Wednesday, December 24, 2008

கல்கியும் மேலாண்மை பொன்னுசாமியும்!

சில ஆண்டுகளுக்கு முன் நான் ‘கல்கி’ நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். அது கார்கிலில் போர் நடந்துகொண்டிருந்த நேரம். கல்கி பத்திரிகைக்கு எழுத்தாளர்களிடமிருந்து கார்கில் பற்றிய சிறப்புச் சிறுகதைகள் நிறைய வந்துகொண்டிருந்தன. அவற்றில் இருந்து மூன்று தேர்வு செய்யப்பட்டு, பிரசுரமாயின.

தேர்வுக்கு முன்னர் கார்கில் கதைகள் குறித்து எடிட்டோரியலில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. மூன்று கதைகளில் தனக்குப் பிடித்தது ‘மேலாண்மை பொன்னுசாமியின் கதை’ என்றார் துணை ஆசிரியர் இளங்கோவன். (தற்போது குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர்)

காரணம் என்ன என்றோம்.

‘மற்ற இரண்டு எழுத்தாளர்களும் கார்கில் பற்றி வெளியான செய்திகளைத் தங்களுடைய கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றி கதையாக எழுதியிருந்தார்கள். ஆனால் கார்கில் போரில் உயிரிழந்த ஒருவருடைய உடலைத் தமிழ்நாட்டு கிராமத்துக்கு எடுத்து வருவதை, கதையாகச் சொல்லியிருக்கிறார். உண்மை கற்பனையை விட உயர்வானது. அதுதான் நெஞ்சைத் தொடும்’ என்றார்!

சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள மேலாண்மை பொன்னுசாமிக்கு வாழ்த்துகள்.

Sunday, December 14, 2008

எரியும் பனிக்காடு - இன்னும் அணையாத நெருப்பு

என்ன உருவம் என்று சொல்ல முடியாதபடி பள்ளமும் மேடுமாக நிமிர்ந்து, பரந்து நிற்கும் மலைகள். அதன்மீது பல வண்ணப் பச்சை நிறங்களில் போர்த்தப் பட்டிருக்கும் தேயிலைச் செடிகள். மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் வெண்ணிற மேகங்கள். மேகங்களைத் தாண்டி கசிந்து வரும் இளம் சூரியக் கதிர்கள். மென்மையான குளிர் என்று எப்போதும் வசீகரித்துக் கொண்டிருக்கும் இடம் தேயிலைத் தோட்டம். மூணாறு, நீலகிரி, வால்பாறை போன்ற தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.

சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் பல புத்தகக் கடைகளில் எரியும் பனிக்காடு புத்தகத்தைப் பார்த்தேன். என் கவனத்தை அந்தப் புத்தகம் ஈர்த்தாலும் ஏனோ நான் வாங்கவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தப் புத்தகத்தைப் பற்றி என் அப்பா சொன்னபோது வாங்காமல் விட்டது வருத்தமாக இருந்தது. புத்தகம் கைக்கு வந்த பிறகு என் இயல்பையே கொஞ்சம் மாற்றி விட்டது. தூக்கம் தொலைந்தது. நான் வெகு விரைவில் படித்துமுடித்த சமீபத்திய புத்தகம் இதுதான். படிக்க ஆரம்பித்துவிட்டால் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கவேண்டியிருக்கும்.

1920 முதல் 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் காணப்பட்ட சூழ்நிலையை வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். பெயர் Red Tea. ஆசிரியர் பி.ஹெச். டேனியல். தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் வேலை செய்தவர் டேனியல். தேயிலைத் தோட்டத்தின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இதில் வரும் கதாபாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவை. சம்பவங்கள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாத நிஜம்.

1925-ம் ஆண்டில் திருநெல்வேலி, மயிலோடை கிராமத்தில் வசிக்கும் கருப்பன் - வள்ளி தம்பதியிடமிருந்து இருந்து தொடங்குகிறது கதை. விவசாயமும் இல்லாமல் வேலையும் இல்லாமல் கஷ்டப்படும் கருப்பன், மேஸ்திரி சங்கரபாண்டியனைச் சந்திக்க நேர்கிறது. அவர், ’எஸ்டேட்டில் பாலும் தேனும் ஓடுகிறது, நீங்கள் இருவரும் சந்தோஷமாக ஒருவருடம் சம்பாதித்துவிட்டு, கை நிறைய பணத்துடன் ஊர் திரும்பி, பணக்காரனாக வாழலாம்’ என்று சொல்லி, நாற்பது ரூபாயும் கொடுக்கிறார். கருப்பன் - வள்ளியைப் போல பல குடும்பங்கள் வால்பாறைக்கு வந்து சேர்கின்றன. மேஸ்திரி சொன்னபடி இல்லாமல் அங்கிருந்த சூழ்நிலை முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.

பெண்கள், குழந்தைகள் இலை கிள்ளவும் ஆண்கள் விறகு வெட்டுதல் போன்ற வேலைகளுக்கும் அனுப்பப்படுகின்றனர். மாட்டுக் கொட்டடியை விடவும் மோசமான இடம் தங்குவதற்காக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மிகச் சிறிய இடத்தை இரண்டு குடும்பங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். தினமும் செய்யும் வேலைக்கு கணக்கு வைத்துக்கொள்வார்கள். வாராவாரம் ரேஷனில் அவர்களுக்கு நிர்ணயித்த உணவுப் பொருள்கள் வழங்கப்படும். கறிக்கடையில் அவர்களுக்கு கடனுக்கு கறி கொடுக்கப்படும். வேலைக்குப் போகா விட்டால் ரேஷனில் உணவு தரமாட்டார்கள்.

ஆண்டு இறுதியில் ஒவ்வொரு கூலிக்கும் கணக்குப் பார்க்கப்படும். உணவு, கறி, கடன் எல்லாம் போக மீதி இருந்தால் பணம் கொடுக்கப்படும். படிப்பறிவு இல்லாதவர்களை, போலி கணக்கு எழுதி ஏமாற்றிவிடுகிறார்கள். வருடத்துக்கு இரண்டு, மூன்று முன்று முறை வரும் மலேரியா, டைபாய்டு, காலரா போன்ற நோய்களால் வேலைக்குப் போக முடியாவிட்டால் இரண்டு, மூன்று ரூபாய் கூட மிஞ்சாது. அதனால் அவர்கள் அடுத்த ஆண்டும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். இப்படி ஒரு குடும்பம் அந்த நரகத்துக்குள் விழுந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டு வருவது என்பது முடியவே முடியாத விஷயம்.

