Monday, September 22, 2008

ராவணன்தான் வீரன்!

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

1988. பரபரப்பான தேர்தல் நேரம். தஞ்சாவூருக்குத் தேர்தல் கூட்டத்துக்காக வந்திருந்தார் அவர். காலையில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு அடுத்த கூட்டத்துக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

‘அடுத்த கூட்டம் எத்தனை மணிக்கு காம்ரேட்?'

‘12 மணிக்கு காம்ரேட். காபி, டீ ஏதாவது சாப்பிடுகிறீர்களா?'

‘கூட்டத்துக்குப் போக இங்கிருந்து எவ்வளவு நேரம் ஆகும்?'

‘அரைமணி நேரத்தில் போயிடலாம்.'

‘ஓகே. குழந்தைகள் இருக்கும் தோழர்கள் வீடு அருகில் இருந்தால், அங்கு காபி சாப்பிட்டுப் போகலாமா?'


*
ஞாயிற்றுக்கிழமை. தோழர் ஒருவர் குடும்பத்துடன் வந்திருந்தார். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டபடி டிவியில் ஓடிக்கொண்டிருந்த ராமாயணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பாவும் தோழரும் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எங்கள் வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த அப்பாவும் தோழரும் வேகமாக வராண்டாவுக்குச் சென்றார்கள். நானும் பின்தொடர்ந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.வேகமாக உள்ளே வந்து தகவல் கொடுத்தேன். அடுத்த நொடி தட்டு, பாத்திரங்கள் சமையலறைக்குள் புகுந்தன. உள்ளே நுழைந்தார் அவர்.

மெலிந்த தேகம், சோடா புட்டி கண்ணாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை. எல்லோருக்கும் வணக்கம் சொன்னார். வேகமாக டீவியை அணைக்க ஒரு தோழர் வந்தார்.

'குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். டீவியை அணைக்க வேண்டாம்' என்றார் சிரித்துக்கொண்டே அவர்.

டிவியின் ஒலி மட்டும் குறைக்கப்பட்டது

நாற்காலியில் அமர்ந்தவரிடம் அப்பாவை அறிமுகப்படுத்தினார்கள் கூட வந்த தோழர்கள். என் தங்கைகளையும் விஜயையும் அருகில் அழைத்து, கைகளைப் பிடித்துக்கொண்டார்.

‘நான் உங்களுக்குத் தாத்தா. உங்க பேர் என்ன?'

வரிசையாக எல்லோரும் பெயர்களைச் சொன்னோம்.

‘ராமாயணத்துல உனக்கு யாரைப் பிடிக்கும்?' என்று விஜய்யிடம் கேட்டார்.

‘ராவணன்தான் பிடிக்கும்.'

எல்லோரும் சிரித்தனர்.

‘ஏண்டா விஜய் இப்படி மானத்தை வாங்கறே? ராமன்னு சொல்லக்கூடாதா?' என்றார் அவன் அம்மா.

'எனக்குப் பிடிச்சவரைத்தானே அவர் கேட்டார்' என்று கேட்டான் விஜய்.

வீட்டில் பலத்த சிரிப்பு. அவருக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

இளநீர் கொண்டுவந்து கொடுத்தார் அம்மா.

‘குழந்தைகள் முதலில் சாப்பிடட்டும்' என்றார் அவர்.

எல்லோருக்கும் இளநீர் கொடுத்தபிறகு, அவர் குடித்தார்.

‘குழந்தைகளைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி. வருகிறேன்' என்று கூறி, பத்தாவது நிமிடம் கிளம்பிவிட்டார்.

எல்லோரும் வாசலுக்கு வந்து வழியனுப்பி வைத்தோம். கார் கிளம்பியது.

‘என்ன விசேஷம்? யார் வந்தாங்க?' என்று கேட்டார் பக்கத்துவீட்டு மாமி.

பெயரைச் சொன்னேன்.

‘அப்படியா! அப்படி ஒருத்தர் இருக்காரா? எனக்கு ஒண்ணும் புரியலை போ' என்றபடி உள்ளே சென்றுவிட்டார் மாமி.

அவர், 1978 முதல் 1988 வரை திரிபுராவின் முதலமைச்சராக இருந்த நிருபன் சக்ரவர்த்தி. முதல்வர் பதவியில் இருந்து வெளியேறும்போது இரண்டு ட்ரங்க் பெட்டிகளுடன் கட்சி அலுவலகத்தில் குடியேறினார். பெட்டியில் நான்கு செட் ஆடைகளும் புத்தகங்களும் மட்டுமே இருந்தன.

4 comments:

Anonymous said...

/// அடுத்த நொடி தட்டு, பாத்திரங்கள் சமையலறைக்குள் புகுந்தன.///

காட்சி கண் முன் விரிந்தது.

Tech Shankar said...

குழந்தையின் குறும்பு அசத்துகிறது. அடுத்தவருக்குப் பிடித்ததைச் செய்யாமல், தனக்குப் பிடித்ததை விரும்பிய குழந்தை. அருமை

குகன் said...

தமிழ் உணர்வுள்ள குழந்தை..

ரகுராமன் said...

athu entha vijay ?