Wednesday, June 9, 2010

இவர்களா காப்பாற்றப் போகிறார்கள்?

அந்தக் கொடூரம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் மரண ஓலங்கள் நிற்கவில்லை. உயிர் அற்ற உடல்களும் எலும்புக்கூடுகளும் கண் முன்னே வந்து நியாயம் கேட்கின்றன. பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போய்விட்டனர். இந்த 26 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் இல்லை. தண்ணீரிலும் மண்ணிலும் கலந்த நஞ்சால் இன்று பிறக்கும் குழந்தை கூட அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகிக்கு இணையானது இந்தியாவின் போபால்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கொள்கைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்த காரணத்தால் பல நாடுகளும் இதனை அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களின் உயிர் மேல் மதிப்பு இல்லாத இந்திய அரசு இருகரம் நீட்டி, அதனை அரவணைத்தது. நிறுவனம் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தபோது சோதனைக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பு விஷயங்கள் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதை எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் அலட்சியம் தொடர்ந்திருக்கிறது. அந்த அலட்சியத்துக்கு விலையாக ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியாகியிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. கை, கால் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல், கேன்சர், தோல் வியாதிகள் என்று உயிர் பிழைத்த பலரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. 8 பேருக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அளித்த கையோடு, ஜாமீனையும் வழங்கி சாதனை செய்திருக்கிறது நீதிமன்றம்!. மீண்டும் ஒருமுறை இந்திய மக்கள் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் தலைகுனிந்து நிற்கிறார்கள். கால் நூற்றாண்டு போராட்டத்துக்கு ஒன்றும் பலன் இல்லை.

மிகக் குறைந்த காப்பீட்டுத் தொகை வழங்கியதோடு எங்கள் கடமை முடிந்தது என்று கழன்றுகொண்டுவிட்டது யூனியன் கார்பைட் நிறுவனம். யூனியன் கார்பைடின் தலைவர் வாரன் ஆண்டர்சன்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜாமீனில் வெளிநாடு சென்றுவிட்டார். இதுவரை இந்தியா திரும்பவில்லை. தீர்ப்பு வந்த திங்களன்று வரை சொகுசாக அவருடைய இல்லத்தில் வசித்திருக்கிறார். இப்போது அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. தீர்ப்பில் அவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை! குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவர் மரணமடைந்து விட்டார். மீதி ஏழு பேரும் அந்த நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரிகள்.

மக்களுக்காகத்தான் அரசாங்கம். ஆனால் நீண்ட கால வழக்கு இழுத்தடிப்பு, குற்றவாளிகள் தப்பித்தல் போன்ற காரணங்களுக்கு இந்திய அரசே துணை நின்றிருக்கிறது! இதில் ஒரு குற்றவாளிக்கு பத்மபூஷன் விருது (வழக்கு நடந்ததால் வழங்கப்படவில்லை) வேறு அறிவித்திருக்கிறது!

குற்றவாளிகள் பலரும் இப்போதே முதுமையில் இருக்கிறார்கள். இதற்குப் பிறகு மேல்முறையீடு செய்து, ஒருவேளை தண்டனை கிடைத்தால் அதை அனுபவிக்க யார் இருக்கப் போகிறார்கள்? ருச்சிகா கிர்ஹோத்ரா வழக்கிலும் இதுவே நடந்திருக்கிறது. பணம், அதிகாரம், அரசியல் பலம் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு மிகவும் கேவலமானது.

சொந்த நாட்டு மக்களின் உயிர்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள விரும்பாத இந்திய அரசாங்கமா ஈழத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறது?

1 comment:

Anonymous said...

எங்கள் நாட்டில் எல்லா துறைகளும் கிழிந்து விட்டது இன்னும் எங்கள் வாயை
தவிர... வழிப்போக்கன்...