Friday, July 31, 2009

ஐயோ, இது என்ன வலி?

சில மாதங்களுக்கு முன்பு அல்சர் பிரச்னைக்காக மருத்துவரைச் சந்தித்தேன். டெஸ்ட் செய்து விட்டு, வலி, எரிச்சல் இருக்கிறதா என்று கேட்டார். இரைப்பையில் எரிச்சல் இருக்கிறது என்று சொன்னேன். உடனே அவர் சிரித்து விட்டார். ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டோமோ என்று டாக்டரைப் பார்த்தேன். ’எல்லோரும் நெஞ்சு எரிச்சல்னுதான் சொல்வாங்க. நீங்க வித்தியாசமா இரைப்பை எரிச்சல்ங்கறீங்க!’ என்றார்.

நண்பர் ஒருவர் உயிரியல் பேராசிரியர். அவர் அடிக்கடி ஏதாவது பிரச்னைக்காக மருத்துவரிடம் செல்வார். டாக்டர் என்ன பிரச்னை என்றால் நெஞ்சு வலி, வயிற்று வலி என்றெல்லாம் சொல்ல மாட்டார். ‘இதயத்தில் இடது வென்ட்ரிக்கிளிளுக்கும் வலது வென்ட்ரிகிளுக்கும் நடுவில் வலிக்கிறது’ என்றார். திகைத்துப்போன டாக்டர், ‘நீங்களும் மருத்துவரா?’ என்று கேட்டார். ‘இல்லை... எனக்குக் கொஞ்சம் விஷயம் தெரியும்’ என்றார் நண்பர். ’இதயத்தில் ஒண்ணும் பிரச்னை இல்லை. விஷயம் தெரியறதால நீங்களே சாதாரண வலியைக் கூட அதுவோ, இதுவோன்னு கற்பனை செஞ்சுக்கறீங்க. வலியை மட்டும் சொல்லுங்க. என்ன பிரச்னை, எங்கே பிரச்னைன்னு கண்டுபிடிக்கறது எங்களோட வேலை’ என்றார் டாக்டர்.

இப்படி... கொஞ்சம் விஷயம் தெரிந்தாலே ஏதாவது வலி என்றால் ஏதேதோ கற்பனை செய்துவிடுகிறோம். மருத்துவம் படித்த ஒரு டாக்டருக்கு இந்த உணர்வு எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள ரொம்ப ஆசையாக இருந்தது.

சமீபத்தில் அதுக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. என் தோழியும் அவரது கணவரும் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். தோழியின் கணவர் ஒரு மருத்துவர். ஒரு நாள் முழுவதும் எங்களுடன் தங்கியிருந்தனர். குழந்தைகள் விளையாடும்போது, ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது, என்று எந்த நேரத்திலும் அவர் ஓர் அப்பாவாகத் தெரிந்தாரே தவிர, மருத்துவராகத் தெரியவில்லை. அவர்கள் கிளம்பும்போதுதான், அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

‘இவர் வீட்டில் டாக்டரா இருப்பாரா? சாதாரண அப்பாவா இருப்பாரா?’

உடனே டாக்டர் சிரித்தார்.

‘இவரும் நம்மளை மாதிரிதான் இருப்பார். எல்லோரும் கடைபிடிக்கும் சில அடிப்படை சுகாதாரத்தை நாங்களும் கடைபிடிப்போம். மற்றபடி அதைச் சாப்பிடாதே காய்ச்சல் வரும், இதைப் பண்ணாதே சளி பிடிக்கும்ன்னு எல்லாம் சொல்ல மாட்டார்’ என்றார் தோழி.

‘எல்லா மக்களுக்கும் உள்ளதுதானே நம்மளுக்கும். மருத்துவம் தெரிந்ததால சும்மா எல்லா விஷயத்தையும் யோசிச்சிட்டே இருக்கக்கூடாது’ என்றார் டாக்டர்!

Tuesday, July 28, 2009

பள்ளி என்றொரு சர்க்கஸ் கூடாரம்!

காலையில் செய்தித்தாளைப் பார்த்தபோது அதிர்ச்சி. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்ப்பெரும்பாக்கம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமீபத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நடத்தியிருக்கிறார்கள். அதில் முக்கிய அம்சமாக கராத்தே மாஸ்டரின் சாகசங்கள்! பத்து வயது மாணவர்கள் சீருடைகளுடன் வரிசையாகக் கைகளை நீட்டி, குப்புறப் படுத்திருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளை குழந்தைகளின் கைகள் மேல் ஓட்டி வருகிறார் மாஸ்டர். குழந்தைகள் பயத்தில் தலையை நிமிர்த்தவில்லை. சுற்றி நிற்கும் கூட்டம் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்த சாகசம் தரையில் படுத்திருக்கும் மாணவியின் வயிற்றில் ஒரு பலகை வைத்து, அதன் மீது மோட்டார் சைக்கிளை ஓட்டி வருகிறார் மாஸ்டர்.