மலைப் பிரதேசத்தில் மழைப் பொழிவு என்பது சர்வசாதாரணமானது. ஒவ்வொருவருக்கும் ஒரு கம்பளிதான் கொடுக்கப்பட்டிருக்கும். மழைக்காக ஒதுங்கி நிற்க முடியாது. கம்பளியைப் போர்த்திக்கொண்டு, சகதியில் கால் ஊறிப்போக, நாள் முழுவதும் மழையில் இலை பறிக்க வேண்டும். எடையும் குறையக்கூடாது. இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவும். கம்பளியைக் காய வைக்க நேரம் இல்லாமல், ஈரத்துடனே போர்த்திக்கொண்டு படுக்க வேண்டும்.

சுகாதாரமற்றச் சூழல், குளிர், பாதுகாப்பில்லாத தண்ணீர் போன்றவற்றால் டைபாய்டு, மலேரியா, காலரா போன்ற அழையா விருந்தாளிகள் பருவம் தவறாமல் படையெடுத்துவந்து விடுவது வழக்கம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் மருத்துவமனை கிடையாது. மருத்துவமனை என்ற பெயரில் படிக்காத கம்பவுண்டர் ஒருவர் எல்லா நோய்க்கும் குயினைன் என்ற மருத்தைக் கொடுத்து, மலமும் சிறுநீரும் தேங்கியிருக்கும் அறையில் படுக்கச் செய்துவிடுவார். இந்தக் கசப்பு மருந்துக்குப் பயந்து உயிர் விட்டவர்கள் பலர். சரியான நோய் கண்டுபிடிக்கப்படாமலும், சரியான மருந்துகள் இல்லாமலும் ஒவ்வொரு நோய் வரும்போதும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் செத்துப்போயிருக்கிறார்கள். அவர்களைச் முறையானபடி புதைக்க வழியில்லாமல், கூட்டமாகப் புதைத்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

இதுபோன்ற நோய்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. நோயால் தாக்கப்பட்டாலும் வேலை செய்ய வேண்டும். வழியே இல்லாதபோது மட்டும் விடுமுறை தருவார்கள். சம்பளம் கிடையாது. கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அடைக்க மீண்டும் ஓர் ஆண்டு வேலை செய்ய வேண்டும். இப்படி நோயும் கடனும் அவர்களை ஆண்டுக்கணக்கில் கொத்தடிமைகளாக வைத்திருக்கும். அங்கிருந்து தப்பிக்கவும் முடியாது. தப்பிக்க நினைத்தவர்களை அடித்தே கொன்று விடுவர். (எஸ்டேட்டில் இருந்து தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு என்று ஆங்கில அரசாங்கம் சட்டமே கொண்டு வந்துள்ளது. பிடிபட்டால் அபராதம், சிறை தண்டை போன்றவை கிடைக்கும்).

பெண்கள் பாலியல் கொடுமைக்கும் உள்ளாக வேண்டியிருந்தது. இலைகளைக் கிள்ளிக் கொண்டிருக்கும்போது ஒருபுறம் அட்டைப்பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும். இன்னொரு புறம் ஆங்கில அதிகாரிகள் அசிங்கமான வார்த்தைகளாலும், அருவருப்பூட்டும் சில்மிஷங்களாலும் பெண்களிடம் நடந்துகொள்வார்கள். இதைப் பொறுத்துக்கொள்ளும் பெண்கள் கணக்கில் ஓர் அணா கூடுதலாகக் கணக்கு எழுதப்படும். எதிர்ப்பவர்கள் கேவலமாகத் திட்டப்படுவதுடன், அவர்கள் பறித்த இலைகளின் எடையும் குறைவாக மதிப்பிடப்படும்.

இப்படிப்பட்ட சூழலில் ஆபிரஹாம் என்ற மருத்துவர் அங்கு வந்து சேர்கிறார். மருத்துவமனை, மருந்துகளைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். தன்னால் முடிந்த வரை ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இளம் தம்பதியான கருப்பனும் வள்ளியும் என்ன ஆகிறார்கள் என்பதுடன் கதை முடிகிறது.

வாயைத் திறந்தாலே, ‘ப்ளடி இண்டியன்ஸ், ஸ்டுபிட்’ என்றே அழைக்கிறார்கள் ஆங்கில அதிகாரிகள். அவர்களுக்கு முன் இந்தியர்கள் யாரும் செருப்பு போடக்கூடாது. மழை பெய்தாலும் குடை பிடிக்கக்கூடாது. நாகரிகத்தில் தங்களை முன்னேறியவர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஆங்கிலேயர்களிடம் எழுத்துப் பணியாளர்களும் கூலிகளும் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது இந்நூல். நாடே அடிமைபட்டுக் கிடக்கும் சூழலில் இந்தக் கொத்தடிமைகளின் கூப்பாடு வெளியில் தெரியவே இல்லை.

தாம் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மிக அழுத்தமாகப் பதிவு செய்த எழுத்தாளர்களில் டேனியல் மிக முக்கியமானவர். அவர் மருத்துவ அதிகாரியாக மட்டும் எஸ்டேட்டில் பணிபுரியவில்லை. தொழிலாளர்களின் கஷ்டத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதிலிருந்து மீட்பதற்கும் போராடியிருக்கிறார். தொழிற்சங்கத்தை அமைத்திருக்கிறார்.

டேனியல் போலவே இந்தப் புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்திருக்கும் இரா. முருகவேள் பணியும் முக்கியமானது. கதைக் களம் தமிழ்நாட்டில் நடக்கிறது என்றாலும் மொழிபெயர்ப்பு என்பது எந்த இடத்திலும் தெரிந்துவிடாதபடி, தமிழில் எழுதப்பட்டதைப் போலவே அற்புதமாகச் செய்திருக்கிறார். படிக்கும்போது கதாபாத்திரங்களுடன் நாமும் நனைகிறோம், குளிரில் நடுங்குகிறோம், அட்டையால் உறிஞ்சப்படுகிறோம், காய்ச்சலால் துன்பப்படுகிறோம், அதிகாரிகளால் அவமானப்படுகிறோம், இயலாமையால் வெம்பிப்போகிறோம்...

