Friday, July 10, 2009

சூரிய கிரகணம்

சூரியக் கண்ணாடிகள்

ஜூலை 22, 2009 அன்று காலை 6.23 மணிக்கு நிகழ இருக்கும் சூரியக் கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்கை நிகழ்வு. சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் கண்ணாடிகள் விற்பனை செய்கிறார்கள்.

சூரியக் கண்ணாடி விலை ரூ. 10/-

கிடைக்கும் இடம் :

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை - 86
தொலைபேசி : 28113630

கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக் கூட்டத்தில் சூரிய கிரகணம் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வானியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான என். ராமதுரை சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நாள் : 18.07.2009 , நேரம் : மாலை 6.30 மணி

இடம் : கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 18

Monday, July 6, 2009

வானில் ஒரு தீபாவளி!

அன்று காலை சூரிய கிரகணம் என்பதால் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி விட்டனர். சாப்பிடக்கூடாது, குளிக்கக்கூடாது, வெளியில் வரக்கூடாது என்று காலம் காலமாகச் சொல்லி வந்த விஷயங்களை மக்கள் சரியாகப் பின்பற்றினார்கள். தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. வழக்கம் போல எங்கள் வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் அன்றும் இருந்தது. அம்மா காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

நேரம் நெருங்கியது. அம்மா, அப்பா, தங்கைகள் அனைவரும் ஆளுக்கு ஒரு சூரியக் கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு, மாடிக்கு விரைந்தோம். மெதுவாக இருட்டத் தொடங்கியது. பறவைகள் மாலை வேளைகளில் கூட்டுக்குள் அடைவதைப் போல ’காச்மூச்’ என்று கத்திக்கொண்டே தங்கள் கூடுகளுக்குத் திரும்பின. (விடிந்து நாலு புழு, பூச்சிகளைப் பிடிக்கலை. அதுக்குள்ளே இருட்டி விட்டதே என்று நினைத்திருக்குமோ!)

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது சூரியன். பட்டப்பகலில் இதுபோன்ற அனுபவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு நிமிடத்துக்குள் தொலைந்துபோன சூரியனை யாரோ கண்டுபிடித்தது போல மீண்டும் கண்களுக்குப் புலனாகியது. ஒளிக்கீற்று கொஞ்சம் கொஞ்மாகத் தடித்துக்கொண்டே வந்தது. இறுதியில் முழு சூரியன் வானில் பிரகாசித்தது. அற்புதமான அனுபவம்! வார்த்தைகளில் கொண்டு வருவது கடினம்.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சந்திரன் சூரியனை சில நிமிடங்களுக்கு மறைத்து விடுகிறது. இதைத்தான் சூரியகிரகணம் என்கிறோம்.

இந்த அனுபவத்தை இன்னும் ஒரு முறை பெறுவதற்கு இயற்கை நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது. ஜூலை 22, 2009 அன்று முழு சூரியகிரகணம் நிகழ இருக்கிறது. நேரம் காலை 6.23. இதுவரை 3 நிமிடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்த இந்த அதிசயம் ஜூலை 22 அன்று 6 1/2 நிமிடங்களுக்கு நீடிக்க இருக்கிறது. சென்னை, மும்பை போன்ற இடங்களில் 80%, கொல்கத்தாவில் 90% கிரகணத்தைப் பார்க்க முடியும்.

சூரியகிரகணத்தின் போது மட்டுமே வைரமோதிரம் எனப்படும் சூரியனின் கரோனாவைக் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரியகிரகணத்தைக் கண்டுகளியுங்கள். இந்த சூரிய கிரகணத்தை விட்டுவிட்டால், அடுத்த சூரியகிரகணத்தை 2087-ம் ஆண்டில்தான் பார்க்க முடியும்!

சூரியகிரகணத்தால் கண்களுக்குப் பாதிப்பா, இல்லையா என்பதை இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே பாதுகாப்பாக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரிய கிரகணத்தைக் கொண்டாடுவோம்.