குழந்தைகளைத் துன்புறுத்தும் இந்த நிகழ்ச்சி அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊர்ப்பெரியவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது! அதுவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சம்மதத்துடன் எனும்போது என்ன சொல்வது?

2008ம் ஆண்டு எடுத்த புள்ளிவிபரம் அரசாங்கப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதாகக் கூறியிருக்கிறது. அதே போல மாணவர்களின் சேர்க்கையும் குறைந்து வருவதாகச் சொல்கிறது. இந்த நேரத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் காட்ட வேண்டிய அக்கறையை குழந்தைகளைப் பகடையாக வைத்து, இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளில் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

Wednesday, July 22, 2009

மனிதர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்!

இந்த முறை அதிகாலையில் சூரிய கிரகணம் நிகழ்வதால் சென்ற முறை கிடைத்த த்ரில் இருக்காது என்பது தெரிந்துவிட்டது. அதிகாலையில் மேக மூட்டம் இருப்பதால் தெரியாது என்று சிலர் சொன்னார்கள். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் கிரகணத்தை எதிர் நோக்கி இருந்தேன். காலை 5.45 க்கு எழுந்து பார்த்தால் பறவைகள் எல்லாம் வழக்கத்தை விட அதிகமாகக் கத்திக்கொண்டிருந்தன. சூரியன் இன்னும் வெளிவரவில்லை. காபி குடித்துவிட்டு, சூரியக் கண்ணாடிகளுடன் மாடிக்குச் சென்றோம்.

96 வீடுகள் நிறைந்த இந்தக் குடியிருப்பில் ஒரு வீட்டுக் கதவும் திறக்கவில்லை. அருகில் குடியிருக்கும் கட்டடத் தொழிலாளர்கள் வீடுகளில் ஒரு பக்கம் சமையல், குளியல் என்று வழக்கமான பணிகள் நடந்துகொண்டிருந்தன. பால்காரர், கீரை விற்பவர், அதிகாலையில் வேலைக்குச் செல்பவர்கள் என்று சொற்பமான மனிதர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். வழக்கம் போல பேருந்துகள் சென்றாலும் கூட்டம் இல்லை.

6.20க்கு ஒரு வழியாக மேகத்தின் பிடியிலிருந்து விடுபட்டு சூரியன் சிறிய கீற்றாக வெளிப்பட்டது. வசதியான இடத்தில் நின்றுகொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் வெளிவந்துகொண்டிருந்தது. யாராவது கண்ணில் பட்டால், கண்ணாடியைக் கொடுத்து கிரகணத்தைப் பார்க்கச் சொல்லலாம் என்று பார்த்தேன். ம்ஹூம். ஒருவரும் வெளியில் வருவதாக இல்லை.

தஞ்சாவூரிலிருந்து அப்பாவும், தாம்பரத்திலிருந்து தங்கையும் கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தார்கள். ஒன்றிரண்டு வீடுகளில் இருந்து டிவி சத்தம் பூட்டிய கதவைத் தாண்டி வெளியில் வந்துகொண்டிருந்தது. பண்டிகைகளை டிவியுடன் கொண்டாடுவதைப் போல கிரகணத்தையும் டிவியிலாவது பார்க்கிறார்களே!

7.20க்கு சந்திரனின் மறைப்பிலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக்கொண்டு, சூரியன் வழக்கம்போல தகதகத்தது. 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூரிய கிரகணத்தில் எல்லோரும் வீட்டுக்குள் சிறையிருக்க, எங்கள் குடும்பம் மட்டும் மாடியில் கிரகணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. இன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை!

Friday, July 10, 2009

சூரிய கிரகணம்

சூரியக் கண்ணாடிகள்

ஜூலை 22, 2009 அன்று காலை 6.23 மணிக்கு நிகழ இருக்கும் சூரியக் கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்கை நிகழ்வு. சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் கண்ணாடிகள் விற்பனை செய்கிறார்கள்.

சூரியக் கண்ணாடி விலை ரூ. 10/-

கிடைக்கும் இடம் :

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை - 86
தொலைபேசி : 28113630

கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக் கூட்டத்தில் சூரிய கிரகணம் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வானியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான என். ராமதுரை சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நாள் : 18.07.2009 , நேரம் : மாலை 6.30 மணி

இடம் : கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 18

Monday, July 6, 2009

வானில் ஒரு தீபாவளி!

