Monday, July 23, 2012

காணாமல் போன ஆறு...




வைகை ஆற்றங்கரை ஓரம் இருந்த வீட்டில் நாங்கள் இரண்டு ஆண்டுகள் வசித்திருக்கிறோம். பொதுவாக எல்லோர் வீடுகளிலும் விளையாடுவதற்குப் பெரிய இடங்கள் இருக்கும். பகல் நேரங்களில் அங்கு விளையாடுவோம். மாலை நேரங்களில் பெரும்பாலான சிறுவர்கள் வைகை ஆற்றுக்குத்தான் விளையாடச் செல்வார்கள். வருடத்தில் சில நாள்கள் மட்டுமே வைகையில் தண்ணீர் வரும். அதனால் விளையாட மிகச் சிறந்த இடமாக வைகை ஆறு இருந்தது. இரண்டு கோயில்கள், தியேட்டர்களைத் தவிர அந்த ஊரில் பொழுதுபோக வேறு இடம் இல்லாததால், பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் ஆற்றுக்குச் செல்வார்கள். கரை ஓரங்களில் கருவேல மரங்களும் குப்பைகளும் இருந்தாலும், இரண்டு நிமிட நடையில் நல்ல மண் இருக்கும் பகுதியை அடைந்துவிடலாம்.

வெயில் நேரங்களில் ஆற்று மணலில் நடப்பது கொடுமை. ஆனால் மாலை வேளைகளில் மணலுக்குள் கால்கள் புதைந்து, தூக்கித் தூக்கி நடக்க சுவாரசியமாக இருக்கும். விளையாட்டுக்கு இடையில் தண்ணீர் தவித்தால் என்ன செய்வது? அவரவர் விளையாடும் இடங்களுக்கு அருகில் ஓர் ஊற்று தோண்டுவோம். தோண்ட தோண்ட கை ஈரமாகும்.  மழைக்காலங்களில் அரை அடியிலும் கோடை காலங்களில் ஓர் அடியிலும் தண்ணீர் ஊறி வரும். ஐந்தே நிமிடங்களில் தண்ணீருடன் ஓர் ஊற்று கிடைத்துவிடும். ஆற்றுத் தண்ணீர் சுவையாக இருக்கும் என்பதால் பெண்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு வந்திருப்பார்கள். அவர்களிடம் கிண்ணம் வாங்கி, எல்லோரும் தாகம் தணிப்போம். மீண்டும் விளையாட்டு.

ஓர் ஊற்றிலிருந்து சில குடங்கள் தண்ணீரை எடுக்க முடியும். சில சமயங்களில் ஊற்று பாதியிலேயே இடிந்துவிடும். அழுக்கான மேல் மண் கலந்துவிடுவதால்,  வேறு ஒரு புதிய ஊற்றைத் தோண்டுவார்கள். தண்ணீர் எடுத்து முடிந்ததும் தானாகவோ, மனிதர்களாலோ இந்த ஊற்றுகள் இடிந்து, மூடிவிடும். ஆனால் மூட முடியாத ஒன்றிரண்டு பெரிய ஊற்றுகளும் ஆற்றில் இருக்கும். இந்த ஊற்றுக்குள் தகரத்தில் அரண் அமைத்திருப்பார்கள். இதில் சிறிய கிணற்றில் இருக்கும் அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும். அந்தத் தண்ணீரை எடுத்துக் குளிப்பார்கள்; துவைப்பார்கள்.

திருவிழாக் காலங்களில் ஆற்றில்தான் ஊர் மக்கள் இருப்பார்கள். மாலை நேரங்களில் தின்பண்டம், பலூன்கள், பொம்மைகள் விற்பார்கள்.  ராட்டினத்தில் விளையாடுவார்கள். இரவில் வெட்டவெளியில் படுத்துக்கொண்டு சினிமா பார்ப்பார்கள். நாடகம் பார்ப்பார்கள். பட்டிமன்ற பேச்சுகளைக் கேட்பார்கள். பத்தாவது நாள் சித்ரா பௌர்ணமி அன்று ஆற்றுக்குள் வைத்து, விதவிதமான உணவுகளைக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.

இப்படி எல்லாம் மக்களோடு மக்களாகக் கலந்துவிட்ட வைகை ஆறு இன்று? மணல் அள்ளப்பட்டு, கட்டாந்தரையாகக் காட்சியளிக்கிறது. நடுநடுவே சில குடிசை வீடுகளும் தென்பட்டன. கருவேலை மரங்கள் வளர்ந்துள்ளன. இரு கரைகளைத் தவிர, ஆற்றுக்குரிய எந்த அம்சமும் அங்கு இல்லை. குழந்தைகளிடம் ஆற்றுக்கு விளையாடப் போவீர்களா என்றால், ‘அங்கெல்லாம் ஏன் போறோம்? என்ன இருக்கு? பொழுது போக டிவி இருக்கே!’ என்றனர்.

அவர்களை எந்த விதத்திலும் ஈர்க்கக்கூடிய அம்சம் ஆற்றுக்கு இன்று இல்லை.
செய்திகளில் பார்க்கும்போது பல ஆறுகளிலும் இதே நிலைதான்... அரிசோனா பள்ளம் அளவுக்கு மண்வெட்டியால் ஊற்றைத் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. அந்தப் பள்ளத்துக்குள் பள்ளம் என்று இரண்டு, மூன்று பள்ளங்களுக்குப் பிறகு கொஞ்சம் தண்ணீர் கசிகிறது. ஒரு நீண்ட அகப்பையை வைத்து நான்கு, ஐந்து ஸ்பூன் தண்ணீரை எடுத்து குடத்தில் ஊற்றுகிறார்கள். ஒரு குடம் நிறைய ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகிறது என்றார்கள். வெயில் நேரம் என்பதால் குடை எல்லாம் பிடித்துக்கொண்டு தண்ணீர் எடுக்கும் காட்சி வருத்தத்தைத் தந்தது.

எந்த விஷயமும் தனக்கு வந்தால்தான் மனிதன் எதிர்ப்பு காட்டுகிறான். இப்போது மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டபிறகு, மணல் அள்ள வருபவர்களை விரட்டியடிக்கிறார்கள். ஆனால் இழந்த இயற்கை செல்வத்தை ஒரு மந்திரம் போட்டு, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியுமா?


 


Saturday, June 9, 2012

ஆலா மிஸ்... ஆலா மிஸ்...


ன்று காலை அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். கெட்டி அட்டை, வழவழப்பான தாளில் மிகவும் நேர்த்தியாக இருந்தது. கல்யாண்ஜியின் முன்னுரை, சாலை செல்வத்தின் உரை எல்லாம் தாண்டி யாழினியின் கதைக்கு வந்தேன்...

