

கறுத்த உடலுக்கு அடிக்கிற சிவப்பு, ரோஸ், பச்சை என்று சேலைகளும், அதே வண்ணங்களில் வளையல், பொட்டு, ரிப்பன் வைத்துக் கொண்டு, ரோஸ் நிற பவுடர் பூசிக்கொண்டு வரும் கோபாலுவை அழைப்போம்.

‘என்ன பேரு சொல்றீங்க? இப்ப நான் சுந்தரியாக்கும்’ என்றபடி வரும் கோபாலுவிடம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, உப்புக் கடலை, பட்டாணி என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாங்கிக்கொள்வோம்.

காலையில் கோபாலுவாக இருக்கும் ஒருவர் மாலையில் சுந்தரியாகும் அதிசயம் அப்போது எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் கேட்டாலும் பதில் இல்லை.

வாசல் தெளித்து, கோலம் போடுவோம். அம்மா காபி தருவார். ஆறு மணிக்கு சூடாகக் கிடைக்கும் அச்சு முறுக்கு, தண்ணீருடன் ஆற்றுக்குக் கிளம்பி விடுவோம். எங்களுடன் அத்தை, பெரியம்மா யாராவது வருவார்கள்.

ஆற்றுக்குச் சென்றதும் முதல் விளையாட்டு ஊற்று தோண்டுவதுதான். யார் விரைவாகவும், பெரிதாகவும் தோண்டுகிறார்கள் என்பது போட்டி! பெரியம்மாவிடம் கதை கேட்போம். நாங்களும் கதை சொல்வோம்.

‘வணக்கம் வணக்கம் மகராஜா. எனக்கிட்ட கட்டளை என்ன ராஜா?’

‘என் பெயர் சொல்லாத எந்தன் மகனை மலைதனில் உருட்டிக் கொன்றுவிடுங்கள்!’

‘வேண்டாம்... வேண்டாம்... மகராஜா... என் மகனை விட்டுவிடுங்கள்...‘

என்று பல்வேறு பாத்திரத்தையும் நடித்துக் காட்டுவாள் சௌந்தரம்.

ரமா, செந்தில் டான்ஸ் ஆடுவார்கள்.

இருட்டத் தொடங்கியதும் அந்த விளையாட்டை ஆரம்பிப்போம். ஒரு பெரிய குச்சியை இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் பிடித்துக்கொண்டு வர, பின்னாடி வரிசையாக மற்றவர்கள். முன்னே செல்லும் நான் ‘ போராடுவோம்... போராடுவோம்... இறுதி வரை போராடுவோம். தமிழக அரசே... தமிழக அரசே... அரிசி விலையைக் குறைத்துவிடு...’ இப்படி கோஷம் போட, மற்றவர்களும் திருப்பிச் சொல்வார்கள். அநேகமாக இந்த விளையாட்டு தினமும் நடைபெறும். ஊர்வலம் முடிந்ததும் ஏதோ சாதித்த திருப்தி கிடைக்கும்!

அப்போது எங்கள் பாண்டி சித்தப்பா உள்ளிட்ட பலர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பள்ளி விட்டு வரும்போது, சித்தப்பா கோஷம் போட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். என்ன கட்சி, என்ன போராட்டம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் சித்தப்பா நல்ல விஷயத்துக்காக எல்லோருக்காகவும் போராடுகிறார் என்பது மட்டும் புரிந்தது. படித்து, பெரியவள் ஆனதும் சித்தப்பா போல போராட வேண்டும் என்று நினைப்பேன். சித்தி உள்பட எங்கள் உறவினர்கள் பலருக்கும் சித்தப்பா பிஸினஸைக் கவனிக்காமல், கட்சி வேலை பார்ப்பது பிடிக்காது. அதனால் இந்த விளையாட்டை இருட்டில், ஆற்றுக்குள் மட்டுமே விளையாடுவோம்.

சாமி உண்டு என்று பல நாள்கள் நாங்கள் சித்தப்பாவிடம் வாதாடுவோம். எங்களை அலட்சியம் செய்யாமல், எங்களுக்குப் புரியும் விதத்தில் விஷயங்களைச் சொல்வார் சித்தப்பா. அதில் எங்களுக்கு உடன்பாடு வராவிட்டாலும் சித்தப்பாவை மிகவும் பிடிக்கும். அதே போல அவர் சார்ந்திருந்த கட்சியையும்!