தேயிலைத் தோட்டங்களைப் பார்க்கும்போதும், தேநீர் குடிக்கும்போதும் இவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எரியும் பனிக்காடு... இன்னும் அணையாத நெருப்பு.

எரியும் பனிக்காடு, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர் - 641015

Thursday, December 4, 2008

ஜந்தர் மந்தர் லெமன் ரைஸ்!

சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய குழந்தைகள் திருவிழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சுமார் ஐம்பது குழந்தைகள் டெல்லியில் உள்ள குழந்தைகளின் வீடுகளுக்கு விருந்தினராகச் சென்றார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இருந்து ஐம்பது குழந்தைகளுடன் இருபது (ரிசோர்ஸ் பெர்சன்ஸ்) பெரியவர்களும் சென்றோம்.

முதல் நாள் புதிய ஊர், தெரியாத பாஷை, பழகாத நபர்களின் வீடுகளுக்குச் செல்ல குழந்தைகள் பயந்தனர். சிலர் அழுதனர். மறுநாள் விருந்தினராகச் சென்ற குழந்தைகளும் உபசரிப்பாளராக இருந்த குழந்தைகளும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். என்ன மொழியில் பேசிக்கொண்டார்கள், எப்படிப் பேசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் கொடுத்த உணவுகளை விரும்பிச் சாப்பிட்டனர்.

ஆனால் பெரியவர்களுக்குத்தான் குளிர் தாங்கவில்லை. சாப்பாடு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மூன்று நாள்கள் பொறுத்திருந்தவர்கள் நான்காம் நாள் பொங்கிவிட்டனர். இவ்வளவுக்கும் சாதம், சப்பாத்தி, டால், சப்ஜி, சாலட் என்று நிறைய ஐட்டங்கள் கண்களைக் கவரும் விதத்தில் அலங்காரத்துடன் இருந்தன. சுவையிலும் குறைவில்லை. ஆனால் எங்கள் நண்பர்களால் சாப்பிட முடியவில்லை. அருகில் இருந்த ஹோட்டல்களிலும் இதே ஐட்டங்கள்தான் கிடைத்தன. வழியே இல்லாமல் திண்டாடினர்.

எல்லோரும் கூட்டம் போட்டு, ஒரு முடிவுக்கு வந்தனர். ஓரளவு ஹிந்தி தெரிந்த நண்பரை அழைத்துக்கொண்டு, சமையற்காரரிடம் சென்றனர். தமிழ்நாட்டுக் காரங்களுக்கு மட்டும் நாளை லெமன் ரைஸும் உருளைக் கிழங்கு கறியும் செய்துகொடுக்கச் சொன்னார்கள். மாலை சமையல் அறைக்குச் சென்று எலுமிச்சம்பழங்கள் வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டார்கள்.

நள்ளிரவு திடீரென்று லைட் எரிந்தது. ஒரு எட்டுப் பேர் கம்பளியைப் போர்த்திக்கொண்டு கிளம்பினார்கள். காரணம் கேட்டேன். ‘ஒரு மணிக்கு சமையற்காரர் வரச் சொன்னார். அவருக்கு எலுமிச்சை சாதம் எப்படிப் பண்றதுன்னு சொல்லிட்டு வரோம்’ என்றனர்.

மறுநாள் வழக்கத்தைவிட எல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள். நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை ஊர்வலம் செல்லும் திட்டம். மதிய உணவைப் பொட்டலமாகக் கட்டிக்கொடுத்து விட்டனர். ஊர்வலம், கூட்டம் எல்லாம் முடிந்து ஒரு பூங்காவில் சாப்பிட அமர்ந்தோம். எல்லோரும் பொட்டலத்தை ஆர்வமாகப் பிரித்தோம். முதல் அதிர்ச்சி சாதம் வெள்ளைவெளேர் என்று எங்களைப் பார்த்து சிரித்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

உடனே ஒருவர் ‘மஞ்சள்தூள் போட மறந்திருப்பான். பிரிச்சு சாப்பிடுங்க’ என்றார்.

நாங்கள் சாதத்தைப் பிசையும் போது உள்ளிருந்து இரண்டாக வெட்டப்பட்ட எலுமிச்சைத் துண்டுகள் வெளியே எட்டிப் பார்த்தன. இன்னொருவருக்கு முழு எலுமிச்சையே எட்டிப்பார்த்தது!

Sunday, November 16, 2008

யார் குற்றவாளி?

· கடந்த வாரம் நடந்த சட்டக்கல்லூரி விவகாரம் எல்லோரையும் ஒரு பிரேக் போட்டு நிறுத்தியிருக்கிறது.
· பள்ளி நிர்வாகத்தைப் பழிவாங்குவதற்காக சம்பந்தமே இல்லாத எட்டு வயது மோனிஷாவைக் கொன்றிருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர்.
· குடித்துக்கொண்டிருக்கும்போது வலுத்த வாக்குவாதத்தால் நண்பனையே கொலை செய்திருக்கிறார் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர்.

இப்படித் தினம்தோறும் மாலை நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் இடம் பெறுகின்றன. இவை எல்லாம் உணர்த்தும் விஷயம் ஒன்றே. பொதுவாக மனிதர்களுக்குச் சகிப்புத்தன்மை குறைந்து வருவதுதான். அறியாமை, ஜாதி வெறி, பழிவாங்கும் நோக்கம் என காரணங்கள் வேறாக இருந்தாலும் சகிப்புத் தன்மை இல்லாததும், மனித உயிரின் அருமை புரியாததுமே அடிப்படை.

ஓர் ஆண் இன்னோர் ஆணின் மீது உரசிவிட்டான் என்று நேற்று கிண்டியிலிருந்து போரூர் வந்து சேரும் வரை பேருந்தில் பயங்கரச் சண்டை. எந்த நேரத்திலும் கைகலப்பில் முடியலாம் என்ற நிலை. சக பயணிகள் அவ்வப்போது தடுத்ததால் காதில் கேட்க முடியாத வசைகளுடன் அந்தச் சண்டை நின்று விட்டது. தடுக்காவிட்டால் அடிதடிதான்.

