Tuesday, December 29, 2009

சினிமா கற்பனைக்கே எட்டாத வில்லன்!

சானியா மிர்சாவுக்கு முன்பாகவே ருச்சிகா கிர்ஹோத்ரா டென்னிஸில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கலாம்! ஆனால்...

மீண்டும் ஒரு முறை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு. பிருந்தா காரத் சொல்வதைப் போல வெட்கப்பட வைத்திருக்கிறது.

பத்து வயதிலேயே தாயை இழந்தவர் ருச்சிகா. பாட்டி, அப்பா, தம்பியுடன் சண்டிகரில் வசித்து வந்தார். மகளை வெளிநாட்டில் படிக்க வைத்து, பெரிய ஆளாக மாற்றவேண்டும் என்பது தந்தை கிர்ஹோத்ராவின் ஆசை. ருச்சிகாவின் தோழி ஆராதனா. இவர்கள் இருவரும் வளர்ந்துவரும் டென்னிஸ் வீரர்கள். தினமும் பயிற்சிக்காக ஹரியானா லான் டென்னிஸ் அசோசியேஷனுக்குச் செல்வார்கள். அந்த அசோசியேஷனின் தலைவராக இருந்தார் ஐபிஎஸ் அதிகாரி ரத்தோர். தினமும் பயிற்சி செய்யும் இடத்துக்கு வந்து பார்வையிடுவார்.

தன் மகள் வகுப்பில் படிக்கும் ருச்சிகாவைப் பற்றிக் கேள்விப்பட்ட ரத்தோர், ருச்சிகாவின் தந்தையை அவருடைய வீட்டில் சந்தித்தார். ருச்சிகா மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வருவார் என்றும் வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மறுநாள் நடக்க இருக்கும் கொடூரம் தெரியாமல், மகள் மீது அக்கறை செலுத்தும் அதிகாரியை நினைத்து மகிழ்ந்தார் கிர்ஹோத்ரா.

அடுத்த நாள் ருச்சிகாவையும் ஆராதனாவையும் தன் அலுவலகத்துக்கு அழைத்தார் ரத்தோர். பயிற்சியாளரை அழைத்துவரச் சொல்லி, ஆராதனாவை விரட்டி விட்டார். தனியாக இருந்த 14 வயது ருச்சிகாவை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார். ருச்சிகா போராடிக்கொண்டிருந்தபோது திரும்பி வந்த ஆராதனா அதிர்ந்து போய்விட்டார். மீண்டும் ஏதோ சாக்கு சொல்லி, ஆராதனாவை அனுப்ப நினைத்த ரத்தோரிடமிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

மறுநாள் பயிற்சிக்குச் செல்லவில்லை. அடுத்த நாள் போனபோது மீண்டும் தன் அறைக்கு வரச் சொல்லி ருச்சிகாவுக்குத் தொல்லை கொடுத்தார் ரத்தோர். சிக்கல் பெரிதாவதை உணர்ந்த ருச்சிகாவும் ஆராதனாவும் தங்கள் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். உடனே உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பிறகு ரத்தோர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது. உடனே ஓர் அரசியல்வாதியின் தலைமையில் ருச்சிகாவின் வீட்டு வாசலில் கேவலமாக கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தார் ரத்தோர்.

விசாரணை ஆரம்பம் ஆன உடன் பல விதங்களில் ருச்சிகாவையும் அவள் குடும்பத்தையும் மிரட்ட ஆரம்பித்தார் ரத்தோர். பெண்கள் மீது வழக்கமாகச் சமூகம் சொல்லி வரும் ‘நடத்தை சரியில்லாதவள்’ என்ற குற்றத்தோடு, பள்ளியிலிருந்து நீக்க வைத்தார். விஷயம் அறிந்து எந்தப் பள்ளியிலும் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், மனம் தளராமல் போராட ஆரம்பித்தனர்.

தெலுங்கு, தமிழ் சினிமா இயக்குனர்களின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வில்லத்தனம் காட்ட ஆரம்பித்தார் ரத்தோர். திருட்டு, கொள்ளை, கொலை போன்ற வழக்குகள் ருச்சிகாவின் அப்பா மீதும் அஷு என்ற பத்து வயது தம்பியின் மீதும் போடப்பட்டன. அதே போல வழக்கை உறுதியுடன் நடத்திக்கொண்டிருக்கும் ஆராதனா குடும்பத்தின் மீதும் பொய் வழக்குகள் பதிவாயின.