Thursday, July 2, 2009

சிதைந்துபோன நம்பிக்கை

எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பாதியில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். நெடுநெடு உயரம். சிவப்பாக, ஒல்லியாக இருந்தாள். தோற்றத்தைப் பார்த்தால் பத்தாவது என்று சொல்லலாம். தோற்றம், ஸ்டைல் எல்லாம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று காட்டியது. எல்லோருக்கும் புதிதாகச் சேர்ந்த அந்த மாணவியைப் பார்ப்பதிலும், பேசுவதிலும் ஆர்வம். பேச ஆரம்பித்ததும்தான் தெரிந்தது அவள் இலங்கையைச் சேர்ந்தவள் என்று. மிக விரைவிலேயே பாடங்களைக் கற்று, க்ரூப் லீடர்களில் ஒருவராகி விட்டாள். அத்துடன் எங்களின் நட்பு வட்டத்திலும் இணைந்துவிட்டாள். எங்களுடன் படித்தாலும் அவளை எல்லோரும் அக்கா என்றே அழைத்தோம்.

ஒரு நாள் அவளிடம், ‘நீயும் நாங்களும் ஒன்றாகத்தானே படிக்கிறோம். உன் பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொல்லேன்’ என்றேன் நான்.

’சொந்தங்களை விட்டு வந்துட்டோம். இங்க எல்லோரும் அக்கான்னு கூப்பிடறப்ப எனக்கு நெருக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. அப்படியே கூப்பிடட்டும்’ என்று சொல்லிவிட்டாள்.

‘எங்க ஊர்ல அப்படி இருக்கும், இப்படி இருக்கும்’ என்று நல்ல விஷயங்களாகத்தான் சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படுவோம்.

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் அவள், அன்று தன் இயல்பைத் தொலைத்திருந்தாள். காரணம் கேட்கக் காத்திருந்தேன். நல்லவேளை கணித ஆசிரியர் அன்று வரவில்லை.

‘என்ன அக்கா?’ என்று நான் கேட்டவுடன் விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

‘நாங்க எல்லோரும் இங்க வரலை. எங்க அண்ணன்கள் ரெண்டு பேர் இலங்கையில இருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னால எங்க ஏரியால குண்டு வீச்சு நடந்திருக்கு. அவங்ககிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை. எங்கம்மா அழுதுகிட்டே இருக்காங்க’ என்றாள்.

’அழாதே. ஒண்ணும் நடந்திருக்காது’ என்றோம்.

’உங்களுக்கு எல்லாம் தெரியாது. நாங்க இலங்கையில் ரொம்ப வசதியாக வாழ்ந்தோம். எங்க அண்ணன்கள் பிஸினஸ் செய்துக்கிட்டிருந்தாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம். எனக்குப் படிப்புல ஆர்வம் அதிகம். நல்லா படிக்க வைக்கணும்னு எல்லோரும் சொல்வாங்க. அடிக்கடி எங்க நாட்டுல பிரச்னை நடந்துக்கிட்டே இருக்கும். ஒரு நாள் நான், அப்பா, அம்மா, அக்கா மட்டும் வீட்ல இருந்தோம். சிங்கள ராணுவம் தமிழர்கள் வீட்டைத் தேடி வந்துக்கிட்டிருக்காங்கன்னு தகவல் வந்தது. வீட்டில் இருந்த நகைகள், கொஞ்சம் பணம், துணிகளை எடுத்துக்கிட்டு வெளியே வந்தோம். எங்க தெருக்குள்ள ராணுவம் நுழைஞ்சிருச்சு. என்ன பண்ணறதுன்னே தெரியலை...

’பக்கத்து வீட்ல ரொம்ப வருஷமா பழகின சிங்களர் குடும்பம். நாங்க தயங்கினப்ப, தயங்காமல் எங்களை அவங்க வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனாங்க. அக்கம் பக்கத்தில் எங்களைப் பற்றி விசாரித்த ராணுவம், எங்கள் வீட்டைக் கொளுத்தியது. கண் முன்னால நாங்க வாழ்ந்த வீட்டை நெருப்பு தின்பதைப் பார்த்தும் எங்களால் அணைக்கவோ, கதறி அழவோ முடியலை. இரவு முழுவதும் அவங்க வீட்ல அழுதுகொண்டே இருந்தோம்.

’காலையில எங்க அண்ணன்கள் வந்து சேர்ந்தாங்க. எங்களுடன் இரண்டு அண்ணன்களையும் சேர்த்து அனுப்பி வைச்சாங்க. மீதி ரெண்டு பேர் சொந்த மண்ணை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. இங்க வந்தால் இன்னும் கொடுமை. எங்க அண்ணன்களுக்கு ஏற்ற வேலை கிடைக்கல. ஒருத்தர் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கறார். இன்னொருத்தர் ஒரு கடையில வேலை செய்யறார். ரெண்டு அண்ணன்கள் என்ன ஆனாங்கன்னே தெரியலை’ என்று அழுதாள்.

‘அக்கா கவலைப்படாதே. நாங்க எல்லாம் இருக்கோம்ல. எங்க நாடும், தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு ஆதரவா இருக்காங்க. சீக்கிரம் நல்லது நடக்கும். நீங்க அங்க போயிடலாம்’ என்றேன்.

‘நாங்க மறுபடியும் போவோமா?’

மறுவாரம் அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் அம்மா அழுதுகொண்டிருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்.

‘காசு, பணம் இல்லாமல் வாழலாம். நாடு இல்லாமல் மட்டும் வாழக்கூடாதும்மா. நாங்க தப்பு பண்ணிட்டோம். எங்க மக்களோட, எங்க மண்ணிலேயே நாங்க செத்துப் போயிருக்கணும். எங்க மக்கள் கஷ்டப்படறப்ப நாங்க மட்டும் இங்கே எப்படி இருக்க முடியும்?‘

அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அன்றும் என்னிடம் இல்லை. இன்றும் என்னிடம் இல்லை.

மூன்று மாதங்களாக இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டன. பல இரவுகளில் தூக்கம் தொலைந்து போனது. துக்கத்தைத் தாங்க முடியாமல் அழுதும், பேசியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். ஒன்றும் செய்ய முடியாத இயலாமை... இயலாமை... என்ற குற்ற உணர்வு வாட்டி வதைக்கிறது.

ஆதரவு அற்ற இந்தத் தேசத்தில் வசிக்கும் அவலத்தை எண்ணி நீயும் உன் குடும்பமும் எவ்வளவு வலி உணர்வீர்கள் என்பதை நினைக்கும்போது தொண்டை அடைக்கிறது.

அதனால்தான் நேற்று வந்த கனவில் கூட உன் முகத்தை நிமிந்து பார்க்கும் சக்தி என்னிடம் இல்லை அக்கா.

Thursday, May 7, 2009

அண்ணனுக்குத் தெரியாமல் திருமணம்!

முழுப் பரிட்சை முடிவதற்கும் சித்திரைத் திருவிழா ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும். விடுமுறை, திருவிழாவுக்கு என்று உறவினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். வைகை ஆறு ஓடும்(!) மதுரை, மானாமதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சுவாமிகளை அலங்காரம் செய்வார்கள். இந்த அலங்காரத்துக்கான செலவுகளை ஊரில் இருக்கும் பணக்காரர்கள் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளுக்கும் மண்டகப்படி அமைப்பார்கள்.

ஊரே களை கட்டும். பத்து நாள்களும் மாலை பொழுதுகளை மக்கள் ஆற்றில்தான் கழிப்பார்கள். குடை ராட்டினம், பலூன் கடை, வளையல் கடை, தின்பண்டக் கடை, ஆழ்ந்த சிவப்பு, ஆரஞ்சு, மெஜந்தா வண்ணங்களில் குளிர் பானங்கள் விற்கும் கடைகள், ஆற்றிலேயே ஊற்றுத் தோண்டி தண்ணீர் விற்கும் கடைகள் என்று களைகட்டியிருக்கும்.

‘பீம புஷ்டி அல்வா’ என்று எழுதியிருக்கும் கடையில் ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருப்பார்! அல்வாவுக்கும் புஷ்டிக்கும் என்ன சம்பந்தம்? அல்வா சாப்பிட்டு, புஷ்டியாகலாம் என்றால் அந்தக் கடைக்காரர் ஏன் இப்படி இருக்கிறார்? இன்றுவரை புரியாத புதிர்.

இக்கரையிலும் அக்கரையிலும் இருக்கும் இரண்டு தியேட்டர்களைத் தவிர, பொழுதுபோக்குவதற்கான எந்த அம்சமும் இல்லாத ஊர். அதனால் தீபாவளி, பொங்கலுக்கு எடுக்கும் துணிகளைக்கூட போட்டுச் செல்ல வழியிருக்காது. ஒவ்வொரு நாளும் நல்ல துணிகளை உடுத்தக்கூடிய வாய்ப்பாக எண்ணி, அலங்காரத்தில் இறங்கிவிடுவார்கள்.

சுவாமி அலங்காரத்தைப் பார்த்துவிட்டு, தின்பண்டம் சாப்பிட்டு, ராட்டினம் சுற்றி முடித்த பிறகு வீடு திரும்புவார்கள். நிறையப் பேர் வீட்டில், சாப்பிட்ட பிறகு மீண்டும் ஆற்றுக்குக் கிளம்புவார்கள். விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம், சொற்பொழிவு, குலேபகாவலி, பாண்டுரங்கன் என்று லேட்டஸ்ட் (!) படங்கள் திரையிடப்படும். ஆற்றுக்குள்ளேயே தூங்கிவிட்டு, காலையில் திரும்புபவர்களும் இருப்பார்கள்.

மதுரையில் மீனாட்சி-சொக்கர் திருமணம் நடக்கும். மீனாட்சியின் அண்ணன் அழகர். மானாமதுரையில் ஆனந்த வள்ளி- சோமநாதர் என்ற பெயரில் திருமணம் நடைபெறும். அதே அழகர்தான் ஆனந்தவள்ளிக்கும் அண்ணன். திருவிழாவின் எட்டாவது நாள் அண்ணன் அழகருக்குத் தெரியாமல் திருமணம் நடைபெறும்.

பத்தாவது நாள் அழகர் திருமணத்தைக் கேள்விப்பட்டு, தங்கைக்கு சீர் கொடுக்க வருவார். அன்று காலையிலேயே விழா ஆரம்பமாகிவிடும். அழகர் வேகமாக சீர்வரிசைகளைக் கொடுத்துவிட்டு, கோபித்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி, சென்றுவிடுவார். இதைத்தான் ஆற்றில் அழகர் இறங்குகிறார் என்பார்கள். அழகர் இறங்கும் அன்று சம்பிரதாயத்துக்காக வைகை ஆற்றில் தண்ணீர் விட்டிருப்பார்கள். வெயிலுக்கு பானகம், நீர்மோர் எல்லாம் இலவசமாக வழங்குவார்கள்.

பதினோராவது நாள் அன்று அழகர் தசாவதாரம் எடுப்பார். பத்துவிதமாக அலங்காரம் செய்வார்கள். அன்று இரவுதான் திருவிழாவின் ஹைலைட்! சைவம், அசைவம், இனிப்பு, காரம் என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவுகளை ஏராளமாகச் செய்வார்கள். இரவு எட்டு மணிக்கு அத்தனை பதார்த்தங்களுடன் ஆற்றுக்குச் சென்றுவிடுவார்கள். உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள் யார் வந்தாலும் இலை போட்டு, பரிமாறுவார்கள்.

ஆற்றுக்கு நிறைய பெண்கள் வந்திருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக இளைஞர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். நிறைய சாப்பிட்டு, பேசிச் சிரித்து, நள்ளிரவில் வீடு திரும்புவார்கள். அடுத்த திருவிழா வரை அந்த சந்தோஷம் போதுமானது!