அலுவலகத்தில் யாரிடமாவது ’என்ன இப்படிப் பண்ணிருக்கே?’ என்று கேட்டுப்பாருங்கள். இவன் என்ன என்னைக் கேள்வி கேட்டுவிட்டான் என்ற கோபத்தில் வந்து விழும் வார்த்தைகள் மிகவும் மோசமாகவே இருக்கும். அலுவலக நடவடிக்கைகளுக்குப் பயந்தோ அல்லது வருமானத்துக்கு அஞ்சியோதான் கைகலப்பு வரை செல்லாமல் (நல்லவேளை!) வார்த்தைப் போரில் முடிந்து போகின்றன இந்தச் சண்டைகள்.

இப்படி இளைய தலைமுறையினர் சகிப்புத்தன்மை குறைந்து போகவும் மனித உயிர்களின் அருமை புரியாமலும் மாறிக்கொண்டிருப்பதற்கு இந்தச் சமூகமே காரணமாக இருக்கிறது.

குழந்தை சற்று விவரம் தெரிய ஆரம்பித்த உடனே ’ஜெட்டிக்ஸ்’ பார்க்க ஆரம்பித்து விடுகிறது. பெரியவர்களுக்கே பயம் தரும் விதத்தில் அவற்றில் வரும் கதாபாத்திரங்களின் முகங்கள், எந்நேரமும் யாரும் யாரையாவது அடிப்பது, உதைப்பது, கொல்வது என்று வன்முறை பார்த்தே வளர்கிறது குழந்தை. பெரியவர்கள் பார்க்கும் சீரியல்களிலோ கேட்கவே வேண்டாம்... யாரும் யாரையாவது பழி தீர்க்கப் புறப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இப்படி ஒவ்வோர் அரை மணிக்கும் வெவ்வேறு ஆள்கள் வெவ்வேறு சீரியல்களில் தவறான காரியங்களைச் செய்வதும், சீரியல்களின் ஆயுளை நீட்டுவதற்கு வில்லன்கள் சுலபமாகத் தப்பிப்பதையும் பார்த்து வளர்கிறவர்களுக்கு வன்முறை எப்படித் தவறாகத் தெரியும்? ஒருவேளை தப்பாக இருந்தாலும் தப்பித்துவிடமுடியும் என்ற எண்ணத்தையும் இவை தோற்றுவிக்கின்றன.

தான் கேட்டதைக் கொடுக்காததால் கோபம் கொண்ட ஐந்து வயதுச் சிறுவன், அருகிலிருந்த அடிகுழாயைப் போய் ஆட்டுஆட்டு என்று ஆட்டியிருக்கிறான். அருகிலிருந்தவர்கள் காரணம் கேட்டபோது ‘இதைப் பிடுங்கி எங்க அம்மாவை அடிக்கப்போறேன்’ என்று சொல்லியிருக்கிறான். கோபம் வந்து அவன் அம்மா அடிக்க, ‘நேத்து ரஜினி மட்டும் கோபத்துல குழாயைப் பிடுங்கி எல்லோரையும் அடிக்கலாம். நான் அடிக்கக்கூடாதா?’ என்று கேட்டிருக்கிறான்!

சென்னையைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவனை அவன் அத்தை கண்டித்திருக்கிறார். இந்த விஷயத்தை அவன் பள்ளியில் தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான். ’கவலைப்படாதடா. உங்க அத்தையை இன்னிக்குப் போட்டுருவோம். உன்னைக் கூப்பிடறதுக்கு மார்க்கெட் வழியாதானே வரணும்?’ என்று கேட்டிருக்கின்றனர். நான்கு சாலை பிரியும் மார்க்கெட் அருகில் நான்கு சிறுவர்களும் குப்பையில் கிடந்த வாழை மட்டைகளுடன் காத்திருந்தனர். சிறுவனின் அத்தை அங்கு வந்ததும் நால்வரும் கோபத்துடன் ரவுண்ட் கட்டி மட்டையால் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அருகில் இருந்தவர்கள் சிறுவர்களைப் பிடித்து, நன்றாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்!

ஒரு காலத்தில் சினிமாவில் ஹீரோ, வில்லன் என்று இரண்டு பேர் இருந்தனர். இன்று தாதாக்களே ஹீரோக்கள். அவர்களும் வசதியாக இருக்கிறார்கள். அழகான பெண்களைக் காதலிக்கிறார்கள். அல்லது அழகான பெண்களால் காதலிக்கப்படுகிறார்கள்.

கும்பகோணத்தில் நூறு குழந்தைகள் பலியானது, தீவிரவாதிகள் நடத்தும் கொலைகள், இலங்கை, இராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடக்கும் மனித பலிகள் போன்றவை இன்று செய்தி என்ற வடிவத்தில் நம் வீட்டிலேயே வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் மனித மனம் தன்னை அறியாமலே இதுபோன்ற சம்பவங்களை வழக்கமான விஷயங்களில் ஒன்றாகப் பார்க்கப் பழகிவிடுகிறது. மனித உயிரின் மகத்துவம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

அப்படி இல்லை என்றால் எப்படிக் குக்கிராமத்திலிருந்து சென்னை ஐநாக்ஸ் தியேட்டர்வரை சுப்ரமணியபுரத்தில் வரும் கழுத்தறுப்புக் காட்சியை கைதட்டி ரசிக்க முடியும்?

படித்தவர்கள், பாமரர்கள், வசதியானவர்கள், வறுமையில் இருப்பவர்கள் என்ற பேதம் இன்றி எல்லோர் மனத்திலும் இதுபோன்ற வன்முறைகள் குடியேறிவிட்டன. பலருக்குச் சந்தர்ப்பம் கிடைக்காததால் அந்த எண்ணம் அடி ஆழத்தில் ஒளிந்திருக்கிறது. சிலருக்கு வாய்ப்புக் கிடைப்பதால் வெட்டவெளிச்சமாகி விடுகிறது.