எட்டு மணிக்கு வீடு திரும்புவோம். உள்ளூரில் நிறைய உறவினர்கள் இருப்பதால் யாராவது வீட்டுக்கு வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஒரு மணி நேரம் அரட்டை! ஒண்பது மணிக்கு அம்மா சாப்பிட அழைப்பார்.

மதியம் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதம் தான் எல்லோர் வீட்டிலும் இரவு உணவு. குழம்பு, காய் எல்லாம் சேர்த்து சுண்ட வைத்த குழம்பு, வடகம், மோர் மிளகாய், கொத்தவரைவற்றல், துவையல், ஊறுகாய் என்று விதவிதமான சைட் டிஷ்கள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஜில்லென்ற பழைய சாதம் சாப்பிட்டு சிறிது நேரத்தில் நாள் முழுவதும் உழைத்த(!) களைப்பில் எல்லோரும் பேசிக் கொண்டே தூங்கி விடுவோம்.

இன்று என் மகனிடம் இந்த விஷயங்களை மிகவும் ரசித்துச் சொன்னேன்.

‘ம்ம்... அந்தக் காலத்துல டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் இல்லாததால ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணிருக்கீங்கம்மா!’

0

Friday, March 6, 2009

ஏலம் போனவை பொருள்கள் மட்டுமா?

தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகாலம் இனவெறிக்கு எதிராகவும், இந்தியர்களின் உரிமைக்காகவும் போராடி வெற்றி கண்டார் காந்தி. அவர் வக்கீல் தொழில் பார்த்த நேரத்தை விட பொதுச்சேவைக்கு செலவிட்ட நேரம்தான் அதிகம். இதனால் அவர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போதும் தான் செய்யும் சேவைக்கு எதையும் எதிர் பார்த்ததில்லை.

தென்னாப்பிரிக்கப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு, இந்தியாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் காந்திக்கு பரிசுப் பொருள்களுடன் அவரது வீட்டுக்கு வந்தனர்.

‘காந்திஜி, உங்களைப் பற்றி நன்கு தெரியும். நீங்கள் எந்தப் பொருளையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் இது எங்களின் அன்பு. இதை உங்களால் நிராகரிக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு, பரிசுப் பெட்டியை வைத்துவிட்டுச் சென்று விட்டனர்.

பெட்டியைப் பிரித்துப் பார்த்தால் விலையுயர்ந்த வைரம், ரத்தினம், மரகதக் கற்கள் மின்னிக்கொண்டிருந்தன. இவை தவிர, ஐம்பத்திரண்டு பவுனுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் அதில் இருந்தது.

’பொதுச்சேவைக்குப் பணமாகப் பெறாமல், பரிசாகப் பெற்றாலும் அதுவும் ஊதியம் தானே! அப்படி இந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டால் இது எப்படிப் பொதுச்சேவையாகும்? மக்களின் அன்பை மட்டுமே என்னால் பரிசாகப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்று உறுதியுடன் இருந்தார் காந்தி.

தன் குழந்தைகள், மனைவியின் சம்மதத்துடன் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஓர் அறக்கட்டளை தொடங்கி, அதற்கு இந்த விலைமதிப்பு மிக்கப் பரிசுப் பொருள்களை உயிலாக எழுதி வைத்துவிட்டார்.

உண்மை, எளிமை, நேர்மை, உயிர்களிடத்தில் அன்பு, பொறுமை ... இப்படி காந்தி தன் வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எத்தனையோ கருத்துகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது கொள்கைகளைத்தான் நம்மால் காப்பாற்றவோ, பின்பற்றவோ முடியவில்லை. அவரது செருப்பு, கண்ணாடி, கடிகாரம், குவளை போன்ற பொருள்களையாவது காப்பாற்றலாம் என்று அரசியல்வாதிகளும், மக்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் போலிருக்கிறது!

காந்தி பயன்படுத்திய பொருள்கள்தான் முக்கியம் என்று நினைத்தால், அதையாவது ஒழுங்காகப் பாதுகாத்திருக்கக்கூடாதா? இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியாளர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? எப்படி இந்தப் பொருள்கள் நாடு கடந்து சென்றன? காந்தி இறந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சர்ச்சை! லஹோ ரஹோ முன்னாபாய் படத்தில் நடித்ததற்காக சஞ்சய் தத்தில் இருந்து மாறுவேடப் போட்டியில் காந்தி வேஷம் போட்ட குழந்தை வரை கருத்துக் கேட்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள்!

