Thursday, December 4, 2008

ஜந்தர் மந்தர் லெமன் ரைஸ்!

சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய குழந்தைகள் திருவிழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சுமார் ஐம்பது குழந்தைகள் டெல்லியில் உள்ள குழந்தைகளின் வீடுகளுக்கு விருந்தினராகச் சென்றார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இருந்து ஐம்பது குழந்தைகளுடன் இருபது (ரிசோர்ஸ் பெர்சன்ஸ்) பெரியவர்களும் சென்றோம்.

முதல் நாள் புதிய ஊர், தெரியாத பாஷை, பழகாத நபர்களின் வீடுகளுக்குச் செல்ல குழந்தைகள் பயந்தனர். சிலர் அழுதனர். மறுநாள் விருந்தினராகச் சென்ற குழந்தைகளும் உபசரிப்பாளராக இருந்த குழந்தைகளும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். என்ன மொழியில் பேசிக்கொண்டார்கள், எப்படிப் பேசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் கொடுத்த உணவுகளை விரும்பிச் சாப்பிட்டனர்.

ஆனால் பெரியவர்களுக்குத்தான் குளிர் தாங்கவில்லை. சாப்பாடு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மூன்று நாள்கள் பொறுத்திருந்தவர்கள் நான்காம் நாள் பொங்கிவிட்டனர். இவ்வளவுக்கும் சாதம், சப்பாத்தி, டால், சப்ஜி, சாலட் என்று நிறைய ஐட்டங்கள் கண்களைக் கவரும் விதத்தில் அலங்காரத்துடன் இருந்தன. சுவையிலும் குறைவில்லை. ஆனால் எங்கள் நண்பர்களால் சாப்பிட முடியவில்லை. அருகில் இருந்த ஹோட்டல்களிலும் இதே ஐட்டங்கள்தான் கிடைத்தன. வழியே இல்லாமல் திண்டாடினர்.

எல்லோரும் கூட்டம் போட்டு, ஒரு முடிவுக்கு வந்தனர். ஓரளவு ஹிந்தி தெரிந்த நண்பரை அழைத்துக்கொண்டு, சமையற்காரரிடம் சென்றனர். தமிழ்நாட்டுக் காரங்களுக்கு மட்டும் நாளை லெமன் ரைஸும் உருளைக் கிழங்கு கறியும் செய்துகொடுக்கச் சொன்னார்கள். மாலை சமையல் அறைக்குச் சென்று எலுமிச்சம்பழங்கள் வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டார்கள்.

நள்ளிரவு திடீரென்று லைட் எரிந்தது. ஒரு எட்டுப் பேர் கம்பளியைப் போர்த்திக்கொண்டு கிளம்பினார்கள். காரணம் கேட்டேன். ‘ஒரு மணிக்கு சமையற்காரர் வரச் சொன்னார். அவருக்கு எலுமிச்சை சாதம் எப்படிப் பண்றதுன்னு சொல்லிட்டு வரோம்’ என்றனர்.

மறுநாள் வழக்கத்தைவிட எல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள். நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை ஊர்வலம் செல்லும் திட்டம். மதிய உணவைப் பொட்டலமாகக் கட்டிக்கொடுத்து விட்டனர். ஊர்வலம், கூட்டம் எல்லாம் முடிந்து ஒரு பூங்காவில் சாப்பிட அமர்ந்தோம். எல்லோரும் பொட்டலத்தை ஆர்வமாகப் பிரித்தோம். முதல் அதிர்ச்சி சாதம் வெள்ளைவெளேர் என்று எங்களைப் பார்த்து சிரித்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

உடனே ஒருவர் ‘மஞ்சள்தூள் போட மறந்திருப்பான். பிரிச்சு சாப்பிடுங்க’ என்றார்.

நாங்கள் சாதத்தைப் பிசையும் போது உள்ளிருந்து இரண்டாக வெட்டப்பட்ட எலுமிச்சைத் துண்டுகள் வெளியே எட்டிப் பார்த்தன. இன்னொருவருக்கு முழு எலுமிச்சையே எட்டிப்பார்த்தது!

1 comment:

Anonymous said...

dear sujatha

nice. lemon+rice= lemonrice. I was one of the peson, learned how to take a look the lemonrice in another angle.:)hi, hi rama,bahrain