Saturday, April 18, 2009

Prodigy எழுத்தாளர் பட்டறை

* குழந்தைகளுக்கான புத்தகங்களை Prodigy மூன்று ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. எழுத்துகள், எண்கள், உருவங்கள் என்று மிகச் சிறிய குழந்தைகளுக்கும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கதை வடிவில் அறிவியல் புத்தகங்களை வண்ணத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 80 பக்கங்களில் அறிவியல், வாழ்க்கை வரலாறு, சரித்திரம், நாடுகள், கண்டங்கள், உயிரினங்கள், பொதுஅறிவு போன்ற பிரிவுகளில் இதுவரை 180 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

* இன்று மாணவர்கள் மத்தியில் Prodigy புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் எளிமையான இந்தப் புத்தகங்களை விரும்பி வாசிக்கின்றனர்.

* இந்த வேளையில் எங்கள் புத்தகங்களை ஆய்வு செய்வது அவசியம் என்று நினைக்கிறோம். மேலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிய விரும்புகிறோம். எனவே கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளுடன் வேலை செய்பவர்கள் என்று பலரையும் அழைத்து ஓர் எழுத்தாளர் பட்டறை நடத்த முடிவு செய்தோம்.

* எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், குழந்தை எழுத்தாளர் ரேவதி, நியூ ஹொரைசான் மீடியாவின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, முதன்மை ஆசிரியர் பா. ராகவன் ஆகியோர் குழந்தைகளுக்கான எழுத்து, புத்தகங்கள், மொழி, எடிட்டிங் போன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

* அறிவியல் இயக்கத்தின் தலைவர் ராமானுஜம், இரா. நடராஜன்,
அ. வெண்ணிலா, யூமா வாசுகி, ஹேமாவதி, மாதவன், அ. வள்ளிநாயகம் ஆகியோர் கலந்துரையாடல்களுக்குத் தலைமை ஏற்கின்றனர்.

* பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் இந்தப் பட்டறையில் பங்கேற்கிறார்கள்.

* நாளை (ஏப்ரல் 19, 2009) சென்னையில் நடைபெறும் இந்தப் பட்டறை குறித்து திங்கள் கிழமை விரிவான பதிவு வெளியாகும்.

Friday, April 3, 2009

டைம் வேஸ்ட் பண்ணிய அம்மா!

கோடை விடுமுறை என்றாலே கொண்டாட்டமாக இருக்கும். ஒரு மாதத்துக்குப் படிக்க வேண்டிய தொல்லை இருக்காது. யூனிஃபார்ம் போட வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் எங்கள் பெரியப்பா, அத்தைகளின் வீடுகளில் இருந்து விடுமுறைக்காக எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு குடும்பமாக வர வர எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. (அம்மாவுக்குத்தான் சமையல் வேலை அதிகம் இருக்கும்.) 8 பேருக்குக் குறையாமல் குழந்தைகள் எப்பொழுதும் எங்கள் வீடுகளில் இருப்பார்கள்.

காலையில் ஆறு மணிக்கு பதநீர் விற்று வரும் சத்தம் கேட்டு, எல்லோரும் விழிப்போம். வேக வேகமாகப் பல் தேய்த்து விட்டு வருவோம். ஆளுக்கு ஒரு மட்டையில் பதநீர் வாங்கிக் குடிப்போம். சில நாள்களில் பதநீர் குடித்ததும், அம்மா வடகம் மாவு கிளறி வைத்திருப்பார். ஆளுக்கு ஒரு கிண்ணமும் ஸ்பூனும் கொடுத்து விடுவார். சிலர் தடி தடியாக மாவை அள்ளி ஊற்றுவார்கள். (அந்த வெயிலிலும் காய்வதற்கு மூன்று நாள்கள் ஆகும்!) சிலர் மிகவும் மெல்லியதாக ஊற்றிக் கொண்டிருப்பார்கள். துணியில் இருந்து எடுப்பதற்குள் பெரும்பாடாகி விடும். எல்லோரும் வேலை செய்து களைத்துப் போய் வீட்டுக்குள் செல்வோம்.

கடைக்கார அப்பத்தா விடம் பனியாரம் அல்லது பருத்திப்பால் வாங்கி வைத்திருப்பார் அம்மா. அதைச் சாப்பிட்டு விட்டு, ஒவ்வொருவராகக் குளிக்கச் செல்வோம். அதிலும் நீயா, நானா போட்டி! இடியாப்பம், ஆப்பம், அப்பம், புட்டு, பூரி, வெந்தயக் களி, பால் பனியாரம், குழிப்பணி்யாரம், கேழ்வரகு ரொட்டி, கொழுக்கட்டை என்று தினம் ஒரு பலகாரமாக அம்மா செய்து வைத்திருப்பார்.

சாப்பிட்டதும் ஆளுக்கு ஓர் அறையாகப் பிரித்துக் கொண்டு வீட்டைப் பெருக்குவோம். கடைகளுக்குப் போகச் சொன்னால் போய் வருவோம். மற்றப்படி எங்களுக்கு வேலை ஒன்றும் கொடுக்க மாட்டார் அம்மா.

பன்னீர் மரத்தடியில் அமர்ந்து கொஞ்ச நேரம் கதை பேசுவோம். திடீர் என்று பாட்டுக்குப் பாட்டு நடத்துவோம். சினிமா பேர் சொல்லி விளையாடுவோம். அம்மா அழைப்பார். நுங்கு விற்பவர் வந்திருப்பார். ஆளுக்கு ஒரு நுங்கை வெட்டிக் கொடுக்க, சாப்பிடுவோம். இந்த மெனுவும் கம்பெனி கொய்யா, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் என்று மாறிக்கொண்டே இருக்கும். மீண்டும் பாண்டி, திருடன் - போலீஸ் என்று விளையாட்டுத் தொடரும்.

மீண்டும் அம்மா அழைப்பார். யாராவது ஒருவர் கடைக்குப் போய் ஐஸ்கட்டி வாங்கி வருவோம். நன்னாரி சர்பத் போட்டுக் கொடுப்பார் அம்மா, அத்தை, சித்தி யாராவது. வெயிலுக்கு ஜில்லென்று குடித்து விட்டு, அரட்டையடிப்போம்.

மதியம் சாப்பிட்டு முடித்ததும் வெயிலில் அலைய விடமாட்டார்கள். பல்லாங்குழி, ஐந்து கல், குச்சி விளையாட்டு என்று உள் அரங்க விளையாட்டுகளில் பிஸியாக இருப்போம். மாலை ஐந்து மணிக்கு ’கடலை... கடலை...’ என்று கோபாலுவின் குரல் கேட்கும். எல்லோரும் வெளியில் வருவோம்.

கறுத்த உடலுக்கு அடிக்கிற சிவப்பு, ரோஸ், பச்சை என்று சேலைகளும், அதே வண்ணங்களில் வளையல், பொட்டு, ரிப்பன் வைத்துக் கொண்டு, ரோஸ் நிற பவுடர் பூசிக்கொண்டு வரும் கோபாலுவை அழைப்போம்.

‘என்ன பேரு சொல்றீங்க? இப்ப நான் சுந்தரியாக்கும்’ என்றபடி வரும் கோபாலுவிடம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, உப்புக் கடலை, பட்டாணி என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாங்கிக்கொள்வோம்.

காலையில் கோபாலுவாக இருக்கும் ஒருவர் மாலையில் சுந்தரியாகும் அதிசயம் அப்போது எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் கேட்டாலும் பதில் இல்லை.

வாசல் தெளித்து, கோலம் போடுவோம். அம்மா காபி தருவார். ஆறு மணிக்கு சூடாகக் கிடைக்கும் அச்சு முறுக்கு, தண்ணீருடன் ஆற்றுக்குக் கிளம்பி விடுவோம். எங்களுடன் அத்தை, பெரியம்மா யாராவது வருவார்கள்.

