Monday, October 26, 2009

ஆடு.. கிடை.. அவலம்!

இரண்டு, மூன்று ஆண்களும் பெண்களும் சேர்ந்து நூற்றுக் கணக்கான ஆடுகளை மேய்த்துக்கொண்டு வருவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். இப்படி யாராவது வந்தால் உடனே எங்கள் பாட்டி, அவர்களை அழைத்து விசாரிப்பார். ‘எப்படிப் பாட்டி அவங்க நம்ம ஊர்க்காரங்கன்னு கண்டுபிடிச்சீங்க?’ என்று ஆச்சரியமாகக் கேட்பேன். ‘இதுல என்ன ஆச்சரியம்? ராமநாதபுரம் வறட்சியான பூமி. அங்கேயிருந்துதான் ஆட்டுக்காரர்கள் எல்லாம் மத்த இடங்களுக்கு வருவாங்க. அதனாலதான் எந்த ஊருன்னு விசாரிச்சேன்’ என்பார்.

ஆடுகளை வைத்துக்கொண்டு எப்படிப் பிழைப்பார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் விசாரித்தேன். ‘ஆடுகள்தான் இவங்க சொத்து. அறுவடை முடிந்த நிலங்களில் ஆடுகளை, கிடை போடுவார்கள். ஆடுகள் அங்கிருக்கும் புல்லைச் சாப்பிட்டுவிட்டு, புழுக்கைகளைப் போடும். அது நிலத்துக்கு நல்ல உரமாகும். இதுக்காக கிடை போடுகிறவர்களுக்கு பணம் அல்லது தானியம் கொடுப்பார்கள். கொஞ்ச காலம் சென்றதும் அடுத்த ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள்’ என்றார் அம்மா.

நூற்றுக்கணக்கான ஆடுகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் இவர்களுக்கு நிலையான இருப்பிடம் கிடையாது. சூரியன் உதித்தது முதல் இரவு வரை ஆணும் பெண்ணும் வேலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கடுமையான உழைப்பு. இரவிலாவது நிம்மதியாகத் தூங்க முடியுமா என்றால் முடியாது. பட்டியில் அடைபட்டிருக்கும் ஆடுகளை நாய், நரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இரவில் சுடு சோறும் காலையில் பழைய சோறும்தான் அன்றாட உணவு.

இவர்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நீண்ட காலமாகவே இருந்தது. ஏதாவது விசாரிக்கலாம் என்றால் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்காது. சில நிமிடங்களில் கடந்து சென்று விடுவார்கள். அவர்கள் இருப்பிடம் ஊரை விட்டுத் தள்ளி இருக்கும். சென்ற ஆண்டு கீதாரி என்ற புத்தகம் கிடைத்தது.

ராமு கீதாரிக்கும் இருளாயிக்கும் ஒரு மகள். ஆதரவு அற்ற வெள்ளைச்சாமியை வளர்க்கிறார்கள். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. வெள்ளைச்சாமியும் வளர்ந்து, அவனுக்கு என்று ஆடுகள் சேரும் அளவுக்கு வந்துவிட்டான். அந்த நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி, ராமு கீதாரியின் குடிசைக்கு அருகில் வந்து பிரசவ வலியில் துடிக்கிறாள். ஒரே நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. ஊர்க்காரர்கள் யாரும் குழந்தைகளைப் பராமரிக்க முன்வராததால், ராமு கீதாரியும் வெள்ளைச்சாமியும் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறார்கள்.