லா மிஸ் ... இந்த மிஸ் படிக்கச் சொல்ல மாட்டாங்க. எழுதச் சொல்ல மாட்டாங்க. வகுப்பு முழுவதும் கதை சொல்வதாகவும் விளையாட்டாகவும்தான் இருக்கும்! பக்கத்தில் ஆறு ஓடும். ஆலா மிஸ்ஸின் கைகளைப் பிடித்து தொங்கியபடியே விளையாடுவோம். மழை வந்தால் எல்லோரும் சேர்ந்து நனைவோம். கடலுக்குக் கூட்டிட்டுப் போவாங்க ஆலா மிஸ். அங்கே எங்களை மீன்களாக மாற்றி கடலில் விடுவாங்க. நாங்கள் கடலில் உள்ள மீன்கள், டால்பின்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு வருவோம்! எங்கள் எல்லோருக்கும் பிடித்த ஆலா மிஸ்ஸை உங்களுக்கும் பார்க்க ஆசையா? ஆற்றங்கரையில் இருக்கும் ஆல மரம்தான் எங்கள் ஆலா மிஸ்!



தீபாவளிக்கு புதுத் துணிகள், பட்சணங்களை எடுத்துட்டு யாழினியும் மற்ற குழந்தைகளும் காட்டுக்குப் போகிறார்கள். அங்கே குரங்கு, மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு உடைகளைக் கொடுக்கிறார்கள். எல்லோரும் விளையாடுகிறார்கள். சாப்பிடுகிறார்கள். இரவு வந்தவுடன் கிளம்புகிறார்கள்.

“காட்டு மிருகங்கள் பாய் சொல்லவே இல்லப்பா! மிருகங்கள் இப்படிப் பண்ணினா எப்படி? அழுவாச்சி வராதா? கொஞ்சம் சிரிக்கச் சொல்லி எல்லோரும் போட்டோ எடுத்துட்டோம். அப்போ ஒரு குட்டி குரங்கு என் தலை மேல உக்காந்து வெவ்வ்வ்வ்வேன்னு போஸ் கொடுத்துச்சு.’

ம்மா, அப்பா எல்லாம் வேலைக்குப் போய்விடுகிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பூனை, நாய், பல்லி, பூச்சிகள்தான் நண்பர்கள். அவர்களுடன் தான் விளையாட்டு. ஒருநாள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்த பூனை, நாய், பூச்சிகள் எல்லாம் டிராகன்களாக மாறிவிடுகின்றன.  டிராகனின் தலையில் ஏறி வால் வரைக்கும் வழுக்கிக்கிட்டே வருகிறார்கள்! பெரியவர்கள் யாராவது வந்துவிட்டால் பழையபடி நாய், பூச்சிகளாக மாறிவிடுகின்றன. வீட்டில் போர் அடித்த குழந்தைகளும் டிராகன்களும் ஒருநாள் பார்க்குக்குப் போகிறார்கள். அங்கே பெரியவர்கள் டிராகன்களைச் சுடுவதற்கு வருகிறார்கள். குழந்தைகள் பெரியவர்களுக்கு அவற்றின் அருமையை எடுத்துச் சொல்லி, காப்பாற்றுகிறார்கள். இப்போது எல்லோரும் சந்தோஷமாக டிராகன்களுடன் விளையாடுகிறார்கள்!

பெற்றோர் இருவரும் வேலை செய்யும் வீடுகளில் குழந்தைகளை கம்ப்யூட்டரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களின் தலை பெரிதாகிக்கொண்டே போகிறது. அதைக் கூட பெற்றோர் கவனிக்கவில்லை. சில குழந்தைகள் தலை வெடித்து இறக்கிறார்கள். ஏன்? கம்ப்யூட்டர் அறிவு எல்லாம் குழந்தைகளுக்கு வந்துவிட்டது! அறிவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு சந்தோஷமில்லை. விளையாட்டு இல்லை. பூக்களின் வாசனை உணரவில்லை. காடு, மலைகளின் அழகை ரசிக்கவில்லை. இதனால் வருத்தத்தில் குழந்தைகள் தலை வெடித்து இறக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா குல்லாவில் இருந்து ஒரு பாம்பு வருகிறது. உண்மையில் அது பாம்பு இல்லை. பாம்பு வேஷம் போட்ட ஓர் ஆள்.  அதை நிஜப் பாம்பு என்று நினைத்துப் பெரியவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள். பாம்பு இறந்துவிட்டதாக நினைத்து சென்றுவிடுகிறார்கள். சிறிது நேரத்தில் நிஜப் பாம்பு வந்து வேஷம் போட்டவரைக் கடித்துவிடுகிறது. அவரை டாக்டர் காப்பாற்றி விடுகிறார். நிஜப் பாம்பை அடிக்கப் பெரியவர்கள் முயற்சி செய்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் அதைத் தடுத்து, விரட்டி விட்டால் ஓடிடும் என்று யோசனை தருகிறார்கள். உடனே குட்டிப் பாம்பும் அம்மா பாம்பும் சந்தோஷமாகப் போகின்றன.

இப்படி யாழினி நிறைய கதைகளை எழுதியிருக்கிறாள். அவளுடைய கதைகளில் குழந்தைகள் நியாயமாக நடந்துகொள்கிறார்கள்.  மரம், விலங்கு, பறவைகள் மீது அன்பு செலுத்துகிறார்கள். இயற்கையின் அருமையை உணர்ந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழலைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். சக குழந்தைகளுடன் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். ஆர்வமாகக் கதை கேட்கிறார்கள்.

மாறாக, பெரியவர்கள் மீது யாழினி நிறைய குற்றங்களைச் சுமத்தியிருக்கிறாள். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளிடம் செலவு செய்யும் நேரம் குறைவு, வீட்டிலும் வெளியிலும் பணிச் சுமை காரணமாக குழந்தைகளிடம் காட்டும் எரிச்சல், குழந்தைகளைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதது, குழந்தைகளை டிவி, கம்ப்யூட்டர் முன்பு சரணாகதி அடையச் செய்வது, உயிரினங்களின் அருமையைப் புரிந்துகொள்ளாமல் கொல்ல வருவது, காடுகளை அழிப்பது, முக்கியமாக குழந்தைகளுக்குக் கதை சொல்லாமல் இருப்பது...

யாழினி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. இதுவரை குழந்தைகள் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் ஒரு குழந்தை இவற்றை எல்லாம் விரும்பும் என்ற எண்ணத்தில் பெரியவர்களால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டவைதான். உண்மையிலேயே அவை எல்லாம் குழந்தைகளுக்கானவைதானா? குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றனவா? என்ற எண்ணம் அடிக்கடி வந்துபோகும். அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கிறாள் யாழினி.

யாழினியின் கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது. ஓர் ஆல மரத்தை டீச்சராக மாற்றி அவள் விவரிக்கும் கதை அட்டகாசம்! குழந்தைகளின் தலை பெரிதாகிக்கொண்டே இருக்கின்றன என்ற கதையில் கற்பனையும் கலந்து கருத்தும் சொல்லியிருக்கிறாள். இப்படித்தான் கதை ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்ற சட்டதிட்டமெல்லாம் இந்தக் கதைகளுக்கு இல்லை. அதனால்தான் இந்தக் கதைகள் கூடுதல் சுவாரசியத்தைத் தருகின்றனவோ! பெரும்பாலான கதைகளில் யாழினியும் இருக்கிறாள். ஒரு கதையில் யாழினி என்று குறிப்பிட்டு, அது நான் இல்லை, வேறொரு யாழினி என்று விளக்கம் சொல்லும்போது குழந்தைத்தனம் ரசிக்க வைக்கிறது.