ஆண்டுகள் சென்றன. வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. ஒருநாள் அஷுவை போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்று அடித்து, துன்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர். ருச்சிகாவின் கண் எதிரில் தம்பியைக் கொடுமை செய்தனர். சிறிது நாள்களில் மீண்டும் வழக்கை வாபஸ் பெறச் செய்வதற்காக அஷு அழைத்துச் செல்லப்பட்டு, தண்ணீர், உணவு இன்றி சித்திரவதைச் செய்யப்பட்டார். ருச்சிகாவின் அப்பாமீது லஞ்சப் புகார் சுமத்தப்பட்டு, வங்கி மேனேஜர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். எஞ்ஜினியரான ஆராதனாவின் அப்பாவும் பதவி இறக்கம் போன்ற தொல்லைகளுக்கு ஆளானார்.

அப்பா, தம்பி, தோழி, அவள் குடும்பம் படும் வேதனைகளைப் பொறுக்க முடியாமல் டிசம்பர் 28, 1993 அன்று விஷம் சாப்பிட்டு, இறந்து போனார் ருச்சிகா. வெள்ளைத் தாளில் கிர்ஹோத்ராவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ருச்சிகாவின் உடலை ஒப்படைத்தனர். அஷுவை அதன்பிறகே வெளியில் விட்டனர். ருச்சிகாவை செல்லமாக அழைக்கும் ரூபி என்ற பெயரில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ரிப்போர்டை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.

பெண்மையைக் கேவலப்படுத்தி, எதிர்காலத்தைச் சிதைத்து, உயிரையும் குடித்த ரத்தோர் ருச்சிகா இறந்த அன்று இரவு பார்டி வைத்துக்கொண்டாடியிருக்கிறார். ஒரே வாரத்தில் ரத்தோருக்கு எதிரான வழக்கு மூடப்பட்டது. ருச்சிகாவின் குடும்பம் சண்டிகரை விட்டு வெளியேறியது. மன உளைச்சலுக்கு ஆளான கிர்ஹோத்ரா வழக்கை விட்டும் ஒதுங்கியிருந்தார். சில மாதங்களில் பஜன்லால் அரசாங்கம் ரத்தோருக்கு கூடுதல் டிஜிபி பதவி கொடுத்து, அழகு பார்த்தது!

காலம் காயத்தை ஆற்றும் என்பார்கள். ஆனால் ருச்சிகா இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும் நீதி கேட்டுப் போராடும் திடம் ஆராதனாவின் அப்பாவுக்குக் குறையவில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு ஆராதனாவின் அப்பாவுக்கு விசாரணை அறிக்கை கிடைத்தது. உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்தது. வழக்கு மீண்டும் நடக்க, ஓம் பிரகாஷ் சௌதாலா அரசாங்கம் டிஜிபி பதவியும் ஜனாதிபதியின் பதக்கமும் கொடுத்து ரத்தோரை கௌரவித்தது! அவரும் எல்லாவற்றையும் ஆண்டு, அனுபவித்து, ஓய்வும் பெற்றுவிட்டார். பாதிக்கப்பட்டது தன் மகளைப் போன்று ஒரு பெண் என்று கூட நினைக்காமல் ரத்தோருக்காக வாதாடி, அவரைக் காப்பாற்றி வந்தது அவருடைய வக்கீல் மனைவி. இன்று அவருடைய மகனும் மகளும் வக்கீல்களாக இருக்கிறார்கள்!

19 ஆண்டுகள் சளைக்காத போராட்டத்துக்குப் பிறகு ஆயிரம் ரூபாய் அபராதமும் 6 மாதம் சிறையுமாக ரத்தோருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது! தீர்ப்பு வழங்கிய 10 நிமிடங்களுக்குள் சிரித்தபடி பெயிலில் வந்துவிட்டார் ரத்தோர்.

ஆளும் கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மக்களவை தலைவர், ஜனாதிபதி என்று உயர் பொறுப்பில் பெண்கள் இருக்கும் இந்த நாட்டில்தான் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு (அ)நீதி கிடைக்க 19 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது.

‘நீதி ஒரு நாள் வெல்லும்’ என்று எந்த நம்பிக்கையில் காத்துக்கொண்டிருப்பது? பெற்ற மகளை இழந்து, குடும்ப நிம்மதியைத் தொலைத்து, வேலை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, பணம் செலவழித்து நீதிக்காகப் போராடியவர்களுக்கு கிடைத்த நீதி இதுதானா?