மும்பை தாக்குதல் போல ஏலம் விஷயத்தில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த மீடியாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஜய் மல்லையா!

Monday, February 23, 2009

நாட்டுடைமை... சரியான விஷயம்தான்!

ஒரு முறை அழ. வள்ளியப்பா இலக்கியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து
ரயில் நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தார் நிகழ்ச்சி அமைப்பாளர்.

‘சார், நான் ஒரு பாட்டு எழுதியிருக்கேன். கேட்கறீங்களா?’ என்றார் அமைப்பாளர்.

‘தாராளமா சொல்லுங்க’ என்றார் வள்ளியப்பா.

அமைப்பாளர் முழுப் பாடலையும் படித்துக் காட்டினார்.

வள்ளியப்பா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.

‘சார், எப்படி இருந்தது என் பாடல்?’

‘ரயில்ல ஏறிட்டுச் சொல்லட்டுமா?’

வள்ளியப்பா ரயிலில் அமர்ந்ததும், அமைப்பாளர் , ‘சார் என் பாட்டு?’

’உங்க பாட்டுன்னா உடனே கருத்து சொல்லிருப்பேன். என் பாட்டை என்கிட்டேயே கருத்துக் கேட்டால் எப்படி?’ என்றார் வள்ளியப்பா.

*

வள்ளியப்பாவின் பாடல்களை அவருடைய பெயரைக் குறிப்பிடாமலே பயன்படுத்திக் கொண்டவர்கள் அநேகம். இனி எல்லோரும் அவர் பெயரைப் போட்டே பயன்படுத்திக்கொள்ளலாம். அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட இருக்கின்றன.

Saturday, January 31, 2009

வித்தை காட்டிய விருந்தாளிகள்!



ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வேடந்தாங்கலுக்கு வந்த பறவைகள் பற்றிய தகவல்கள் பத்திரிகையில் இடம்பெறும். கட்டாயம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் செயல்படுத்தியதில்லை. சென்ற வாரம் எந்தவித திட்டமிடலும் இன்றி திடீரென்று கிளம்பினோம். தாம்பரத்தில் காலை பதினோரு மணிக்கு பஸ் ஏறினோம். 12 மணிக்கு செங்கல்பட்டு போய்ச் சேர்ந்தோம். மதிய உணவு வாங்கிக்கொண்டு, வேடந்தாங்கல் பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏற வேண்டியிருந்தது.

வழியில் பல கிராமங்கள். பொட்டல் வெளிகள். காடுகள். ஏரிகள். கோயில்கள். கடைகள். ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் வேடந்தாங்கல் வந்து இறங்கினோம். நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்தில் பறவைகளைப் பற்றிய பொதுவான விஷயங்கள் விளக்கிச் சொல்லப்பட்டிருந்தன. வாடகைக்கு பைனாகுலர்கள் கிடைக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.

ஏரிக் கரையிலிருந்து ஐம்பது அடி தூரத்தில் நாரைகள் (Stork) கம்பீரமாக அமர்ந்திருந்தன. இயற்கை சூழலில் மிக அருகில் அவ்வளவு பெரிய பறவைகளைப் பார்த்தது இதுதான் முதல் முறை. 70 சதவிகிதம் வெள்ளையும் வாலில் இளஞ்சிவப்பும் கழுத்து, கால்களுக்கு அருகில் கறுப்பும் கலந்த அற்புதமான இயற்கை கலவை. நீளமான, மெல்லிய உறுதியான கால்கள். இரையைச் சுலபமாகப் பிடிக்கும் விதமாக நீண்ட, கூர்மையான அலகு.

திடீரென்று ஒரு நாரை இறக்கைகளை விரித்தபடி நின்றது. எல்லோரும் வேகமாக கேமராவில் பிடித்தனர். சட்டென்று அப்படியே மேலே எழுந்து வேகமாக ஒரு ரவுண்ட் அடித்தது. பறக்கும் போது இறக்கையைச் சுருக்கிக்கொண்டு, கால்களைப் பின்னோக்கி நீட்டியபடி சென்றது. ஓர் அம்பு பறந்து சென்றது போன்ற பிரமை உண்டானது.