பெரியவர்களின் மொழியில், பேச்சு வழக்கில் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கதை, நடை, கருத்து என்று ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்துவிடுகிறது! முக்கியமாக நாம் கடந்து வந்த பால்ய காலத்தை மீண்டும் கொண்டுவந்துவிடுகிறது.  

நான் பள்ளி இறுதி படிக்கும் வரை மா, தென்னை, பலா, முருங்கை, மாதுளை மரங்கள்தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பர்கள். என் தங்கைகளுடன் சண்டை போட்டாலோ, மதிப்பெண்கள் குறைந்தாலோ, ஏதாவது மனக் கஷ்டம் வந்தாலோ நான் இந்த மரங்களிடம்தான் வாய் விட்டுப் பேசுவேன். கஷ்டமான நேரங்களில் மரங்கள் இலைகள் மூலம் அரவணைத்திருக்கின்றன! பரீட்சைக்குச் செல்லும்போது ஆசிர்வதித்து அனுப்பியிருக்கின்றன! சந்தோஷமான தருணங்களை மேலும் அழகாக மாற்றியிருக்கின்றன!

போட்டி நிறைந்த இந்த உலகத்தில் படிப்பு, நடனம், பாட்டு, ஓவியம் என்று சகலத்திலும் தங்கள் குழந்தைகள் முதலாவதாக வரவேண்டும், அவர்களின் பெற்றோர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இன்றைய பெற்றோரிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள் யாழினியின் பெற்றோர். யாழினிக்குக் கதை சொல்லி, அவள் சொல்வதைக் கேட்டு, எழுதி, திருத்தி, புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது யாழினியின் இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் 4 வயதில் வெளிவந்திருக்கிறது. கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களுடன் தரமான தயாரிப்பாக இருக்கிறது புத்தகம்.

யாழினியைப் பார்க்கவும் அவளுடன் பேசவும் கதை கேட்கவும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்!

காடு பெருசா அழகா இருந்துச்சு ரூ.30/-
யாழினி
இயல்வகை பதிப்பகம்,
எண்: 25, மாந்தோப்பு,
ப.உ.ச.நகர்,
போளூர் சாலை,
திருவண்ணாமலை - 1
போன்: 9840932755

Wednesday, May 9, 2012

அறிவியல் குப்தா




“தீக்குச்சி விளையாட்டு’ என்ற புத்தகத்தின் மூலம்தான் அரவிந்த் குப்தா அறிமுகமானார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் எளிய அறிவியல் பரிசோதனைகள், தீக்குச்சி விளையாட்டுகள் என்று பல சுவாரசியமான அரவிந்த் குப்தாவின் புத்தகங்கள் வெளிவந்தன. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு, உபயோகமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த காலகட்டம். பூக்கள், ஓவியங்கள், பொம்மைகள் என்று செய்துகொண்டிருந்தபோது, ஆர்வத்தை அறிவியல் பக்கம் திருப்பி, நேரத்தையும் கற்பனையையும் உபயோகமாகச் செலவழிக்க வைத்தவர் அரவிந்த் குப்தா.

தீக்குச்சிகளையும் ரப்பர் டியூபையும் வைத்து நூற்றுக்கணக்கான வடிவங்களைக் கொண்டுவருவது ரொம்ப சுவாரசியமானது. பிய்ந்து போன செருப்பு, உபயோகமில்லாத பேட்டரி, குச்சி, ரப்பர் பேண்ட், பலூன், பேனா.. இப்படி வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து ரயில் எஞ்சின், மோட்டார் படகு, இயற்பியல்-வேதியியல் பரிசோதனைகள் என்று ஏராளமான விஷயங்களைக் கற்றதுடன், நாங்களே செய்தும் பார்த்தோம். துளிர் இல்லங்கள், பள்ளிகளில் இவற்றைச் செயல்படுத்திக் காட்டி, அறிவியல் இயக்கத்தில் ஏராளமான குழந்தைகளையும் ஆசிரியர்களையும் இணைய வைத்தோம்.

அரவிந்த் குப்தா பெயர்தான் தெரியுமே தவிர, அவரை நேரில் பார்த்ததில்லை. ஒருமுறை டெல்லியில் அறிவியல் இயக்க பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது, அவர் ரிசோர்ஸ் பர்சனாக வந்திருந்தார்.  கதர் ஜிப்பாவில் மிக மிக எளிய மனிதராகக் காட்சியளித்தார். அவரது விரல்கள் எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டே இருந்தன. அவரைச் சுற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. எதைப் பற்றிக் கேட்டாலும் கொஞ்சம் கூட களைப்பின்றி, உற்சாகமாக, அழகாக விளக்குவார். செய்து காட்டுவார். நம்மையும் செய்யச் சொல்வார். எந்தப் பொருளும் அவர் கை பட்டவுடன் இரண்டு நிமிடங்களில் வேறு ஒன்றாகப் பரிணமிப்பது பிரமிப்பாக இருக்கும்!

கான்பூர் ஐஐடியில் பொறியியல் படித்த அரவிந்த் குப்தா, சமூகத்துக்கு வேலை செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர். அறிவியலை மக்களிடம் பரப்புவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்தியா முழுவதும் 3000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியலைப் பரப்பி வருகிறார். அறிவியல், கணிதம் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகங்கள் தமிழ் உள்பட 13 இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளன. மாற்றுக் கல்வியைக் கொண்டு வருவதிலும் அதிக அக்கறை செலுத்தி, வேலை செய்து வருகிறார் அரவிந்த் குப்தா.

அவருடைய புத்தகங்கள், பரிசோதனைகள் அனைத்தும் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அவருடைய இணையதளத்தில் கிடைக்கின்றன. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பரிசோதனையும் எளிமையாகவும் நாமே செய்துபார்க்கும்படியும் இருக்கிறது. பெரியவர்களைக்கூட கட்டிப்போட்டு வைத்திருக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்ட அந்தப் பரிசோதனைகளை குழந்தைகள் நிச்சயம் கொண்டாடுவார்கள். இந்த இணையதளத்தில் அரவிந்த் குப்தாவின் புத்தகமாகட்டும், பரிசோதனைகளாகட்டும், படங்களாகட்டும் எதற்கும் காப்பி ரைட் கிடையாது. மக்களுக்காகத் தன் படைப்புகளைஅர்பணித்திருக்கிறார் அரவிந்த் குப்தா. யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்! இங்கிருந்து ஒவ்வொரு நாளும் 6000 புத்தகங்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிக்காத பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் அரவிந்த் குப்தா. “அவர்கள் படிக்கவில்லை என்றாலும் எங்களை எல்லாம் நன்றாகப் படிக்க வைத்தனர். ஒருபோதும் நாங்கள் இப்படி வரவேண்டும், அப்படி வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. எங்களை எங்கள் விருப்பப்படி வளர்த்தார்கள். அறிவை வளர்த்துக்கொள்வதற்குத்தான் கல்வி. என்னுடைய இந்தப் பணியில் மிகவும் மகிழ்ச்சியாகச் செயல்படுகிறேன்’ என்கிறார்.