அன்று காலை சூரிய கிரகணம் என்பதால் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி விட்டனர். சாப்பிடக்கூடாது, குளிக்கக்கூடாது, வெளியில் வரக்கூடாது என்று காலம் காலமாகச் சொல்லி வந்த விஷயங்களை மக்கள் சரியாகப் பின்பற்றினார்கள். தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. வழக்கம் போல எங்கள் வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் அன்றும் இருந்தது. அம்மா காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

நேரம் நெருங்கியது. அம்மா, அப்பா, தங்கைகள் அனைவரும் ஆளுக்கு ஒரு சூரியக் கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு, மாடிக்கு விரைந்தோம். மெதுவாக இருட்டத் தொடங்கியது. பறவைகள் மாலை வேளைகளில் கூட்டுக்குள் அடைவதைப் போல ’காச்மூச்’ என்று கத்திக்கொண்டே தங்கள் கூடுகளுக்குத் திரும்பின. (விடிந்து நாலு புழு, பூச்சிகளைப் பிடிக்கலை. அதுக்குள்ளே இருட்டி விட்டதே என்று நினைத்திருக்குமோ!)

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது சூரியன். பட்டப்பகலில் இதுபோன்ற அனுபவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு நிமிடத்துக்குள் தொலைந்துபோன சூரியனை யாரோ கண்டுபிடித்தது போல மீண்டும் கண்களுக்குப் புலனாகியது. ஒளிக்கீற்று கொஞ்சம் கொஞ்மாகத் தடித்துக்கொண்டே வந்தது. இறுதியில் முழு சூரியன் வானில் பிரகாசித்தது. அற்புதமான அனுபவம்! வார்த்தைகளில் கொண்டு வருவது கடினம்.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சந்திரன் சூரியனை சில நிமிடங்களுக்கு மறைத்து விடுகிறது. இதைத்தான் சூரியகிரகணம் என்கிறோம்.

இந்த அனுபவத்தை இன்னும் ஒரு முறை பெறுவதற்கு இயற்கை நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது. ஜூலை 22, 2009 அன்று முழு சூரியகிரகணம் நிகழ இருக்கிறது. நேரம் காலை 6.23. இதுவரை 3 நிமிடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்த இந்த அதிசயம் ஜூலை 22 அன்று 6 1/2 நிமிடங்களுக்கு நீடிக்க இருக்கிறது. சென்னை, மும்பை போன்ற இடங்களில் 80%, கொல்கத்தாவில் 90% கிரகணத்தைப் பார்க்க முடியும்.

சூரியகிரகணத்தின் போது மட்டுமே வைரமோதிரம் எனப்படும் சூரியனின் கரோனாவைக் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரியகிரகணத்தைக் கண்டுகளியுங்கள். இந்த சூரிய கிரகணத்தை விட்டுவிட்டால், அடுத்த சூரியகிரகணத்தை 2087-ம் ஆண்டில்தான் பார்க்க முடியும்!

சூரியகிரகணத்தால் கண்களுக்குப் பாதிப்பா, இல்லையா என்பதை இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே பாதுகாப்பாக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரிய கிரகணத்தைக் கொண்டாடுவோம்.

Thursday, July 2, 2009

சிதைந்துபோன நம்பிக்கை

எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பாதியில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். நெடுநெடு உயரம். சிவப்பாக, ஒல்லியாக இருந்தாள். தோற்றத்தைப் பார்த்தால் பத்தாவது என்று சொல்லலாம். தோற்றம், ஸ்டைல் எல்லாம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று காட்டியது. எல்லோருக்கும் புதிதாகச் சேர்ந்த அந்த மாணவியைப் பார்ப்பதிலும், பேசுவதிலும் ஆர்வம். பேச ஆரம்பித்ததும்தான் தெரிந்தது அவள் இலங்கையைச் சேர்ந்தவள் என்று. மிக விரைவிலேயே பாடங்களைக் கற்று, க்ரூப் லீடர்களில் ஒருவராகி விட்டாள். அத்துடன் எங்களின் நட்பு வட்டத்திலும் இணைந்துவிட்டாள். எங்களுடன் படித்தாலும் அவளை எல்லோரும் அக்கா என்றே அழைத்தோம்.

ஒரு நாள் அவளிடம், ‘நீயும் நாங்களும் ஒன்றாகத்தானே படிக்கிறோம். உன் பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொல்லேன்’ என்றேன் நான்.

’சொந்தங்களை விட்டு வந்துட்டோம். இங்க எல்லோரும் அக்கான்னு கூப்பிடறப்ப எனக்கு நெருக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. அப்படியே கூப்பிடட்டும்’ என்று சொல்லிவிட்டாள்.

‘எங்க ஊர்ல அப்படி இருக்கும், இப்படி இருக்கும்’ என்று நல்ல விஷயங்களாகத்தான் சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படுவோம்.

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் அவள், அன்று தன் இயல்பைத் தொலைத்திருந்தாள். காரணம் கேட்கக் காத்திருந்தேன். நல்லவேளை கணித ஆசிரியர் அன்று வரவில்லை.

