சமீபத்தில் பெண் சாமியார் ஒருவர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டேன், அது குழந்தைகள் தொடர்பானது என்பதால். சாமியார் என்றதும் நான் நினைத்துக்கொண்டிருந்த பிம்பங்கள் எல்லாம் அவரைப் பார்த்ததும் உடைந்து விழுந்தன. பார்லரில் ஒரே அளவாக வெட்டப்பட்ட முடி, வெள்ளை நிறத்தை மேலும் வெள்ளையாக்கும் விதத்தில் பரவலாகப் போடப்பட்ட பவுடர், விலையுயர்ந்த புடைவையாக இல்லாவிட்டாலும் பளபளப்பான பச்சை வண்ண சேலை, காதுகளில் ஒளிவீசும் வைர தோடுகள், அருகில் லேட்டஸ்ட் ஃபேஷனாக இன்னும் ஒரு மூன்றுகல் வைரத் தோடு, தங்க செயின், வலது கையில் தங்க வ்ளையல்கள் இரண்டு, இடது கையில் வெள்ளைக்கற்கள் பதித்த நவீன கைக்கடிகாரம், இரண்டு கைகளிலும் செக்கச்சிவந்த மருதாணி, கால்களின் மேல்புறம் மாங்காயும் கொடிகளுமாக வரையப்பட்ட மெஹந்தி, கால் நகங்களுக்கு பளபளக்கும் வெள்ளி நிற நெயில் பாலிஷ்...எல்லோரும் அவர் காலில் விழுந்து வணங்கும்போதுதான் சாமியார் என்பதே நினைவுக்கு வந்தது.
காபிபொடியில் வரைந்த ஓவியம் ஒன்றை லேமினேட் செய்து வைத்திருந்தார்கள். காபி பொடி என்றதும் அதை எடுத்து முகர்ந்து பார்த்தார். என்னிடம் ’வாசம் வருகிறதா?’ என்றார். நான் ’இல்லை’ என்றேன். இன்னொரு பெண், ’ உங்களால் வாசனையை உணர முடிகிறதா? அந்த சக்தி உங்களுக்கு இருக்கும் அக்கா. எனக்கு இல்லை’ என்றார். அவரிடமிருந்து பதிலில்லை. கடைசியாக ஓர் ஓவியம் லேமினேட் செய்யப்படாமல் இருந்தது. அதை எடுத்து நுகர்ந்தவர், ’இதுலயே லேசாதான் வாசம் வருது. லேமினேட் பண்ணினா எப்படி வரும்? என்றார். எனக்கு அவர் சாதாரணமாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சுற்றியிருப்பவர்கள் கற்பூரம் காட்டாத குறையாக நடந்துகொள்கிறார்கள்.
சாமியார்கள் உருவாவதில்லை!