ஆற்றுக்குச் சென்றதும் முதல் விளையாட்டு ஊற்று தோண்டுவதுதான். யார் விரைவாகவும், பெரிதாகவும் தோண்டுகிறார்கள் என்பது போட்டி! பெரியம்மாவிடம் கதை கேட்போம். நாங்களும் கதை சொல்வோம்.

‘வணக்கம் வணக்கம் மகராஜா. எனக்கிட்ட கட்டளை என்ன ராஜா?’

‘என் பெயர் சொல்லாத எந்தன் மகனை மலைதனில் உருட்டிக் கொன்றுவிடுங்கள்!’

‘வேண்டாம்... வேண்டாம்... மகராஜா... என் மகனை விட்டுவிடுங்கள்...‘

என்று பல்வேறு பாத்திரத்தையும் நடித்துக் காட்டுவாள் சௌந்தரம்.

ரமா, செந்தில் டான்ஸ் ஆடுவார்கள்.

இருட்டத் தொடங்கியதும் அந்த விளையாட்டை ஆரம்பிப்போம். ஒரு பெரிய குச்சியை இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் பிடித்துக்கொண்டு வர, பின்னாடி வரிசையாக மற்றவர்கள். முன்னே செல்லும் நான் ‘ போராடுவோம்... போராடுவோம்... இறுதி வரை போராடுவோம். தமிழக அரசே... தமிழக அரசே... அரிசி விலையைக் குறைத்துவிடு...’ இப்படி கோஷம் போட, மற்றவர்களும் திருப்பிச் சொல்வார்கள். அநேகமாக இந்த விளையாட்டு தினமும் நடைபெறும். ஊர்வலம் முடிந்ததும் ஏதோ சாதித்த திருப்தி கிடைக்கும்!

அப்போது எங்கள் பாண்டி சித்தப்பா உள்ளிட்ட பலர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பள்ளி விட்டு வரும்போது, சித்தப்பா கோஷம் போட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். என்ன கட்சி, என்ன போராட்டம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் சித்தப்பா நல்ல விஷயத்துக்காக எல்லோருக்காகவும் போராடுகிறார் என்பது மட்டும் புரிந்தது. படித்து, பெரியவள் ஆனதும் சித்தப்பா போல போராட வேண்டும் என்று நினைப்பேன். சித்தி உள்பட எங்கள் உறவினர்கள் பலருக்கும் சித்தப்பா பிஸினஸைக் கவனிக்காமல், கட்சி வேலை பார்ப்பது பிடிக்காது. அதனால் இந்த விளையாட்டை இருட்டில், ஆற்றுக்குள் மட்டுமே விளையாடுவோம்.

சாமி உண்டு என்று பல நாள்கள் நாங்கள் சித்தப்பாவிடம் வாதாடுவோம். எங்களை அலட்சியம் செய்யாமல், எங்களுக்குப் புரியும் விதத்தில் விஷயங்களைச் சொல்வார் சித்தப்பா. அதில் எங்களுக்கு உடன்பாடு வராவிட்டாலும் சித்தப்பாவை மிகவும் பிடிக்கும். அதே போல அவர் சார்ந்திருந்த கட்சியையும்!

எட்டு மணிக்கு வீடு திரும்புவோம். உள்ளூரில் நிறைய உறவினர்கள் இருப்பதால் யாராவது வீட்டுக்கு வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஒரு மணி நேரம் அரட்டை! ஒண்பது மணிக்கு அம்மா சாப்பிட அழைப்பார்.