நாங்கள் புறச் சூழல் மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பறவை சர்ரென்று பறந்து, தண்ணீரில் ஏதோ ஓர் இரையை நொடியில் எடுத்துக் கொண்டு, மீண்டும் கூட்டுக்குச் சென்றது.

பறவைகள் யாரையும் கண்டுகொள்ளாமல், தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருந்தன. ஆனால் நம் பார்வைக்கு, பறவைகள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டுவதாகவும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாகவும் தோன்றியது. கேமராவுக்கு நாரையைப் போல் மனிதர்கள் கூட ஒத்துழைப்பு தந்திருக்க மாட்டார்கள்.

நுழைந்த இடத்திலேயே வெகு நேரம் நின்று விட்டோம் என்பதை உணர்ந்ததும், நகர ஆரம்பித்தோம். தண்ணீருக்கு நடுவில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் படர்ந்த பச்சை மரங்கள்.( மாங்குரோவ் காடுகள்). ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன. பெண் பறவைகள் அடை காத்துக்கொண்டிருக்கின்றன. ஆண் பறவைகள் உணவு தேடி வந்து கொடுக்கின்றன.

ஏரியின் கரையோரம் நிறைய இருக்கைகள். நடுநடுவே ஐம்பது பேர் உட்காரும் அளவுக்கு சிமெண்டால் கட்டப்பட்ட இடங்கள். ஏராளமான குப்பைத் தொட்டிகள். போதுமான கழிவறைகள், சுத்தமாகவும் இருந்தன! சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. பறவைகளை ஏரியல் வியூவில் பார்க்க வசதியாக இரண்டு பெரிய டவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

நாரை இனத்தைச் சேர்ந்த கார்மரண்ட், இக்ரெட் போன்ற பறவைகள் மரங்களில் தென்பட்டன. வித்தியாசமான வாத்துகள் தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தன. பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டோம்.

வேடந்தாங்கலுக்கு வந்திருக்கும் பறவைகள் எல்லாம் வெளிநாட்டு விருந்தாளிகள். பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இந்த விருந்தாளிகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. எல்லாப் பறவைகளும் ஒரே நாட்டைச் சேர்ந்தவை அல்ல. சைபீரியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என்று பல நாட்டிலிருந்தும் பறவைகள் வந்து ஒற்றுமையாகத் தங்கி, குடும்பம் நடத்தி, இனப்பெருக்கம் செய்து, புதிய உறுப்பினர்களுடன் தங்கள் சொந்த மண்ணை அடைகின்றன.

பறவைகள் ஏன் இவ்வளவு தூரம் இடம் பெயர்கின்றன?

பருவ நிலை மாற்றம், இனப் பெருக்கம், உணவு போன்றவை தான் பறவைகளின் இடப் பெயர்ச்சிக்கு முக்கியமான காரணங்கள். சைபீரியா போன்ற இடங்களில் இது கடும் குளிர் காலம். உணவும் சரியாகக் கிடைக்காது. இனப் பெருக்கம் செய்ய முடியாது. அதனால்தான் பறவைகள் தங்களுக்கு ஏற்றச் சூழல் தேடி பல்லாயிரம் மைல் தூரம் கடந்து வருகின்றன.

பறவைகள் பயணிக்கும் பாதையை எப்படி நினைவு வைத்துக்கொள்கின்றன என்பது இன்னும் அறிவியலுக்கு சவாலான கேள்வியாக இருக்கிறது.

நிறைய மக்கள் வருகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் நீண்ட நேரம் தங்குகிறார்கள். பலர் சட்டென்று பார்த்துவிட்டு, சென்று விடுகிறார்கள். மாலை 5.45 - 6.30 வரை உள்ள காட்சிதான் வேடந்தாங்கலின் ஹைலைட்.

நாங்கள் டவர் மீது ஏறி நின்றோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பஞ்சு வெடித்த பருத்திக் காடு போல பறவைகள் மரங்களில் பூத்திருந்தன. இப்போது பறவைகளின் காச் மூச் சத்தம் அதிகமாகக் கேட்டது. சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்தது. ஐம்பது, நூறு என்ற கணக்கில் பல விதமான பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடுகளை நோக்கித் திரும்பிய காட்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

இருள் சூழ, பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பனி பெய்ய ஆரம்பித்தது. பறவை தோழர்களைப் பிரிய மனமின்றி, கிளம்பினோம். பறவைகளின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. வாசலுக்கு வந்து புறச் சூழலில் ஐக்கியமாக நேரம் பிடித்தது.