சிவப்பி, கரிச்சா என்ற இரண்டு குழந்தைகளுக்கும் ஆறு வயதாகும்போது சிவப்பியை சாம்பசிவம் வளர்ப்பதாக அழைத்துச் செல்கிறார். கரிச்சாவுக்கு ஒன்பது வயதாகும்போது மகளோடு இருக்க வேண்டிய கட்டாயம் ராமு கீதாரிக்கு இருளாயிக்கும். ஒன்பது வயது கரிச்சா, வெள்ளைச்சாமி சித்தப்பாவோடு தங்கி விடுகிறாள். இருளாயி செய்த அத்தனை வேலைகளையும் பார்க்கிறாள். சிவப்பியும் சாம்பசிவம் வீட்டில் எந்நேரமும் வேலை வேலை என்று இருக்கிறாள். கரிச்சாவுக்கு மாப்பிளை பார்க்கிறார் ராமு கீதாரி. வெள்ளைச்சாமியிடம் இருக்கும் கரிச்சாவை சந்தேகப்படுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். உடனே வெள்ளைச்சாமிக்கும் கரிச்சாவுக்கும் திருமணம் செய்கிறார்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில். சந்தோஷமாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. வளர்த்த தகப்பனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிவப்பி இறந்து போகிறாள். கரிச்சா உடைந்து போகிறாள். மனம் மாற்றத்துக்காக வேறு ஊருக்குச் செல்கிறார்கள். அங்கு வெள்ளைச் சாமியின் உறவினகள் வருகிறார்கள். கரிச்சாவுக்கு குழந்தை இல்லை என்று தூற்றுகிறார்கள். மனம் ஒடிந்த கரிச்சா ராமு கீதாரியிடம் வந்து சேர்கிறாள். வந்த பிறகுதான் அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. வெள்ளைசாமி வந்தானா? கரிச்சா என்ன ஆனாள்? என்பதுடன் நாவல் நிறைவடைகிறது.

கதையாக இருந்தாலும் நாடோடிகளாக வாழும் இடையர்களின் வாழ்க்கையை முகத்தில் அறைந்தார்போல சொல்கிறது இந்த நாவல். அடுத்தவர்களை நம்பியே இவர்களின் வாழ்க்கை இருக்கிறது. கிடை போடாமல் இவர்களால் வேறு எங்கும் தங்க முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. நிலச் சொந்தக்காரர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும். யாராவது அடித்தாலும் ’நாம் எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறோம்’ என்று எதையும் பொறுத்துக்கொள்வார்கள். குழந்தைகளைப் படிக்க வைப்பது கஷ்டம். ஆட்டுக்கு நோய் வந்தால் கூட்டம் கூட்டமாக மடிந்து போகும். ராமு கீதாரி, வெள்ளைச்சாமி, கரிச்சா, சிவப்பி, இருளாயி என்ற அத்தனை பாத்திரங்களும் நம் இயல்பு வாழ்க்கையைப் புரட்டி போட்டுவிடுகின்றன. இடையர்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்
சு. தமிழ்ச்செல்வி.

கீதாரி வெளியீடு : மருதா பதிப்பகம்

Monday, October 19, 2009

ஆண் இனம் அழிவை நோக்கியா?

உயிர்களின் அடிப்படை அலகு செல். ஒவ்வொரு செல்களின் உள்பிரிவிலும் குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்களில் மரபணுக்கள் (genes) இருக்கின்றன. இந்த மரபணுக்கள்தான் பரம்பரை குணங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் சாதனங்கள். உங்கள் மூக்கு அப்பா போலவா, கண்கள் அம்மா போலவா, குரல் அத்தை போலவா என்று நிர்ணயிப்பது மரபணுக்களே! மனித செல்லில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் 22 ஜோடி உடலின் குணநலன்களைக் கட்டுப்படுத்துகின்றன. மீதி உள்ள ஒரு ஜோடி நீங்கள் பெண்ணா, ஆணா என்பதை நிர்ணயிக்கிறது. பெண்களுக்கு XX குரோமோசோம்கள், ஆண்களுக்கு XY குரோமோசோம்கள். பிறக்கும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயம் செய்வது ஆண் மட்டுமே!

இன்று X குரோமோசோமில் 1000 மரபணுக்களும் Y குரோமோசோமில் 78 மரபணுக்களும் இருக்கின்றன. ஆனால் மனித இனம் உருவானபோது X மற்றும் Y குரோமோசோம்களில் தலா 1000 மரபணுக்கள் இருந்தன. ஆனால் இப்போது Y குரோமோசோமில் உள்ள மரபணுக்களின் எண்ணிக்கை குறைந்து அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது ஏன்? எதிர்காலத்தில் ஆண் இனம் என்ன ஆகும்?

இந்த சுவாரசியமான விஷயத்தைப் பற்றி பேச வருகிறார் பேராசிரியர் மோகனா. இவர் 22 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறார். அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறார்.

நாள்: 23.10.2009, வெள்ளிக்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை