Wednesday, July 22, 2009

மனிதர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்!

இந்த முறை அதிகாலையில் சூரிய கிரகணம் நிகழ்வதால் சென்ற முறை கிடைத்த த்ரில் இருக்காது என்பது தெரிந்துவிட்டது. அதிகாலையில் மேக மூட்டம் இருப்பதால் தெரியாது என்று சிலர் சொன்னார்கள். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் கிரகணத்தை எதிர் நோக்கி இருந்தேன். காலை 5.45 க்கு எழுந்து பார்த்தால் பறவைகள் எல்லாம் வழக்கத்தை விட அதிகமாகக் கத்திக்கொண்டிருந்தன. சூரியன் இன்னும் வெளிவரவில்லை. காபி குடித்துவிட்டு, சூரியக் கண்ணாடிகளுடன் மாடிக்குச் சென்றோம்.

96 வீடுகள் நிறைந்த இந்தக் குடியிருப்பில் ஒரு வீட்டுக் கதவும் திறக்கவில்லை. அருகில் குடியிருக்கும் கட்டடத் தொழிலாளர்கள் வீடுகளில் ஒரு பக்கம் சமையல், குளியல் என்று வழக்கமான பணிகள் நடந்துகொண்டிருந்தன. பால்காரர், கீரை விற்பவர், அதிகாலையில் வேலைக்குச் செல்பவர்கள் என்று சொற்பமான மனிதர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். வழக்கம் போல பேருந்துகள் சென்றாலும் கூட்டம் இல்லை.

6.20க்கு ஒரு வழியாக மேகத்தின் பிடியிலிருந்து விடுபட்டு சூரியன் சிறிய கீற்றாக வெளிப்பட்டது. வசதியான இடத்தில் நின்றுகொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் வெளிவந்துகொண்டிருந்தது. யாராவது கண்ணில் பட்டால், கண்ணாடியைக் கொடுத்து கிரகணத்தைப் பார்க்கச் சொல்லலாம் என்று பார்த்தேன். ம்ஹூம். ஒருவரும் வெளியில் வருவதாக இல்லை.

தஞ்சாவூரிலிருந்து அப்பாவும், தாம்பரத்திலிருந்து தங்கையும் கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தார்கள். ஒன்றிரண்டு வீடுகளில் இருந்து டிவி சத்தம் பூட்டிய கதவைத் தாண்டி வெளியில் வந்துகொண்டிருந்தது. பண்டிகைகளை டிவியுடன் கொண்டாடுவதைப் போல கிரகணத்தையும் டிவியிலாவது பார்க்கிறார்களே!

7.20க்கு சந்திரனின் மறைப்பிலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக்கொண்டு, சூரியன் வழக்கம்போல தகதகத்தது. 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூரிய கிரகணத்தில் எல்லோரும் வீட்டுக்குள் சிறையிருக்க, எங்கள் குடும்பம் மட்டும் மாடியில் கிரகணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. இன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை!

1 comment:

விழியன் said...

இன்று அதிகாலையில் மெரினாவில் அற்புத காட்சியினை கண்டு ரசித்தேன். காணக்கிடைக்காத அறிய காட்சி.

சில புகைப்படங்களை என் வலைப்பூவில் இட்டுள்ளேன். நேரமிருப்பின் கண்டு களியுங்கள்.

http://vizhiyan.wordpress.com/2009/07/22/solar-eclipse-photographs/