யுனெஸ்கோ, யூனிசெஃப், இண்டர்நேஷனல் டாய் ரிசர்ச் அசோசியேஷன், பாஸ்டன் சைன்ஸ் செண்டர், வால்ட் டிஸ்னி ஆய்வுக்கூடம் போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டவர், இந்திய அளவில் அறிவியலை மக்களிடம் பரப்பியதற்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
பொறியாளர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என்று பல்வேறு விதங்களில் செயல்பட்டு வரும் அரவிந்த் குப்தா, அன்பிலும் அமைதியிலும் அதிக நம்பிக்கைக் கொண்டவர்!

http://www.arvindguptatoys.com/

த்ரீ இடியட்ஸ் - நண்பன் ஆமீர் கான் / விஜய் கதாபாத்திரங்கள் அரவிந்த் குப்தாவைத் தழுவி உருவாக்கப்பட்டவை என்று தோன்றுகிறது!




Saturday, February 25, 2012

இதுதான் காதல் என்பதா!


காதல். இந்த வார்த்தை எப்போது எனக்குத் தெரியவந்தது என்று நினைவில்லை. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லை. சினிமாவுக்கு எல்லாம் அடிக்கடி அழைத்துப் போக மாட்டார்கள். ஒன்றிரண்டு திரைப்படங்களில் காதல் என்ற வார்த்தை கேள்விப்பட்டிருந்தாலும் அது கவனத்தைக் கவரவில்லை. திடீரென்று ஒருநாள் அம்மா, ஆச்சி, பக்கத்துவீட்டுக்காரர்கள் எல்லோரும் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“மேல் சாதிக்காரி அந்தக் கீழ் சாதிக்காரனை இழுத்துட்டு ஓடிட்டாளாம். எங்கே போனாங்கன்னு தெரியலை. இவங்க ரெண்டு சாதிக்காரங்களும் இங்கே அடிச்சிக்கிறாங்க. காலம் கெட்டுப் போச்சு... “

நான் அவர்களுக்கு நடுவில் சென்று, “யாரையும் கடத்திட்டுப் போயிட்டாங்களா?’ என்று கேட்டேன். என்னை எல்லோரும் முறைத்துப் பார்த்தார்கள்.

“கடத்திட்டுப் போகலை. காதலிச்சவங்க தனியா போய் கல்யாணம் பண்ணிட்டாங்க’ என்றார் அம்மா.

“எல்லாரும்தான் கல்யாணம் பண்ணறாங்க. இதுல என்ன தப்பு?’

“ம்.. முதல் தப்பு சாதி விட்டு சாதி மாறி காதலிச்சது. ரெண்டாவது தப்பு யாருக்கும் தெரியாமல் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டது...’ என்றார் பக்கத்து வீட்டு அத்தை.

“ஆமாம், அவ பெரிய மனுஷி, கேள்வி கேட்கறா. நீ விளக்கிச் சொல்லு’ என்றார் ஆச்சி.

காதல் என்றால் தப்பான விஷயம் என்றும் சாதி விட்டு சாதி மாறி காதலிப்பது
மகா தவறு என்றும் நினைத்துக்கொண்டேன்.

**



சில காலம் கழித்து எங்கள் தெருவில் ஒருவர் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. இவர் கையில் “ஜெனிபர்’ என்று சூடு வைத்துக்கொண்டார். சில நாள்களில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

காதல் என்றால் உயிர் போகும் அளவுக்கு மிகுந்த துன்பமான செயல் என்றும் சாதி மட்டுமின்றி மதமும் தடை என்றும் நினைத்துக்கொண்டேன்.

**

ஏக் துஜே கேலியே, அலைகள் ஓய்வதில்லை போன்ற காதல் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

“கார்த்திக்கும் ராதாவும் சேருவாங்களா, மாட்டாங்களான்னு எனக்கு ரொம்பக் கவலையாக இருந்துச்சு’ என்று பக்கத்து வீட்டு அத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

“காதல்ன்னா தப்புன்னு சொன்னீங்க. இப்ப சேரணும்னு சொல்றீங்களே?’ என்று கேட்டேன்.

“படத்துல காதலிச்சவங்க சேரணும். அப்பத்தானே நல்லா இருக்கும்.’

“படத்துல சரின்னா நிஜத்துலயும் காதலிக்கறவங்க சேரலாமே?’

“கதையில் காக்கா பாடுது, நரி தந்திரம் பண்ணுது. ஆனா அதெல்லாம் உண்மையா? அந்த மாதிரி கதையில் என்ன வந்தாலும் ரசிச்சிட்டு விட்டுடணும். வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடாது.’

நான் அம்மாவைப் பார்த்தேன்.

“காதலிப்பது தவறு இல்லை. சரியான வயதில், சரியான ஆளைக் காதலிக்கலாம். இல்லைன்னா வாழ்க்கையே தொலைஞ்சு போயிரும்’ என்றார் அம்மா.

‘ஏங்க, குழந்தைகளுக்கு எதிரில் காதலை சப்போர்ட் பண்ணாதீங்க. அப்பறம் அதுங்க காதலிக்கிறேன்னு வந்து நின்னா நமக்குத்தான் கஷ்டம்’ என்றார் பக்கத்து வீட்டு அத்தை.

கதையில் காதலிக்கலாம். நிஜத்தில் காதலிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

**

நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். அது ஆண்களும் பெண்களும் படிக்கும் பள்ளி. ஒரு பக்கம் ஆண்கள், இன்னொரு பக்கம் பெண்கள். கொஞ்ச நாள்களில் எங்கள் வகுப்பில் இருந்த ரேவதியும் சசிகுமாரும் காதலிப்பதாக, வகுப்புத் தோழிகள் பேசிக்கொண்டார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இருவரும் பேசி நான் பார்த்ததில்லை. எப்படிச் சொல்கிறார்கள்? சசிகுமார் லீடராக இருந்தான். வகுப்பில் பேசியவர்களின் பட்டியலை போர்டில் எழுதும்போது ரேவதியின் பெயரை மட்டும் எழுத மாட்டானாம். இருவரும் அடிக்கடி பார்த்து, சிரித்துக்கொள்வார்களாம்!

கரிசனமும் சிரிப்பும்தான் காதலா!

**

எங்கள் வீட்டில் பெரிய நீல வண்ண ஆல்பம் இருந்தது. அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் ஒல்லியான உருவத்தில், அட்டகாசமாகச் சிரித்துகொண்டிருப்பார் ஒரு பெண். அந்தப் பெண் எங்கள் பெரியம்மா என்று அம்மா சொல்லியிருந்தார். வீட்டுக்கு யார் வந்து ஆல்பம் பார்த்தாலும் இவர் எங்கள் பெரியம்மா என்று சொல்வோம்.

அப்படி ஒருமுறை பார்த்தபோது, “அம்மா, பெரியம்மாவை எந்த விசேஷத்திலும் பார்த்ததில்லையே, எங்கே இருக்காங்க? நமக்கு எப்படி உறவு?’ என்று கேட்டேன்.

சிரித்த அம்மா, “இந்தப் பெரியம்மா உங்க அப்பாவோட கேர்ள் ஃபிரெண்ட்’ என்றார்.

வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அப்பா திருமணம் செய்யத் தயாராக இருந்திருக்கிறார். ஆனால் பெரியம்மா வீட்டில் பொருளாதாரப் பிரச்னை. அவர் சம்பாதித்து பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல். சாதி, பொருளாதாரம், அவர் அப்பாவின் தற்கொலை மிரட்டல் போன்ற காரணங்களால் காதல் கைகூடவில்லை என்று அம்மா சொன்னார். எனக்கு வருத்தமாகிவிட்டது. அதே நேரத்தில் இந்த விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொண்ட என் அம்மாவின் இயல்பு என்னை ஆச்சரியப்படுத்தியது.

எங்கள் பெரியப்பா அந்தக் காலத்திலேயே 'பேசாமலே' காதலித்தவர். அவர் காதலும் கைகூடவில்லை. (ஆனால் அந்தப் பெரியப்பாவைக் கல்யாணம் செய்த பெரியம்மாவின் காதல் கைகூடிவிட்டது! அம்மியில் மிளகாய் அரைக்கும்போது பெரியப்பா பெயரை எழுதிக்கொண்டே இருப்பாராம் பெரியம்மா!) என் சித்தப்பாவும் அத்தையும் சொந்தத்திலேயே காதலித்தனர். அவர்கள் காதலும் கைகூடவில்லை.

காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் மட்டுமின்றி, இன்னும் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்களும் தடையாக இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

**

அப்பாவின் நண்பர் கண்ணப்பன் மாமா. அவர் மனைவி லிஜியா அத்தை. ஒன்பதாம் வகுப்பில் இருந்து இருவரும் காதலித்து, படித்து, வேலைக்குப் போய், வீட்டிலுள்ளவர்களின் எதிர்ப்புகளை மீறி, சாதி, மதம் கடந்து திருமணம் செய்திருந்தனர். என்னை மிகவும் கவர்ந்த காதல் தம்பதி கண்ணப்பன் மாமாவும் லிஜியா அத்தையும்தான். மற்ற தம்பதியரை விட இவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தார்கள். அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் மதித்தல் போன்ற பல விஷயங்களை அவர்களிடம் நான் பார்த்தேன்.

இருவர் மனங்களும் உறுதியாக இருந்தால் நான் இதுவரை நினைத்திருந்த எந்த விஷயமும் காதலுக்குத் தடையாக இருக்க முடியாது என்று புரிந்துகொண்டேன்.

**

ஒன்பதாம் வகுப்பில் ஹாஸ்டல் தோழி ஒருத்தி, ஊரிலிருந்து வந்ததில் இருந்து மிகவும் உற்சாகமாக இருந்தாள். பலமுறை வற்புறுத்திக் கேட்டபோது, அவள் ஊரில் ஒருவன் காதலிப்பதாகச் சொன்னானாம். இதைக் கேட்ட இன்னொரு தோழி, “அடப்பாவி! காலை பஸ்ஸுக்கு காத்திருந்தபோது உன்னைக் காதலிக்கிறதா சொன்னவன், மூணு மணி பஸ்ஸுக்கு நான் காத்திருந்தபோது, என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னான். செருப்பு பிஞ்சுரும்னு திட்டினேன்’ என்றாள். அவள் உடைந்துபோனாள்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் பிரின்ஸி. மிக மிக அமைதியானவர். அன்பானவர். நன்றாகப் படிக்கக்கூடியவர். அவருடைய தங்கை மூலம் பிரின்ஸியின் காதல் தெரிந்தது. அவர்கள் ஊரைச் சேர்ந்த இந்து பையனைக் காதலிப்பதால் வீட்டில் பிரச்னை. அதனால் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்கள். பிரின்ஸிக்கு வரும் கடிதங்கள் கூட வார்டன் படித்த பிறகே கொடுக்கச் சொல்லியிருந்தனர். பிரின்ஸி மிகவும் பொறுமை காத்தார். இஞ்சினியரிங் படிக்கும் அந்தப் பையனுக்குக் கடிதம் எழுதுவதில்லை. போன் செய்வதில்லை. ஒரே ஊராக இருந்தாலும் பார்க்க முயற்சி செய்வதில்லை. யாரிடமும் அவரைப் பற்றிப் பேசுவதும் இல்லை. அவர் நோக்கமெல்லாம் டீச்சர் டிரெயினிங் முடிக்க வேண்டும். அதற்குள் அந்தப் பையன் படித்து, வேலைக்குச் சென்று விடுவார். பிறகு யார் எதிர்த்தாலும் திருமணம் செய்துகொள்ளலாம்! இவ்வளவு பொறுமையாக, அழுத்தமாக, தெளிவான சிந்தனையுடன் இருந்த பிரின்ஸியும் பார்க்காத அந்தப் பையனும் ஆச்சரியமான காதலர்கள்!

**

கல்லூரியில் படிக்கும்போது மெகருன்னிசா என்ற பேராசிரியர் இருந்தார். கல்லூரியில் அன்றைய ஐஸ்வர்யா ராய் அவர்தான். அவர் வகுப்பு எடுக்கும் மாணவியரிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது, “பார்க்கத்தான் அழகு. சரியா படிக்கலைன்னா அவங்க திட்டுறதை வார்த்தையால சொல்ல முடியாது. எவன் ஞாபகத்துல இருக்க, எவனையாவது இழுத்துட்டு ஓட வேண்டியதுதானே, இங்க வந்து என் உயிரை எடுக்கறே’ என்ற ரீதியில் திட்டுவாராம். ஐஸ்வர்யாவாகத் தெரிந்தவர் டெரராகிப் போனார்! பிறகு ஒருநாள் அவர் எங்கள் கல்லூரியில் வேலை செய்யும் இன்னொரு பேராசிரியரைக் காதல் திருமணம் செய்தவர் என்று தெரியவந்தபோது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது!


**

ஆண்கள் அப்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளை காதலிப்பது போல சில பெண்களும் நடிகர்களைக் காதலித்தனர். கமல், மோகன், முரளி, பிரசாந்த், அரவிந்தசாமி போன்றவர்கள் இந்த லிஸ்டில் இருந்தனர். சில பெண்கள் நடிகர்களுக்கு, ‘உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். கண் விழிக்காதீர்கள். நன்றாகச் சாப்பிடுங்கள்’ என்றெல்லாம் கடிதம் எழுதினார்கள்!. அப்படி எழுதிய ஒரு பெண்ணுக்கு, பிரசாந்த்திடம் இருந்து, அவர் கையெழுத்து போட்ட போட்டோ ஒன்று வந்தது. அவள் வானில் சிறகடித்துப் பறந்தாள்! (படிப்பு முடித்தவுடன் முதல் திருமணம் அவளுடையதுதான்!)

**

யாரும் எதிர்பார்க்காத சூழலில் மிகச் சிறிய வயதில் அத்தைப் பெண்கள் இருவர் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவரின் கணவர்களும் மிக மோசமாக நடந்துகொண்டார்கள். குடி, அடி, பணக் கஷ்டம்... எல்லாம் பட்டு ஒரு கட்டத்தில் கணவர்கள் இறந்து போனார்கள். அதில் ஒருத்தி சொன்னாள்: ‘அவர் மோசம்னு எனக்கு முன்னாலேயே தெரியும். அவரைத் திருத்தறேன்னு என் தோழிகளிடம் சவால் விட்டேன். ஆனால் தோத்து போகப் போறேன்னு அப்ப தெரியலை’ என்றாள். துயரமான காதல்கள்.