வீடு, சுற்றுப்புறத்தைப் போலவே கல்விக்கும் தனிமனித வளர்ச்சியில் பங்கிருக்கிறது. வெறும் மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்யும் கல்வி முறை மாறவேண்டும். வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டக்கூடிய கடமை கல்வி முறைக்குக் கட்டாயம் இருக்கிறது. மனிதனை மனிதனாக மாற்றாத கல்வியால் என்ன பயன்?

இனிமேலாவது நம் குழந்தைகளை டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, என்.ஆர்.ஐ. ஆகவோ மாற்ற முயற்சிக்க வேண்டாம். மனிதனாக மாற்றுவோம். அதுதான் நாம் வரக்கூடிய தலைமுறைக்குச் செய்யவேண்டிய மிகப் பெரிய உதவி.

Wednesday, October 8, 2008

பச்மரியும் பல்லுபோன கதையும்

சில வருடங்களுக்கு முன் 'சக்மக்' என்ற ஹிந்தி அறிவியல் மாத இதழ் எப்படித் தயாராகிறது என்பதை அறிய நான்கு பேர் கொண்ட ஒரு குழுவாக மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலுக்குச் சென்றோம்.முதல் இரண்டு தினங்கள் சக்மக் அலுவலகம், நூலகம், அச்சுக்கூடங்கள் என்று ஓடிவிட்டன. அடுத்து இரண்டு நாள்கள் போபாலில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பச்மரி மலைவாசஸ்தலத்துக்குச் சென்றுவர முடிவு செய்தோம்.

ஹொசங்காபாத் மாவட்டத்தில் விந்திய சாத்பூரா மலைகளின் ஒரு சிறிய பகுதியில் அழகான அமைதியுடன் அமைந்திருக்கிறது பச்மரி. மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் ஒரே மலைவாசஸ்தலம் பச்மரி மட்டுமே. நான்கு மணிநேரப் பயணத்துக்குப் பின் பச்மரி மலையடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து டவுன் பஸ்சில் பயணம். டவுன் பஸ்ஸுக்குரிய எந்த லட்சணமும் அந்த பஸ்ஸுக்கு இல்லை. ஒரு நாளைக்கு ஒரிரு பஸ்கள் மட்டுமே பச்மரிக்குச் செல்வதால் பயங்கர கூட்டம். அடித்துப்பிடித்து ஏறி, மணிக்கணக்கில் ஊர்ந்து சென்றது. மெல்ல மெல்ல குளிர் தெரிய ஆரம்பித்தது. வழியெல்லாம் மூங்கில் மற்றும் சில பெயர் தெரியாத மரங்களின் அணிவகுப்பு. பன்னிரண்டு மணிக்கு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரண்டு மணிக்கு ஒரு வண்டி இடங்களைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது.

வேனில் அத்தனை பேரும் புதுமணத் தம்பதிகள், எங்களைத் தவிர. முழங்கை வரை செக்கச் சிவந்த மெஹந்தி, வண்ணக் கண்ணாடி வளையல்கள், உதட்டில் மெஜந்தா, சிவப்பு நிறங்களில் அடர்ந்த லிப்ஸ்டிக், நெற்றியில் வஞ்சனையின்றி கொட்டி வைத்த குங்குமம் என்று புதுமணப் பெண்ணுக்குரிய அடையாளங்களுடன் பளிச்சென்று தெரிந்தனர். ஜீன்ஸ், சுடிதார், தலையில் முக்காடிட்ட சேலை என்று உடையில் மட்டுமே வேறுபாடு.

முதலில் நாங்கள் சென்ற இடம் பூங்கா. வழக்கமான பூங்காவைப் போல பல வண்ண மலர்கள் வரிசை கலையாமல் நின்றுகொண்டிருந்தன. பூங்காவுக்கு வெளியிலும் வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் காட்டுப்பூக்கள் எந்தவிதக் கட்டுபாடுகளும் கவனிப்புகளும் இன்றி குப்பென்று பூத்திருந்தன. அடுத்து பாண்டவர் குகைகள். பஞ்ச பாண்டவர்கள் வனங்களில் வசித்தபோது இந்த மலைக்குகையில் தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். அதனால்தான் இந்த ஊரும் பச்மரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து குகைகளில் முதலாம் நூற்றாண்டில் புத்த துறவிகள் வந்து தங்கியிருந்தார்கள் என்று சொன்னார்கள்.

மாலை ப்ரியதரிஷிணி பாயிண்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். சாத்பூரா மலைகளிலேயே இதுதான் மிகவும் உயரமான சிகரம். 1857-ம் ஆண்டு கேப்டன் ஜேம்ஸ் ஃபோர்சித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பெயராலேயே ஃபோர்சித் பாயிண்ட் என்று அழைக்கப்பட்டு, பின்னர் ப்ரியதரிஷிணி பாயிண்ட்டாக பெயர் மாறிவிட்டது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வட்டச் சிவப்பு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமனம் ஆனது, அருமையான அனுபவம்.

திரும்பி வரும் வழியில் வேனில் வந்த அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். மறுநாள் இதே அணி முழு நாள் சுற்றுலாவுக்குச் செல்வதாக முடிவானது. மறுநாள் மஹாதேவோ என்று அழைக்கப்பட்ட சிவலிங்கம் இருக்கும் குகைக்குச் சென்றோம். ஒன்றிரண்டு கடைகள், ஏழெட்டுச் சாமியார்கள் தென்பட்டனர். எல்லோரும் இருட்டுக் குகைக்குள் சென்று லிங்கத்தைப் பார்த்துவிட்டு, திரும்பினோம். வழியில் ஒரு ஜோடி ஹிந்தி பாடல்களைப் பாட ஆரம்பித்தது. இன்னும் சில ஜோடிகளும் அவர்களுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தனர். அடுத்து வேன் போய் நின்ற இடம் ராஜாத் பிரதாப்.