மதியம் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதம் தான் எல்லோர் வீட்டிலும் இரவு உணவு. குழம்பு, காய் எல்லாம் சேர்த்து சுண்ட வைத்த குழம்பு, வடகம், மோர் மிளகாய், கொத்தவரைவற்றல், துவையல், ஊறுகாய் என்று விதவிதமான சைட் டிஷ்கள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஜில்லென்ற பழைய சாதம் சாப்பிட்டு சிறிது நேரத்தில் நாள் முழுவதும் உழைத்த(!) களைப்பில் எல்லோரும் பேசிக் கொண்டே தூங்கி விடுவோம்.

இன்று என் மகனிடம் இந்த விஷயங்களை மிகவும் ரசித்துச் சொன்னேன்.

‘ம்ம்... அந்தக் காலத்துல டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் இல்லாததால ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணிருக்கீங்கம்மா!’

0

Friday, March 6, 2009

ஏலம் போனவை பொருள்கள் மட்டுமா?

தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகாலம் இனவெறிக்கு எதிராகவும், இந்தியர்களின் உரிமைக்காகவும் போராடி வெற்றி கண்டார் காந்தி. அவர் வக்கீல் தொழில் பார்த்த நேரத்தை விட பொதுச்சேவைக்கு செலவிட்ட நேரம்தான் அதிகம். இதனால் அவர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போதும் தான் செய்யும் சேவைக்கு எதையும் எதிர் பார்த்ததில்லை.

தென்னாப்பிரிக்கப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு, இந்தியாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் காந்திக்கு பரிசுப் பொருள்களுடன் அவரது வீட்டுக்கு வந்தனர்.

‘காந்திஜி, உங்களைப் பற்றி நன்கு தெரியும். நீங்கள் எந்தப் பொருளையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் இது எங்களின் அன்பு. இதை உங்களால் நிராகரிக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு, பரிசுப் பெட்டியை வைத்துவிட்டுச் சென்று விட்டனர்.

பெட்டியைப் பிரித்துப் பார்த்தால் விலையுயர்ந்த வைரம், ரத்தினம், மரகதக் கற்கள் மின்னிக்கொண்டிருந்தன. இவை தவிர, ஐம்பத்திரண்டு பவுனுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் அதில் இருந்தது.

’பொதுச்சேவைக்குப் பணமாகப் பெறாமல், பரிசாகப் பெற்றாலும் அதுவும் ஊதியம் தானே! அப்படி இந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டால் இது எப்படிப் பொதுச்சேவையாகும்? மக்களின் அன்பை மட்டுமே என்னால் பரிசாகப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்று உறுதியுடன் இருந்தார் காந்தி.

தன் குழந்தைகள், மனைவியின் சம்மதத்துடன் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஓர் அறக்கட்டளை தொடங்கி, அதற்கு இந்த விலைமதிப்பு மிக்கப் பரிசுப் பொருள்களை உயிலாக எழுதி வைத்துவிட்டார்.

உண்மை, எளிமை, நேர்மை, உயிர்களிடத்தில் அன்பு, பொறுமை ... இப்படி காந்தி தன் வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எத்தனையோ கருத்துகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது கொள்கைகளைத்தான் நம்மால் காப்பாற்றவோ, பின்பற்றவோ முடியவில்லை. அவரது செருப்பு, கண்ணாடி, கடிகாரம், குவளை போன்ற பொருள்களையாவது காப்பாற்றலாம் என்று அரசியல்வாதிகளும், மக்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் போலிருக்கிறது!

காந்தி பயன்படுத்திய பொருள்கள்தான் முக்கியம் என்று நினைத்தால், அதையாவது ஒழுங்காகப் பாதுகாத்திருக்கக்கூடாதா? இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியாளர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? எப்படி இந்தப் பொருள்கள் நாடு கடந்து சென்றன? காந்தி இறந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சர்ச்சை! லஹோ ரஹோ முன்னாபாய் படத்தில் நடித்ததற்காக சஞ்சய் தத்தில் இருந்து மாறுவேடப் போட்டியில் காந்தி வேஷம் போட்ட குழந்தை வரை கருத்துக் கேட்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள்!

மும்பை தாக்குதல் போல ஏலம் விஷயத்தில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த மீடியாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஜய் மல்லையா!