**

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமோ, எதுவாக இருந்தாலும் காதல் இருக்க வேண்டும் என்று பிறகு புரிந்தது. எங்கள் குடும்பத்துக்கு காதல் ராசி (!) இல்லை என்ற அவப் பெயர் போகும் விதத்தில் பெரியப்பா வீட்டிலும் எங்கள் வீட்டிலும் சித்தப்பா வீட்டிலும் காதல்கள் பூத்தன. திருமணங்களில் முடிந்தன.

என் தம்பி தன் அம்மாவிடம் அனுமதி பெற்ற பிறகே, தன் காதலை வெளிப்படுத்தினான். அப்போது ஆமோதித்த சித்தி, அவன் திருமணம் என்றதும் பின்வாங்கிய காரணம் இன்றுவரை புரியவில்லை! முப்பது வயதுக்குப் பிறகே, செட்டில் ஆனவுடன் திருமணம் என்றார் சித்தி. வாழ்க்கையில் செட்டிலாகும்போது எல்லாம் இருக்கும், ஆனால் அந்தப் பெண் இருக்கமாட்டாள். அவளுக்குத் திருமணம் ஏற்பாடு நடக்கிறது என்றான் தம்பி. இறுதியில் திருமணம் நடந்தது. சித்தப்பா இல்லாததால் சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவன், திருமண வாழ்க்கையை காதலால் நிரப்பி வருவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது!  

Friday, October 21, 2011

காணாமல் போகும் கதைகள்...


ஸ்நேகா நான்கு வயதாக இருந்தபோது கதை கேட்பது, சொல்வது, படிப்பது என்றால் மிகவும் விருப்பம். ஒரு கதை சொன்னால், அதைத் திருப்பிச் சொல்லும்போது நாம் சொன்ன கதையிலிருந்து கொஞ்சம் மாற்றி, புதுக் கதையாக வேறொன்றைச் சொல்வாள்.
“ஏன் ஸ்நேகா, நான் இப்படிச் சொல்லலையே?’ என்று கேட்டால், ‘உங்களுக்குத் தெரிந்த கதையையே நான் சொன்னால் போரடிக்குமே. அதான் மாத்திச் சொன்னேன்’ என்று சிரிப்பாள்.

ஆனால் அந்தக் கதை சரியாக இருக்கும்... அந்தக் கதையை வேறு யாராவது சொல்லச் சொன்னால், அது இன்னொரு புதிய கதையாக மலரும்... இப்படி ஸ்நேகாவின் கற்பனை விரிய விரிய கதைகளுக்குப் பஞ்சமே இருக்காது.

கதை கேட்பதிலும் சொல்வதிலும் பட்டுவுக்கும் பிரமாதமான திறமை இருக்கிறது. நான்கு வயதிலேயே ஸ்படிகம் போல அத்தனை தெளிவான உச்சரிப்போடு கதை சொல்வதைக் கேட்டால், தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஹனுமன் கதையாக இருக்கட்டும் கிருஷ்ணன் கதையாக இருக்கட்டும் நல்ல பாவத்துடன் சொல்வாள். கதை மட்டும் அல்லாமல், காந்தி என்ற ஒரு மனிதரின் வாழ்க்கையைக் கூட அத்தனை அழகாகக் கதை போலச் சொன்னதில் அசந்து போயிருக்கிறோம்.  சென்ற ஆண்டு அவள் “நோவா’ கதை சொல்லப் போகிறேன் என்றாள். அந்தக் கதைக்கு அதிக நேரம் எடுக்கும் என்று அவள் அப்பா எச்சரித்தார். “சீக்கிரம் முடிச்சுடறேன்’ என்று பத்து நிமிடங்களில் சொல்லி முடித்தாள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 20 நிமிடங்கள் சொல்ல வேண்டிய கதையை அழகாக எடிட் செய்து, பத்து நிமிடங்களில் பட்டு சொல்லியிருந்தாள். எடிட் செய்த போர்ஷனைக் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு குழந்தையால் சொல்ல முடியும் என்பது இன்று வரை வியப்பாகவே இருக்கிறது. (பாராவின் மகள் என்பதால் எடிட்டிங்கும் தானாகவே வருகிறதோ! பாரா கதை சொல்லும்போது அவரே ஒரு குழந்தையாக மாறி, குரலை மாற்றி, சத்தம் எழுப்பி அழகாகச் சொல்வார். பூமி உருண்டையை வைத்துக்கொண்டு, பட்டுவுக்கு கதையோடு நாடுகளை அவர் அறிமுகம் செய்யும்போது, பட்டு அத்தனை ஆர்வமாகக் கேட்பாள்! பல கதைகளில் பட்டுவும் ஒரு கேரக்டராக இருப்பாள்!)

சில சிறுவர்களிடம் கதை சொல்லச் சொன்னால், “டமால்... டுமீல்... பட் படார்... பவர்ரேஞ்சர்... ஊ... ஆ.... ஸ்பீடா போனான்... பத்துப் பேரைச் சுட்டான்.. ஜம்முனு மேலயிருந்து குதிச்சான்...’ என்று ஆக்ஷனுடன் மிரட்டி விடுகிறார்கள்.
...
கோகுலத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு குழந்தைகளிடமிருந்து ஏராளமான கதைகள் வரும். ஏற்கெனவே படித்த கதைகள், பெரியவர்கள் சொல்ல எழுதிய கதைகள் எல்லாம் போக, கதையாக எழுதத் தெரியாவிட்டாலும் நல்ல கதைக் கரு கிடைக்கும். ரீ ரைட் செய்து பயன்படுத்திவிடலாம். கதை, படக்கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இன்று உள்ள குழந்தைகள் கதை கேட்பதை, படிப்பதை விட, பார்ப்பதையே விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

கோகுலம் சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் மிகச் சுமாரான கதைகள் வெகு சிலவே. இதில் பெரும்பாலான கதைகள் அறிவுரை சொல்வதாகவே இருந்தன. பொதுவாக யாருக்குமே அறிவுரை சொல்வது பிடிப்பதில்லை. ஆனால் குழந்தைகளுக்கான கதைகள் என்றால் பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி அறிவுரை சொல்வதாகவே எழுதுகிறார்களே... காரணம் என்ன? அறிவுரை சொல்லும் கதைகளைத்தான் தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறார்களா? “திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, தீய நட்பு கூடாது, பெரியவர்களை எதிர்த்துப் பேசக்கூடாது...’ இப்படிப் பட்டியல் நீள்கிறது. இதில் சுற்றுச் சூழல், திருநங்கை போன்ற புதிய களத்தை ஓரிரு கதைகள் தொட்டுச் சென்றிருப்பது நல்ல விஷயம்.

‘வானத்தில் தாரிகா காணாமல் போனதைப் பற்றி நட்சத்திரங்களிடையே சர்ச்சை கிளம்பியது’ என்று அழகாக ஆரம்பித்த அஹமது பைசல், கதையை எழுதத் தவறிவிட்டார்.

“புறா பீட்சாவுக்கு ஆர்டர் செய்தது. ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து புறாவிடம் பீட்சாவை டெலிவரி செய்தாள்’ என்று சுவாரசியமாக ஆரம்பித்த சங்கர குமாரும் கதை எழுதவில்லை.   

இருவரும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதைகள் கிடைத்திருக்கும்.

நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் கதைப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் படைப்புகள் வந்திருந்தன.

பொதுவாகவே கதை வாசிக்கும், எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது. தமிழுக்குத்தான் இந்தப் பிரச்னையோ என்று யோசித்தேன். ஆங்கில கோகுலத்துக்கு இந்தியா முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். சில காலத்துக்கு முன்பு வரை குழந்தைகளின் படைப்புகளைப் போட்டு மாளாது. ஆனால் இன்று படைப்புகள் மிகவும் குறைந்துவிட்டதாகவே சொல்கிறார் யாமினி.

கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் தோன்றும் கற்பனை, இன்று கதையாகத் தொலைக்காட்சியில் காணும்போது தொலைந்து போய்விடுகிறது. கற்பனை வற்ற வற்ற கதைக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிடுகிறது.

Thursday, October 6, 2011

உள்ளாட்சித் தேர்தலும் சில துண்டுகளும்


சட்டசபை தேர்தலின்போது தேர்தல் குறித்து நேரடியான அனுபவம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் எங்கள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை சீமந்த விழா, காது குத்து விழா, பெயர் சூட்டுவிழா, திருமண விழா, நிச்சயதார்த்த விழா, சுதந்தர தினம், வருடப் பிறப்பு என்று ஒட்டு மொத்த விழாக்களையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, விதவிதமான கெட்டப்களில் பேனர்களில் கலங்கடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

எங்கள் குடியிருப்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் ஓட்டு கேட்டு வருகிறார்கள். குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் சூழ மூன்று மாடிகளையும் மூச்சிரைக்க ஏறி வருகிறார் வேட்பாளர். கூட்டத்தில் ஒருவர் கையில் வேட்பாளரின் நோட்டீஸ். இன்னொருவர் கையில் துண்டுகள். அழைப்பு மணி அடித்ததும் எட்டிப் பார்த்தால், ‘சாரைக் கூப்பிடுங்கள்’ என்கிறார்கள். (பெரும்பாலும் பெண்களின் ஓட்டைத் தீர்மானிப்பது ஆண்கள்தான் என்பதால் இப்படிக் கேட்கிறார்கள் போலிருக்கிறது!)

சார் இல்லை என்றால், என்ன பேசுவது என்று ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பிறகு ஒரு நோட்டீஸையும் துண்டையும் வைத்து, ’சார் கிட்ட சொல்லிடுங்க. என் சின்னம் பூட்டு, இவர் வார்டுக்கு நிக்கறார், இவர் சின்னம் சீப்பு. எங்களுக்கு மறக்காமல் ஓட்டுப் போடுங்க’ என்கிறார்கள்.

’துண்டு வேண்டாம்’ என்றதும் திடுக்கிடுகிறர்கள். பிறகு சமாளித்து, சிரித்துவிட்டுச் செல்கிறார்கள். 

எதிர் வீட்டில் அவர்கள் கேட்ட ’சார்’ இருந்தார். உடனே அவருக்குத் துண்டைப் போர்த்தினார் வேட்பாளர். கூட வந்தவர்கள் கை தட்டினார்கள். ஓட்டு கேட்டுவிட்டுச் சென்றார்கள்.

துண்டுகளிலும் பல தினுசு. இரண்டு வோட்டுகள் என்றால் காட்டன் துண்டு. நான்கு ஓட்டுகள் என்றால் டர்கி டவல்.

அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு வேட்பாளர். அவரிடமும் துண்டு. ‘நான் இளைஞர். நல்லது நடக்கணும்னா உங்க வோட்டு இளைஞருக்குப் போடணும்.’

பத்தரை மணிக்கு மீண்டும் அழைப்பு மணி.

துண்டு இல்லை. கூட்டம் இல்லை. இருவரும் மஞ்சள் ஆடை அணிந்து, மாலை போட்டிருந்தனர்.

‘இவங்க என் மனைவி. பொது வேட்பாளரா நிக்கறாங்க. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஆதரிப்பீங்கன்னு நம்பறேன்’ என்று வண்ண நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

எங்கள் பகுதி வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய, நூறு கார்களில் ஆள்களை அழைத்துச் சென்றாராம். பெண்களுக்கு இருநூறு ரூபாயும் ஆண்களுக்கு ஐந்நூறு ரூபாயும் தந்தார்களாம். சில இடங்களில் ஓட்டுக்கே பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள்.

’எங்களுக்கு ஓட்டே இங்க இல்லை. நாங்களே இந்த வருஷத்துக்குத் தேவையான துண்டுகளை வாங்கிக்கிட்டோம். நீங்க என்ன விவரம் பத்தாதவங்களா இருக்கீங்க? நம்ம கிட்ட எடுத்த காசைத்தானே அவங்க துண்டா தர்றாங்க?’ என்று கேட்டார் எதிர் வீட்டுப் பெண்.


ஊரில் இருப்பவர்களில் பாதிக்கு மேல் வேட்பாளர்களாகக் கலத்தில் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள்.

Monday, September 26, 2011

மரங்களின் தாய்!






இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்னை சுற்றுச்சூழல் சீர்கேடு. காடுகள் அழிப்பு, மழை வளம் குறைதல், பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. அதனால் துருவப்பிரதேசங்களில் இருக்கும் பனி உருகத் தொடங்கிவிட்டது. பனி உருகி கடலில் கலந்தால் நீர் மட்டம் உயரும். நிலப்பகுதிகள் மூழ்கக்கூடிய அபாயம். இதை எப்படித் தடுக்கலாம் என்று உலகம் முழுவதும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றி 1980களிலேயே யோசிக்க ஆரம்பித்து, செயலில் இறங்கியவர் வாங்கரி மாத்தாய். 1977-ம் ஆண்டு முதல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இவர் ஆரம்பித்த  பசுமைப்பட்டை இயக்கம் மூலம் 3 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன!


70 வயது வாங்கரி மாத்தாய் பிறந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் அவர் கல்வி கற்க ஆரம்பித்தார். 1960-ம் ஆண்டில் கென்யாவிலிருந்து 300 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் ஒருவராகப் படிக்கச் சென்றார். உயிரியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டங்களை முடித்தார். அப்போது அவருக்குச் சுற்றுச் சூழல் மீது ஈடுபாடு வந்தது.
படிப்பை முடித்தவுடன் தாய் நாட்டில், நைரோபி பல்கலைக்கழகத்தில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆர்வத்துடன் வந்து சேர்ந்தார் வாங்கரி. ஆனால், அவருடைய வேலையை வேறொருவருக்கு அளித்திருந்தனர். பெண் என்பதாலும் பழங்குடி என்பதாலும்தான் அந்த வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டார். இரண்டு மாதங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, ஜெர்மன் பேராசிரியர் ஒருவரிடமிருந்து மைக்ரோஅனாடமி என்ற புதிய துறையில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. பேராசிரியரின் தூண்டுதலில் ஜெர்மன் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்தார்.