அருவியோ அல்லது மலையையோ நாம் ஏறிச் சென்றுதான் பார்த்திருப்போம். ராஜாத் பிரதாபோ முற்றிலும் வித்தியாசமானது. உயரமான இடத்திலிருந்து கீழ்நோக்கி இறங்கிச் சென்றால்தான் அருவியைக் காண முடியும். ஏறுவதுதானே கஷ்டம் என்று நினைத்த நாங்கள் இறங்குவதற்குத் தயாரானோம். அப்போதுதான் தெரிந்தது. படிகளோ, சரியான பாதையோ கிடையாது. இயற்கையாக அமைந்திருந்த பெரிய பெரிய பாறைகள் சற்று முன்னும் பின்னுமாக அமைந்திருந்தன. ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குக் கவனமாகக் கால் வைத்து இறங்க வேண்டும். கொஞ்சம் தடுமாறினாலும் விழுந்து அடிபட வேண்டியதுதான். எங்கள் குழுவில் குழந்தைகளோ, வயதானவர்களோ இல்லாததால் ஜோடியாகக் கைகளைப் பிடித்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தனர். தட்டுத் தடுமாறி, 15 நிமிடப் பயணத்தின் முடிவில் சற்றுத் தூரத்தில் ஹோவென்று அருவி கொட்டிக்கொண்டிருந்தது.

நாங்கள் தூரத்திலிருந்தே அருவியை ரசித்துக்கொண்டிருந்தோம். எங்களுடன் வந்தவர்கள் இன்னும் சில பாறைகளைக் கடந்து அருவிக்கு அருகில் சென்றார்கள். எனக்கும் அருவி நீரில் கைநனைக்க ஆசையாக இருந்தது. நான் இறங்க வேண்டிய பாறைக்கும் நின்ற பாறைக்கும் இடையே கூடுதல் இடைவெளி. கால் பேலன்ஸ் செய்ய முடியாமல் அப்படியே விழ ஆரம்பித்தேன். எதிரில் மிகவும் கூர்மையான ஓரங்களைக் கொண்ட பெரிய பாறை. 'சரியாக நெற்றிப் பொட்டில் படப்போகிறது. நான் காலி' என்று நினைத்தபடி பாறையில் விழுந்தேன்.

சில நிமிடங்கள் கழித்துக் கண் விழித்தேன். வாய்ப்பக்கம் கடுமையான வலி. ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்த ஒரு பெண் பஞ்சை நனைத்து சுத்தம் செய்தார். அப்போதுதான் அதை நான் கவனித்தேன். வாயிலிருந்து நூல் போல் ஏதோ ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதன் நுனியில் வெள்ளையாக... ஐயோ என்னுடைய பல். ஒன்றும் யோசிக்கவில்லை. பல்லை அப்படியே எடுத்து அதன் பழைய இடத்தில் வைத்துவிட்டேன். வேகமாக மேலே வந்தோம். அத்தனை ஜோடிகளும் எங்களுடன் மேலே வந்து சேர்ந்தனர். நாங்கள் தனியாக ஒரு காரைப் பிடித்து, டாக்டரைப் பார்க்கப் போகிறோம் என்றோம். ஜோடிகள் அத்தனைபேரும் தங்கள் ட்ரிப்பை இத்துடன் முடித்துக்கொண்டு, எங்களுடன் வருவதாக அடம்பிடித்தனர். அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, டாக்டர் வீட்டுக்கு வந்தோம்.

சான்றிதழ் மட்டுமே அவர் ஒரு டாக்டர் என்பதை எடுத்துக்காட்டியது. அவருடைய வீட்டு வராண்டாவில் சிறிய அலமாரியில் அடிப்படை மருத்துவக் கருவிகள் மட்டுமே வைத்திருந்தார்.

‘உங்க நல்ல நேரம் நான் இன்னிக்கு ஊருக்குப் போகல. மாதத்துக்குப் பத்து நாள் வெளியூர் போயிடுவேன். இங்க இருக்கற ஒரே டாக்டர் நான்தான்’ என்றபடி பெரிய கோணி தைக்கும் ஊசிபோல் ஒன்றை எடுத்துச் சரி பார்த்தார்.

எனக்குப் பயத்தில் உடல் நடுங்கியது. நல்ல வேளை, அது சரியில்லை என்று வேறொரு ஊசியை எடுத்து, பிய்ந்து போன மேல் உதட்டை சாக்குமூட்டையைக் கட்டுவது போல் முடிச்சாகத் தையல் போட்டார். அந்த வலியிலிலும் இது சரியில்லை என்று சொன்னேன். ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தவர், நான் சற்றும் எதிர்பாராவண்ணம் நூலைப் பிடித்து இழுத்தார். நான் கத்திய அலறலில் மலையே ஒரு குலுங்கு குலுங்கியிருக்கும். மறுபடியும் சுமாராக தைத்து முடித்தார். உடன் வந்தவர்கள் உடைந்த பல்லைக் காட்டச் சொன்னார்கள். இந்த டாக்டரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வெளியே வந்துவிட்டேன்.

பல் உடைந்ததில் பாதியில் நின்றுவிட்டது பச்மரி பயணம். பேருந்து வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி என அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் எத்தனை இருக்கின்றவனவோ!

Tuesday, September 23, 2008

இப்படியும் ஒரு சாமியார்!

சமீபத்தில் பெண் சாமியார் ஒருவர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டேன், அது குழந்தைகள் தொடர்பானது என்பதால். சாமியார் என்றதும் நான் நினைத்துக்கொண்டிருந்த பிம்பங்கள் எல்லாம் அவரைப் பார்த்ததும் உடைந்து விழுந்தன. பார்லரில் ஒரே அளவாக வெட்டப்பட்ட முடி, வெள்ளை நிறத்தை மேலும் வெள்ளையாக்கும் விதத்தில் பரவலாகப் போடப்பட்ட பவுடர், விலையுயர்ந்த புடைவையாக இல்லாவிட்டாலும் பளபளப்பான பச்சை வண்ண சேலை, காதுகளில் ஒளிவீசும் வைர தோடுகள், அருகில் லேட்டஸ்ட் ஃபேஷனாக இன்னும் ஒரு மூன்றுகல் வைரத் தோடு, தங்க செயின், வலது கையில் தங்க வ்ளையல்கள் இரண்டு, இடது கையில் வெள்ளைக்கற்கள் பதித்த நவீன கைக்கடிகாரம், இரண்டு கைகளிலும் செக்கச்சிவந்த மருதாணி, கால்களின் மேல்புறம் மாங்காயும் கொடிகளுமாக வரையப்பட்ட மெஹந்தி, கால் நகங்களுக்கு பளபளக்கும் வெள்ளி நிற நெயில் பாலிஷ்...எல்லோரும் அவர் காலில் விழுந்து வணங்கும்போதுதான் சாமியார் என்பதே நினைவுக்கு வந்தது.