வாழ வழியில்லாதவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கும், சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லும் நிரபராதிகளுக்கும் இந்தச் சட்டத்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்போது, அந்தச் சட்டத்தைக் கட்டிக் காக்கும் போலீஸ்காரர்கள் தவறு செய்தால் தண்டனை இரட்டிப்பாக வேண்டாமா?

இதுபோன்ற தீர்ப்புகளால் ருச்சிகா, ஜெசிகா, பத்மினி, ரீட்டா மேரி போன்ற பெண்கள் இரையாவதைத் தடுக்க... இல்லை குறைக்கவாவது முடியுமா? ’வசதியும் செல்வாக்கும் இருந்தால் குற்றம் செய்யலாம், தண்டனை கிடைக்காது’ என்ற நிலை இருப்பதால்தான் மேலிடத்தில் இருப்பவர்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். எப்போதாவது மாட்டுகிறார்கள். அரிதாகவே தண்டனை பெறுகிறார்கள். அப்படியும் மேல்முறையீடு செய்து, பெயிலிலேயே காலத்தைக் கழித்து, தப்பி விடுகிறார்கள்!

குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் சட்டம் இருப்பதால்தான் நிறைய வரதட்சணை வழக்குகள் முடங்கிப் போய்விடுகின்றன. மகளின் உயிரை இழந்து, பொருளையும் இழந்து வாழ்பவர்கள் ஒரு கட்டத்தில், ’போனவள் திரும்பவா போகிறாள்’ என்ற விரக்தியில் வழக்கை விட்டு விடுகிறார்கள். குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். பல ஆண்டுக்கணக்கில் போராட யாருக்கு சக்தி இருக்கிறது? விரைவாகக் கிடைக்காத நீதியால் என்ன பயன்?

கண் முன் அநியாயம் நடந்தால் கூட கண்டுகொள்ளாத காலகத்தில், சொந்த வழக்குகளுக்கே போராடத் துணிவு இல்லாத காலத்தில், தன் தோழிக்காக நீதி கேட்டு, நீண்ட காலம் போராடி வருகிற ஆராதனாவும் அவருடைய பெற்றோரும் உதாரண மனிதர்கள்! அநீதிக்கு சாட்சியாக இருந்த ஆராதனாவுக்கும் குடும்பத்துக்கும் நேர்ந்த கஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை. இவர்களைப் பார்க்கும்போது போராட்டத்தில் நம்பிக்கை வருகிறது!

போராட்டம் தொடர்கிறது. இந்த வழக்கை மீண்டும் முறையாக விசாரித்து உரிய தண்டனை வழங்கக்கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறார் ஆராதனா. அவரது மின் அஞ்சல்: ‘joinaradhna4ruchika@gmail.com’

2 comments:

Anonymous said...

சின்ன திருட்டுக்கு அதிகபட்சமாக 3 வருட சிறைத் தண்டனை பிளஸ் அபராதம்...
வழிப்பறிக் கொள்ளைக்கு அதிகபட்சமாக 10 வருட சிறைத் தண்டனை பிளஸ் அபராதம்...
420 ஏமாற்று கேஸுக்கு அதிகபட்சம் 7 வருட சிறைத் தண்டனை பிளஸ் அபராதம்...
இந்தியக் குற்றவியல் சட்டம் இப்படித் தான் சொல்கிறது.
ஆனால் 14 வயது சிறுமியை மானபங்கப் படுத்தி, அவளை தற்கொலைக்குத் தூண்டிய ஒரு ஆணுக்கோ 6 மாத சிறைத் தண்டனையும், வெறும் ஆயிரம் ரூபாய் அபராதமும்தான்! மானபங்கப் படுத்தியதற்கு 2 வருட சிறைத் தண்டனையும், 18 வயதுக்குட்பட்ட ஒருவரை தற்கொலைக்குத் தூண்டியதற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது 10 வருடங்களுக்கு மிகாத சிறை வாசம் அளிக்க வேண்டும் என்கிறது இ.கு.சட்டம்.
இந்தியா?!

அழகன் said...

நம் நாட்டில் பணம்,செல்வாக்கு உள்ளவர்களுக்கு நீதித்துறை செருப்புத்துடைக்கிறது. சாமானியர்களுக்கு இங்கே நீதியும் இல்லை நியாயமும் இல்லை. தொலைக்காட்சியில் அந்த அற்பனை பார்க்கும்போது மிகவும் கோபமடைந்தேன். மனதில் அவனை கழுவிலேற்றி சிறிது சமாதானமடைந்தேன். வேறு என்ன செய்ய?