1966-ம் ஆண்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த வாங்கரி, மத்தாய் என்ற கென்யரைச் சந்தித்தார். இருவருக்கும் நட்பு உருவானது. 1969-ம் ஆண்டு இருவரும் நைரோபியில் திருமணம் செய்துகொண்டனர். வாங்கரியின் கணவர் அரசியலில் நுழைந்தார். முதல் மகன் பிறந்தான். 1971-ம் ஆண்டு அனாடமியில் பிஹெச்டி பட்டம் பெற்றார் வாங்கரி. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிஹெச்டி பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

வாங்கரி வேலை செய்த பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமைகள் வழங்க வேண்டும் என்று போராடினார். சுற்றுச்சூழல் இயக்கங்கள், கென்ய செஞ்சிலுவைச் சங்கம், பெண்கள் இயக்கம் என்று ஏராளமான இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார் வாங்கரி. அப்போது கிராமப்புறப் பெண்களிடம் பழகியபோதுதான், அவர்களின் பொருளாதாரத் தேவைகள், விவசாயப் பிரச்னைகள், நிலத்துக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.


இதற்கிடையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார் வாங்கரி. அப்போது நடைபெற்ற தேர்தலில் வாங்கரியின் கணவர் வெற்றி பெற்றார். கென்யாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வாங்கரிக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராமப்புறப் பெண்களுக்கு வருமானம்தான் முதல்  பிரச்னை. அவர்களுக்கு வருமானம் அளிக்கும் நேரத்தில் மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்குச் சரியான வேலை மரம் வளர்ப்பது. கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தார். மரக்கன்றுகளைக் கொடுத்து தங்கள் நிலங்களில் நடச் சொன்னார். ஓரளவு வருமானத்தையும் அளித்தார். தங்கள் நிலங்களில் மரங்கள் வைத்து முடித்த பிறகு, பிற இடங்களிலும் மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பெண்களே மரக்கன்றுகளை உருவாக்கும் பண்ணைகளை ஆரம்பித்தனர். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர்.

இதைப் பார்த்து அரசாங்கம் பயந்தது. மக்களுக்கு விழிப்புணவு வந்து, மண்ணையும் மரத்தையும் காப்பாற்றினால், தங்களுடைய காடு அழிப்பு, ஊழல் போன்றவற்றுக்கு முடிவு வந்துவிடுமோ என்று அஞ்சியது. கூட்டம் போடக்கூடாது, ஒன்பது பேருக்கு மேல் கூடி நின்று பேசக்கூடாது என்று தடை விதித்தது. ஒவ்வொன்றையும் தைரியமாக எதிர்கொண்டார் வாங்கரி.
1977-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப்பட்டை இயக்கம் உதயமானது. வாங்கரி ஓய்வின்றி போராடிக்கொண்டிருக்கும் போது, சொந்த வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. கணவர் தனியாகச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

‘அவள் அதிகம் படித்தவள். மிகவும் தைரியமானவள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பவள். உறுதியானவள். என்னால் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை – விவாகரத்துக்கு வாங்கரியின் கணவர் சொன்ன காரணம் இதுதான்!

விவாகரத்துக்காக நிறைய செலவாகியிருந்தது. அத்துடன் மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளானார் வாங்கரி. 6 ஆண்டுகள் குழந்தைகளை, கணவர் பொறுப்பில் விட்டிருந்தார். அடிக்கடிச் சென்று குழந்தைகளைக் கவனித்து வந்தார். பொருளாதாரச் சிக்கல் தீர்ந்த பிறகு, குழந்தைகளை அழைத்து வந்துவிட்டார்.

79-ம் ஆண்டு நேஷனல் கவுன்சில் ஆஃப் உமன் ஃபார் கென்யா என்ற அமைப்புக்குத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் வாங்கரி. இதன் கீழ் பல்வேறு பெண்கள் இயக்கங்கள் இயங்கின. வாங்கரியின் தொடர் போராட்டங்களால் அரசாங்கம் எரிச்சல் அடைந்தது. பல்வேறு இடையூறுகளைத் தந்தது. அப்போதுதான் ஜனநாயக அரசாங்கம் அமைய வேண்டிய தேவையை உணர்ந்தார் வாங்கரி. 1988-ம் ஆண்டு சுற்றுச்சூழல் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.


1989-ம் ஆண்டில் வாங்கரியின் பசுமைப்பட்டை இயக்கம் அரசாங்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. உஹுரு பூங்காவில் பெரிய வணிக வளாகம் அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. மரங்களை அழித்து, வளாகம் அமைப்பதை எதிர்த்து கடிதங்கள் எழுதினார். போராட்டங்களை நடத்தினார். எதற்கும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. வாங்கரியை பைத்தியக்காரப் பெண் என்று பட்டம் சூட்டியது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1990-ம் ஆண்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அரசியல்வாதிகள், அரசாங்கம் போன்றவற்றைப் பகைத்துக்கொண்டதால் பலமுறை வாங்கரியும் அவருடைய  இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள்.

1992-ல் ரியோடிஜெனிரோவில் நடந்த ஐ.நாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வாங்கரி சென்றார். கென்ய அதிபரும் அதில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பேசுவதற்கு வாங்கரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மிக மோசமான ஊழல் பேர்வழிகளாக இருந்தனர். அவர்களால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடு. காட்டில் உள்ள மரங்களை அழித்தனர். காட்டையே அழித்தனர். ஊழல் செய்யக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதாக இல்லை. வாங்கரி யோசித்தார். அரசியல் அமைப்பை மாற்றினால் தவிர, வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டார். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் இணைந்துகொண்டார்.

1997 தேர்தலில் வாங்கரி போட்டியிட்டார். அவரைப் பற்றிய வதந்திகள் மக்களிடம் பரப்பப்பட்டன. சில வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனால் அவருடைய மனம் சோர்வடையவில்லை. பசுமைப்பட்டை இயக்கம் மூலம் அமைதிக்காக மரங்களை நடும் பணிகளில் கவனம் செலுத்தினார்.

2002-ம் ஆண்டு தேர்தல் வந்தது. வாங்கரி மாத்தாய் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றது. வாங்கரி 98% வோட்டுகளைப் பெற்றார். சுற்றுச்சூழலுக்கான இணை அமைச்சராக 2005-ம் ஆண்டு வரை செயல்பட்டார். பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திவந்தார்.

2004-ம் ஆண்டு அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வாங்கரிக்கு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்க பெண் மற்றும் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் இவர். ’இந்தப் பரிசு எளிய மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் உழைப்பு ஒருநாள் உலகை மாற்றும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டார் வாங்கரி மாத்தாய்.

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

’மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள், மருந்து, விறகு, மரம் போன்றவை கிடைக்கின்றன. சுத்தமான காற்று கிடைக்கிறது. மரங்களை விட மிக அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப் பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’  என்கிறார் மரங்களின் தாய்.

(தமிழ் பேப்பரில் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை)