Friday, July 9, 2010

ஹாஸ்டல் கதைகள் - 2 : வசந்தி அக்கா!

திருட்டு. இந்த வார்த்தைக்கு அர்த்தம் ஹாஸ்டலில்தான் தெரிந்தது. நான் ஹாஸ்டலில் சேர்ந்த மூன்றாம் நாளே சிவப்பு நிறப் புது பிளாஸ்டிக் வாளி காணாமல் போனது. வாளி இல்லாமல் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. யாரிடம் கேட்பது, எப்படிக் கண்டுபிடிப்பது? கனிமொழி அக்காவிடம் சென்றேன். அவர்தான் சேர்ந்த அன்றிலிருந்து என்னிடம் நட்பு வைத்திருப்பவர்.

’பள்ளிக்கூடம் திறந்ததுமே ஆரம்பிச்சிட்டாளுகளா? வா, நான் கண்டுபிடிக்கிறேன்’ என்று அழைத்துப் போனார்.

அங்கு என்னுடைய வாளியைப் போல நான்கு வாளிகள் இருந்தன. நான்கு புது வாளிகள். அதில் மூன்று வாளிகளின் அடியில் பெயிண்ட் மூலம் பெயர் எழுதப்பட்டிருந்தது. கடைசியில் இருந்தது ஒரு வாளி. அடையாளம் எதுவும் இருந்தால் சொல்லச் சொன்னார் கனிமொழி. இப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்காததால் வாளியை அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கவில்லை. எடுத்தவள் சாதாரணமாக நிற்க, தொலைத்தவள் திருதிருவென்று நின்றேன். கனிமொழிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

’என்ன கூட்டம்?’ என்று கேட்டபடி இன்பா அக்கா வந்தார்.

விஷயத்தை அறிந்தவர், “மாதவி உன் கிட்ட பக்கெட் இல்லைன்னுதானே நேத்து மேரி கிட்ட வாங்கிட்டுப் போனே? அதுக்குள்ள எப்படி பக்கெட் வாங்கினே?’

’டேஸ்காலர் பிள்ளை கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன். அவளோட பக்கெட்டுன்னு அடையாளம் சொல்லச் சொல்லு பார்க்கலாம்!’ என்றாள் மாதவி.

கண் முன்னே வாளி இருந்தும் என்னிடம் நிரூபிக்க முடியவில்லை.

பேனா, பென்சில், ரப்பர், உள்ளாடைகள், பணம் என்று திருட்டுப் போகாத பொருள்களே இல்லை என்பது அன்றுதான் தெரிந்தது. பொருள்களில் பெயர் எழுதி வைப்பது, பணத்தை வார்டனிடம் கொடுத்து வைப்பது, உள்ளாடைகளை உள்ளுக்குள் போட்டு, அதன் மீது பாவாடை, தாவணியைக் காய வைக்கும் உத்தி எல்லாம் பிறகு கற்றுக்கொண்டேன்.

இப்படி அவ்வப்போது யாருக்காவது பொருள்கள் காணாமல் போவது தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் விஷயம் பெரிதாகவில்லை.

**

வசந்தி கிறிஸ்டிபாய். பெயரைப் போலவே அவரும் வசீகரிப்பார். நானும் அவரும் ஒரே ஊர் என்பது நான் ஹாஸ்டலுக்கு வந்து ஒருமாதம் கழிந்தபிறகுதான் தெரிந்தது. அதற்குள் நான் கனிமொழியின் அன்புப் பிடியில் சிக்கி விட்டேன். அதனால் நான் அவருடன் நெருக்கமாக முடியவில்லை. ஆனால் அவரே வந்து என்னை அடிக்கடி விசாரிப்பார். ஊருக்குப் போகும்போது பத்திரமாக அழைத்துச் செல்வார். சீனியர் மாணவியாக இருந்தாலும் ஜூனியர் மாணவிகளிடம் அன்புடன் பழகுவதால் வசந்தியை எல்லோருக்கும் பிடிக்கும்.

நன்றாகப் படிப்பார். அழகாக உடுத்துவார். தெரிந்தவர், தெரியாதவர் பார்க்காமல் உதவி செய்வார். பேஸ்கட் பால் கேப்டனாக இருந்தார். ஹாஸ்டல் தலைவிகளில் ஒருவர். வார்டன், ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவி. அவருடன் படித்தவர்களுக்கு அன்புத் தோழி. விடுதியில் இருந்த என்னைப் போன்ற ஏராளமான ஜூனியர் மாணவிகளுக்கு வசந்தி கிறிஸ்டி பாய் ஒரு ரோல் மாடல்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். பார்க்க வந்தவர்கள் உணவு கொண்டு வந்திருந்தால் அன்று விடுதியில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வசந்தி அக்காவின் குழுதான் அந்த வாரம் பரிமாற வேண்டும்.சந்தோஷமாக வந்தார் வசந்தி. வார்டனிடம், ’எங்க அண்ணன் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க. பரிமாறிட்டு மட்டும் போயிடறேன்’என்றார். வார்டன் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.

தன் பொறுப்பை மற்றவர்கள் போலத் தட்டிக் கழிக்காத அவருடைய நடத்தை, அவர் மீது இன்னும் கொஞ்சம் மதிப்பை உயர்த்தியது. வசந்தி அக்காவிடம் படிக்கப் போகும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன்!(ஆசிரியராவதுதான் அவர் விருப்பம்.)

மாலை நான்கு மணிக்கு ஹாஸ்டலில் ஏதோ சலசலப்பு. விஷயம் ஒன்றும் புரியவில்லை. சிலுவைச் செல்வி, அமுதாவுடன் நான் மைதானத்துக்குச் சென்று விட்டேன். மீண்டும் ஐந்து மணிக்குத் திரும்பினோம். கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அமுதா விசாரித்துவிட்டு வந்தாள்.

’இன்னிக்கு வாங்கிட்டு வந்த ஃப்ரான்ஸ்சிஸ்காவோட புதுச் செருப்பைக் காணோமாம்’ என்றாள் எங்களிடம்.

’சரி, ஒரு செருப்புக் காணோம்னா இப்படியா ஹாஸ்டலே பரபரப்பாகும்?’

’செருப்புக் காணோம்ங்கிறதுக்காக பரபரப்பாகலை சுஜா. செருப்பை எடுத்தவங்கன்னு அவ சொல்றவங்களாலதான் பரபரப்பு...’

’யாருப்பா?’

’யார் கிட்டேயும் சொல்ல வேணாம், செருப்பு உனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யறேன்னு வார்டன் சொன்னதால பேரைச் சொல்லல. ஆனால் பிளஸ் டூ படிக்கறவங்கதான் எடுத்திருக்காங்கன்னு மத்தவங்க சொல்றாங்க... ’

’ஃப்ரான்சிஸ்கா அடிச்சுப் பேசறதைப் பார்த்தா அவ பொய் சொல்லற மாதிரி இல்லை...’

’வார்டன் ஃப்ரான்சிஸ்காவையும் அவ குற்றம் சொல்றவங்களையும் தனியா வச்சு விசாரிச்சிருக்காங்க. இவ பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னாளாம். ஆனா அவங்க மாட்டேன்னு சாதிச்சிட்டாங்களாம்...’

உணவுக்காக மணி அடித்தது. அமைதியாகச் சாப்பிட்டோம். சிறப்புப் பிரார்த்தனைக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. மீண்டும் செருப்பு விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

’குரூப் லீடரா இருக்கறவங்கள்ள ஒருத்தர் தானாம் சுஜா!’

’குரூப் லீடரா...? வசந்தி அக்காவா இருக்கக் கூடாது!’

’நானும் அதைத்தான் ஜீசஸ் கிட்ட ஜெபிக்கிறேன்...’ என்றாள் சிலுவைச் செல்வி.

பிரார்த்தனைக்காக மணி அடிக்கப்பட்டது. வாய் மட்டும் கூட்டத்தோடு சேர்ந்து பாடியது. அவர்கள் பேசிய எந்த விஷயமும் காதில் விழுந்ததே தவிர, மனத்தில் பதியவில்லை. திருட்டு என்ற சொல்லைக் கூட மனம் ஏற்கவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று யோசனையில் இருந்தேன். எப்படியோ கூட்டம் முடிந்தது. படுப்பதற்குப் போர்வை, தலையணை எடுப்பதற்காக அறைக்குத் திரும்பினோம். ஃபிரான்சிஸ்கா சந்தோஷத்துடன் செருப்பைக் காட்டி, தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

’நல்லவேளை, யாருன்னு வெளியில் தெரியாமலே செருப்பு கிடைச்சது’ என்று பெருமூச்சு விட்டபடி படுக்கை அறை நோக்கி நடந்தேன். வழியில் கனிமொழி அக்காவைப் பார்த்தேன்.

’சுஜா, விஷயம் தெரியுமா?’

’என்னக்கா?’

’செருப்பை எடுத்தது...’ என்று கிசுகிசுப்பாகச் சொல்ல வந்தார்.

’வேண்டாம்... அதான் கிடைச்சிருச்சே...விட்டுடுங்க...!’

4 comments:

manjoorraja said...

நல்லா எழுதியிருக்கீங்க. ஹாஸ்டல் அனுபவங்களே தனி தான். ஆனால் திருடுகிறார்கள் என்பது கொஞ்சம் கேட்க கஸ்டமாகத்தான் இருக்கு.

soundr said...

//’வேண்டாம்... அதான் கிடைச்சிருச்சே...விட்டுடுங்க...!//

:(


http://vaarththai.wordpress.com

நான் கோயிஞ்சாமி அல்ல said...

நிஜமாகவே நல்ல பதிவு நன்றி பத்ரி

Sathish K said...

ungal ezhuthu merugeri konde pogirathu - karpanai endraalum nijam endraalum.

unga blog layout maathi irukkeenga. enakku white background nalla irunthaa maathiri thonuthu. Right sidela Blog archive keezhe ezhuthukkal udainju irukku.

- Sathish