காபிபொடியில் வரைந்த ஓவியம் ஒன்றை லேமினேட் செய்து வைத்திருந்தார்கள். காபி பொடி என்றதும் அதை எடுத்து முகர்ந்து பார்த்தார். என்னிடம் ’வாசம் வருகிறதா?’ என்றார். நான் ’இல்லை’ என்றேன். இன்னொரு பெண், ’ உங்களால் வாசனையை உணர முடிகிறதா? அந்த சக்தி உங்களுக்கு இருக்கும் அக்கா. எனக்கு இல்லை’ என்றார். அவரிடமிருந்து பதிலில்லை. கடைசியாக ஓர் ஓவியம் லேமினேட் செய்யப்படாமல் இருந்தது. அதை எடுத்து நுகர்ந்தவர், ’இதுலயே லேசாதான் வாசம் வருது. லேமினேட் பண்ணினா எப்படி வரும்? என்றார். எனக்கு அவர் சாதாரணமாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சுற்றியிருப்பவர்கள் கற்பூரம் காட்டாத குறையாக நடந்துகொள்கிறார்கள்.

சாமியார்கள் உருவாவதில்லை!

Monday, September 22, 2008

ராவணன்தான் வீரன்!

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

1988. பரபரப்பான தேர்தல் நேரம். தஞ்சாவூருக்குத் தேர்தல் கூட்டத்துக்காக வந்திருந்தார் அவர். காலையில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு அடுத்த கூட்டத்துக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

‘அடுத்த கூட்டம் எத்தனை மணிக்கு காம்ரேட்?'

‘12 மணிக்கு காம்ரேட். காபி, டீ ஏதாவது சாப்பிடுகிறீர்களா?'

‘கூட்டத்துக்குப் போக இங்கிருந்து எவ்வளவு நேரம் ஆகும்?'

‘அரைமணி நேரத்தில் போயிடலாம்.'

‘ஓகே. குழந்தைகள் இருக்கும் தோழர்கள் வீடு அருகில் இருந்தால், அங்கு காபி சாப்பிட்டுப் போகலாமா?'


*
ஞாயிற்றுக்கிழமை. தோழர் ஒருவர் குடும்பத்துடன் வந்திருந்தார். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டபடி டிவியில் ஓடிக்கொண்டிருந்த ராமாயணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பாவும் தோழரும் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எங்கள் வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த அப்பாவும் தோழரும் வேகமாக வராண்டாவுக்குச் சென்றார்கள். நானும் பின்தொடர்ந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.வேகமாக உள்ளே வந்து தகவல் கொடுத்தேன். அடுத்த நொடி தட்டு, பாத்திரங்கள் சமையலறைக்குள் புகுந்தன. உள்ளே நுழைந்தார் அவர்.

மெலிந்த தேகம், சோடா புட்டி கண்ணாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை. எல்லோருக்கும் வணக்கம் சொன்னார். வேகமாக டீவியை அணைக்க ஒரு தோழர் வந்தார்.

'குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். டீவியை அணைக்க வேண்டாம்' என்றார் சிரித்துக்கொண்டே அவர்.

டிவியின் ஒலி மட்டும் குறைக்கப்பட்டது

நாற்காலியில் அமர்ந்தவரிடம் அப்பாவை அறிமுகப்படுத்தினார்கள் கூட வந்த தோழர்கள். என் தங்கைகளையும் விஜயையும் அருகில் அழைத்து, கைகளைப் பிடித்துக்கொண்டார்.

‘நான் உங்களுக்குத் தாத்தா. உங்க பேர் என்ன?'

வரிசையாக எல்லோரும் பெயர்களைச் சொன்னோம்.

‘ராமாயணத்துல உனக்கு யாரைப் பிடிக்கும்?' என்று விஜய்யிடம் கேட்டார்.

‘ராவணன்தான் பிடிக்கும்.'

எல்லோரும் சிரித்தனர்.

‘ஏண்டா விஜய் இப்படி மானத்தை வாங்கறே? ராமன்னு சொல்லக்கூடாதா?' என்றார் அவன் அம்மா.

'எனக்குப் பிடிச்சவரைத்தானே அவர் கேட்டார்' என்று கேட்டான் விஜய்.

வீட்டில் பலத்த சிரிப்பு. அவருக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

இளநீர் கொண்டுவந்து கொடுத்தார் அம்மா.

‘குழந்தைகள் முதலில் சாப்பிடட்டும்' என்றார் அவர்.

எல்லோருக்கும் இளநீர் கொடுத்தபிறகு, அவர் குடித்தார்.

‘குழந்தைகளைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி. வருகிறேன்' என்று கூறி, பத்தாவது நிமிடம் கிளம்பிவிட்டார்.

எல்லோரும் வாசலுக்கு வந்து வழியனுப்பி வைத்தோம். கார் கிளம்பியது.

‘என்ன விசேஷம்? யார் வந்தாங்க?' என்று கேட்டார் பக்கத்துவீட்டு மாமி.

பெயரைச் சொன்னேன்.

‘அப்படியா! அப்படி ஒருத்தர் இருக்காரா? எனக்கு ஒண்ணும் புரியலை போ' என்றபடி உள்ளே சென்றுவிட்டார் மாமி.

அவர், 1978 முதல் 1988 வரை திரிபுராவின் முதலமைச்சராக இருந்த நிருபன் சக்ரவர்த்தி. முதல்வர் பதவியில் இருந்து வெளியேறும்போது இரண்டு ட்ரங்க் பெட்டிகளுடன் கட்சி அலுவலகத்தில் குடியேறினார். பெட்டியில் நான்கு செட் ஆடைகளும் புத்தகங்களும் மட்டுமே இருந்தன.

Friday, September 19, 2008

ஃபெரோஸ் காந்திக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா?

சமீபத்தில் ஃபெரோஸ் காந்தி பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தேன். இதற்குமுன் ஃபெரோஸ் காந்தி பற்றி எனக்குத் தெரிந்த தகவல்கள் வெகுசொற்பம். அதிலும் உண்மை இல்லை என்பது என் எண்ணம். இந்தக் காரணமே புத்தகத்தைப் படிக்கத் தூண்டியது. மறக்கப்பட்ட சாமானியர் ஃபெரோஸ் என்று புத்தக அட்டை வாசகம் சொன்தால் கூடுதல் எதிர்பார்ப்போடு படித்தேன்.

பணக்காரர், அழகானவர், புத்திசாலி, தைரியமானவர், அரசியல் பின்னணி கொண்டவர் என்று இந்திராவுக்கு எத்தனையோ ப்ளஸ்கள். சினிமா கதாநாயகன் போல் இந்திராவைத் துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்துகொண்டவர் ஃபெரோஸ். இந்திராவின் குணம், குடும்பம் எல்லாம் அறிந்த ஃபெரோஸ் அவரைத் திருமணம் செய்வதன் மூலம் தான் காணாமல் போவோம் என்பதையும் அறிந்தே எல்லாம் செய்கிறார். அதே போல் இந்திராவும் மொழி, இனம், பணம், குடும்பப் பின்னணி, வருமானம், அப்பாவின் விருப்பம் என்று எதையும் எதிர்பார்க்காமல் ஃபெரோஸ் என்ற மனிதரை மட்டும் விரும்பி இருக்கிறார். திருமணம் முடிந்ததும் கணவருடன் தனிக்குடித்தனம். ஃபெரோஸ் எழுதி சம்பாதித்த குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்துகின்றனர்.

உடல் நலக்குறைவு, கையில் பணம் இல்லாத சூழல் பிறந்த வீட்டை அடிக்கடி நாட வைக்கிறது. இந்திராவின் உடல்நிலை குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கையையும் மீறி மூன்று முறை கருத்தரிக்கிறார். குழந்தை மீது இருக்கும் பாசமா, அல்லது கணவரின் ஆசையை நிறைவேற்றவா என்று தெரியவில்லை, உயிரைத் துச்சமாக நினைத்து இந்திரா செயல்பட்டிருக்கிறார். மகளின் சங்கடத்தைப் போக்கும் விதத்தில் நேரு ஃபெரோஸ்க்கு ஒரு பத்திரிகையில் நிர்வாக இயக்குனர் பொறுப்பு அளித்து சம்பளமும் தருகிறார். இந்திரா கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

படித்தவர், விஷயமறிந்தவராக இருந்தாலும் ஃபெரோஸும் சராசரி ஆண் என்பதை நிரூபிக்கிறார். சின்ன சின்ன விஷயத்திலும் தன்னை ஒதுக்குகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறார். இருவருக்கும் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்திராவோ திருமணம், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல் என பல விஷயங்களிலும் பாரபட்சமின்றி நடந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக வசிக்கும்போது ஃபெரோஸ் ஏற்கனவே இருந்த புகைப்பிடித்தல், குடிபழக்கங்களுடன் பல பெண்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறார். விஷயம் தெரிந்து நேரு எல்லாவற்றையும் விட்டுவிடுமாறு கேட்கிறார். கோபம் கொண்ட ஃபெரோஸ் பழக்கத்தை விடமுடியாது. இந்திராவை டைவர்ஸ் செய்கிறேன் என்கிறார். அவருடன் தொடர்பு வைத்திருந்த பெண்கள் பிரிந்து சென்ற பின்னர் இந்திரா மீண்டும் ஃபெரோஸுடன் இணைந்து குடும்பம் நடத்துகிறார்.கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை எந்தப் பெண்ணுமே பொறுத்துக்கொள்ளமாட்டாள். இதுபோல் இருமுறை நடந்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாமனார், மனைவி மேல் இருந்த கோபத்தால் ஃபெரோஸ் வெளிப்படையாகப் பல விஷயங்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார். தனித்தனியாக வசிக்கின்றனர்.நடுநடுவே சேர்ந்து விடுமுறையைக் கழிக்கின்றனர். இந்திரா கட்சியில் பிஸியாகிவிடுகிறார். காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கிறது. மூத்த தலைவர்களுக்கு அப்பதவியைக் கொடுக்கலாம் என்று ஃபெரோஸ் எதிர்ப்புக்காட்டவில்லை. தன்னைவிட்டு, தன் மனைவிக்கு அப்பதவி கிடைத்ததில் ஆத்திரம். தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் போகிறார். இரண்டு, மூன்று விஷயங்கள் செய்கிறார். அதுவும் தன் குடும்பத்தை எதிர்த்து. இதற்கான காரணம் கூட தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளுக்காகத்தான் என்று புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அப்படியும் இரு முறை ஃபெரோஸ்க்கு மாரடைப்பு வந்தபோது இந்திரா அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார். இந்திராவுக்கும் உடல்நிலை சரியில்லாதபோது அவரும் கவனித்துக்கொள்கிறார்.

ஃபெரோஸ் பொதுவுடைமை கருத்துகளில் ஆழமான அபிமானம் கொண்டவர் என்றால் அவர் ஏன் இடது சாரி இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை?

சுதந்தரத்துக்குப் பிறகு இடதுசாரிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு, விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டபோது அவர் ஏன் எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை?

எவ்வளவு திறமை, துணிவு, புத்தி இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவியானால் தன் சுயத்தைத் தொலைத்துதான் வாழவேண்டும். அப்போதுதான் நல்ல மனைவி. பெண்களுக்குத் திறமை என்பது கல்யாணத்துக்கு முன்பாக இருக்கலாம். எவ்வளவு திறமை இருந்தாலும் அதை கணவனுக்கு முன்பாகக் காட்டக்கூடாது. அவளுக்கு நாடாளும் தகுதி இருந்தாலும் சமையல்கட்டில் சமாதி ஆகிவிடவேண்டும். ஃபெரோஸ்க்கு ஒரு நல்ல மனைவிதான் வேண்டும் என்றால் இந்தியாவில் பெண்களா இல்லை?

வணக்கம்

வணக்கம்

விரைவில் சந்திப்போம்

தமிழ் சுஜாதா