படங்கள் : முகில்

Tuesday, January 27, 2009

எமர்ஜென்சி சர்வீஸ்!

நேற்று புது சிலிண்டர் மாற்றினேன். உடனே 'சர்ர்ர்ர்ர்ர்' என பெருஞ்சத்தத்துடன் கேஸ் வெளியேறியது. அதன் வேகம் கொஞ்சம் அச்சத்தைத் தந்தது. உடனே எமர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்தேன். புகாரை வாங்கிக்கொண்டு, 'இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒருவர் வந்து பார்ப்பார்' என்றனர்.

வரவில்லை. காலை உணவை வெளியில் வாங்கி சாப்பிட்டோம்.

நேரம் கடந்துபோனது. மூன்றரை மணிநேரம் தாண்டியும் ஒருவரும் வரவில்லை. மீண்டும் எமர்ஜென்சி சர்வீஸ்க்கு தொடர்பு கொண்டேன். பழுது பார்ப்பவரின் பெயரையும், மொபைல் எண்ணையும் கொடுத்தனர். அவரைத் தொடர்புகொண்டேன்.

‘ஆமாங்க. ஒன்பது மணிக்கு சொன்னாங்க. ரொம்ப தூரம். வர்றது கஷ்டம்ங்க. நீங்களே ரோட்டில நின்னு பாருங்க... யாராவது வருவாங்க. இண்டேன் ஆளுங்க வரலைன்னா, பாரத் கேஸா இருந்தாக்கூட சரி பண்ணிடுவாங்க’ என்று பொறுப்போடு பதிலளித்தார் அவர்.

‘என்ன இப்படிச் சொல்லறீங்க?’

‘சரி, ஈவ்னிங் 4 மணி வாக்கில வரேன்’ என்றபடி போனை வைத்துவிட்டார்.

மதிய உணவையும் வெளியில் வாங்கி சாப்பிட்டோம்.

மாலை ஐந்தரை மணி ஆகியும் அவர் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டேன்.

‘என்னோட வண்டி ரிப்பேர். இப்பதான் சரி பண்ணினேன். நீங்களே சிலிண்டர் கொண்டு வர்றவங்ககிட்ட காட்டி சரி பண்ணிக்குங்க...’ என்று மிகப்பொறுப்புடன் பதில் வந்தது.

‘அதெல்லாம் முடியாது. நீங்க எப்ப வர்றீங்க?’

‘சரி, ஆறு மணிக்கு வரேன்...’

ஏழு மணி ஆகியும் வரவில்லை.

மீண்டும் போன் செய்தேன்.

‘நான் இப்ப அசோக் பில்லர்ல இருக்கேன். நீங்க சிலிண்டரை இங்க கொண்டு வந்தா நிமிஷத்துல சரி பண்ணித் தரேன்...’ என்ற அற்புதமான தீர்வை அவர் வழங்கினார். வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அசோக் பில்லருக்கு சிலிண்டரை முதுகிலோ பைக்கிலோ கட்டி எடுத்து வர வேண்டுமாம். எவ்வளவு ஈஸி!

‘அதெல்லாம் முடியாது. கம்ப்ளைண்ட் செஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு? இதான் எமர்ஜென்சி சர்வீஸா?’

‘அவ்வளவு தூரத்துக்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகும்? யோசிக்காதீங்க நீங்க. சரி அரை மணி நேரத்துல வரேன்.’

எட்டு மணி ஆகியும் வரவில்லை. மீண்டும் சர்வீஸ் செண்டருக்குத் தொடர்பு கொண்டேன்.

‘காலையில பத்து மணிக்கே அங்க வந்திருக்கணுமே! சரி, நான் மறுபடியும் சொல்றேன். கண்டிப்பா வருவார்.’

’சார், காலையிலிருந்து ஒரு காபி கூட போட முடியாமல் இருக்கோம். எமர்ஜென்சியைக் கூட இப்படித்தான் ட்ரீட் பண்ணுவீங்களா?’

‘இல்ல... இல்ல... வருவார்.’

சில நிமிடங்களில் அவரிடமிருந்தே போன்.

‘ஹலோ... நீங்களே டெஸ்ட் பண்ணி வாங்கியிருந்தா இந்த பிரச்னையே இல்லை. ரொம்ப இம்சையா இருக்கு. சரி, எப்படி வரணும்?’