‘என்ன அக்கா?’ என்று நான் கேட்டவுடன் விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

‘நாங்க எல்லோரும் இங்க வரலை. எங்க அண்ணன்கள் ரெண்டு பேர் இலங்கையில இருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னால எங்க ஏரியால குண்டு வீச்சு நடந்திருக்கு. அவங்ககிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை. எங்கம்மா அழுதுகிட்டே இருக்காங்க’ என்றாள்.

’அழாதே. ஒண்ணும் நடந்திருக்காது’ என்றோம்.

’உங்களுக்கு எல்லாம் தெரியாது. நாங்க இலங்கையில் ரொம்ப வசதியாக வாழ்ந்தோம். எங்க அண்ணன்கள் பிஸினஸ் செய்துக்கிட்டிருந்தாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம். எனக்குப் படிப்புல ஆர்வம் அதிகம். நல்லா படிக்க வைக்கணும்னு எல்லோரும் சொல்வாங்க. அடிக்கடி எங்க நாட்டுல பிரச்னை நடந்துக்கிட்டே இருக்கும். ஒரு நாள் நான், அப்பா, அம்மா, அக்கா மட்டும் வீட்ல இருந்தோம். சிங்கள ராணுவம் தமிழர்கள் வீட்டைத் தேடி வந்துக்கிட்டிருக்காங்கன்னு தகவல் வந்தது. வீட்டில் இருந்த நகைகள், கொஞ்சம் பணம், துணிகளை எடுத்துக்கிட்டு வெளியே வந்தோம். எங்க தெருக்குள்ள ராணுவம் நுழைஞ்சிருச்சு. என்ன பண்ணறதுன்னே தெரியலை...

’பக்கத்து வீட்ல ரொம்ப வருஷமா பழகின சிங்களர் குடும்பம். நாங்க தயங்கினப்ப, தயங்காமல் எங்களை அவங்க வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனாங்க. அக்கம் பக்கத்தில் எங்களைப் பற்றி விசாரித்த ராணுவம், எங்கள் வீட்டைக் கொளுத்தியது. கண் முன்னால நாங்க வாழ்ந்த வீட்டை நெருப்பு தின்பதைப் பார்த்தும் எங்களால் அணைக்கவோ, கதறி அழவோ முடியலை. இரவு முழுவதும் அவங்க வீட்ல அழுதுகொண்டே இருந்தோம்.

’காலையில எங்க அண்ணன்கள் வந்து சேர்ந்தாங்க. எங்களுடன் இரண்டு அண்ணன்களையும் சேர்த்து அனுப்பி வைச்சாங்க. மீதி ரெண்டு பேர் சொந்த மண்ணை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. இங்க வந்தால் இன்னும் கொடுமை. எங்க அண்ணன்களுக்கு ஏற்ற வேலை கிடைக்கல. ஒருத்தர் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கறார். இன்னொருத்தர் ஒரு கடையில வேலை செய்யறார். ரெண்டு அண்ணன்கள் என்ன ஆனாங்கன்னே தெரியலை’ என்று அழுதாள்.

‘அக்கா கவலைப்படாதே. நாங்க எல்லாம் இருக்கோம்ல. எங்க நாடும், தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு ஆதரவா இருக்காங்க. சீக்கிரம் நல்லது நடக்கும். நீங்க அங்க போயிடலாம்’ என்றேன்.

‘நாங்க மறுபடியும் போவோமா?’

மறுவாரம் அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் அம்மா அழுதுகொண்டிருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்.

‘காசு, பணம் இல்லாமல் வாழலாம். நாடு இல்லாமல் மட்டும் வாழக்கூடாதும்மா. நாங்க தப்பு பண்ணிட்டோம். எங்க மக்களோட, எங்க மண்ணிலேயே நாங்க செத்துப் போயிருக்கணும். எங்க மக்கள் கஷ்டப்படறப்ப நாங்க மட்டும் இங்கே எப்படி இருக்க முடியும்?‘

அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அன்றும் என்னிடம் இல்லை. இன்றும் என்னிடம் இல்லை.

மூன்று மாதங்களாக இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டன. பல இரவுகளில் தூக்கம் தொலைந்து போனது. துக்கத்தைத் தாங்க முடியாமல் அழுதும், பேசியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். ஒன்றும் செய்ய முடியாத இயலாமை... இயலாமை... என்ற குற்ற உணர்வு வாட்டி வதைக்கிறது.

ஆதரவு அற்ற இந்தத் தேசத்தில் வசிக்கும் அவலத்தை எண்ணி நீயும் உன் குடும்பமும் எவ்வளவு வலி உணர்வீர்கள் என்பதை நினைக்கும்போது தொண்டை அடைக்கிறது.

அதனால்தான் நேற்று வந்த கனவில் கூட உன் முகத்தை நிமிந்து பார்க்கும் சக்தி என்னிடம் இல்லை அக்கா.