சொன்னேன்.

இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தார். அவசரப் புகார் கொடுத்து 12 மணி நேரம் நிறைவடைந்திருந்தது.

‘என்னங்க இப்படியா இருக்கறது? உங்களுக்கு அவசரம்தானே? 'உடனே வாங்க சார், கவனிச்சுக்கறேன்'னு நீங்க சொல்லியிருந்தால் உடனே ஓடி வந்திருக்க மாட்டேனா? புரியாதவங்களா இருக்கீங்க!’

’என்ன கவனிக்கணும்?'

‘பெட்ரோல் காசு, டிப்ஸ்... இப்படி’ என்றபடி சிலிண்டருக்குள் வாசர் போட்டார். அடுத்த நொடி சரியானது. ஒரு நிமிட வேலைதான். டியூப் மாற்ற வேண்டும் என்றார். மாற்றினோம். பணத்தை வாங்கிக்கொண்டு, புலம்பியபடியே சென்றார்.

சிலிண்டர் பிரச்னை ஒரு புறம்... பழுது பார்ப்பவரின் பொறுப்பான நடவடிக்கை இன்னொரு புறம்... ஒரு நாள் விடுமுறை பிரமாதம்!

படிப்பினைகள்:

* நம் ஊரில் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டால் அது ‘பிசி'யாகவே இருக்கும். தொடர்ந்து - தொடர்ந்து என்றால் இருபது முப்பது முறை - முயற்சி செய்தால் மட்டுமே எடுப்பார்கள்.
* அழைப்பு மையத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக அல்லது அப்படியிருப்பது போல காட்டிக்கொண்டாலும், உங்களுக்கு சர்வீஸ் செய்ய வேண்டியவர் அவர் அல்ல - அவர் ஓர் தனிப்பிறவியாகவோ அதிசயப்பிறவியாகவோ இருப்பார்.
* ஒருவேளை அவரது எண்ணையும் அறிந்து நீங்கள் தொடர்புகொண்டால் - தான் வராமலேயே அந்த விஷயத்தை எப்படி முடிப்பது என்று அருமையாக ஆலோசனை சொல்வார். அப்போது நீங்கள் தயங்காமல். ‘உடனே வந்தால் கவனிக்கிறோம்' என்று உத்தரவாதம் வழங்கிவிட வேண்டும். இல்லையென்றால் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகும். சில வேளைகளில் சிலிண்டர் கசிவு அதிகமாகி வெடித்துத் தொலைத்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. நீங்கள் கவனக்குறைவாகக் கையாண்டதாகக் கூறப்படும்!
* பழைய டியூப் ஒழுங்காகவே இருந்தாலும், 'புது டியூப் மாற்றாவிட்டால் விபத்துதான்' என்ற ரீதியில் பயமுறுத்தி விற்று, கமிஷன் பார்ப்பார்கள்.
* தீப்பெட்டி உள்பட பரிசோதனைக்குரிய எந்தப் பொருளையும் அவர்கள் எடுத்து வரமாட்டார்கள். எல்லாவற்றையும் நம்மையே கேட்பார்கள்.
* 12 மணி நேரம் தாமதமாக வந்தாலும் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல், டிப்ஸ் குறைவாக இருக்கிறது என்று முனகுவார்கள். சண்டையும் போடக்கூடும்!
* சிலிண்டர் போன்ற அபாயமும் அவசரமும் நிறைந்த விஷயங்களில் கூட கேஸ் லீக் ஆகாமல் இருப்பதற்கான ரப்பர் வாசர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யாமலேயே இண்டேன் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பொறுப்பில்லாமல் சப்ளை செய்வார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
* இதை ஓரளவு தவிர்க்க ஒரே வழி... மாற்று சிலிண்டர் வாங்கும்போதே அதை டெஸ்ட் செய்து, லீக்கேஜ் இல்லை என்று உறுதி செய்தபின் வாங்குவது. இதை டெலிவரி ஆசாமியையே செய்யச் சொல்லுங்கள். எப்படியும் அவருக்கு டிப்ஸ் தருவது கட்டாயம். சிலிண்டர் மூடியைத் திறந்த பின், சில துளிகள் நீர் விட்டு, நீர்க்குமிழிகள் வருகிறதா என்றும் பார்த்தும் அறியலாம். ஒரு சிலிண்டர் மாற்ற இவ்ளோ பிரச்னையா... ஐயோ!